standardised

பா. கேசவன்

From Tamil Wiki
Revision as of 06:42, 2 June 2022 by Manobharathi (talk | contribs)
பா. கேசவன்

பா கேவசன் ( 1936, - ஜூலை 16 ,2021) மூத்த தமிழாசிரியர், தமிழற சமூக ஆர்வலர். ‘சிங்கப்பூர் சித்தார்த்தன்’ என்ற புனைபெயரில் கட்டுரைகளையும் இலக்கண விளக்கமும் எழுதி வந்த இவர், சிங்கப்பூர் தமிழ் மொழி, இலக்கிய வட்டத்தில் மொழி வல்லுநராகப் போற்றப்பட்டார்.

தனி வாழ்க்கை

கேசவன் 1936-ஆம் ஆண்டு ரே.பார்த்தசாரதி-உதயம் அம்மை இணையருக்கு சிங்கப்பூரில் பிறந்தார்., இரண்டாம் உலகப்போர் காரணமாகத் தமிழ்நாட்டில் சொந்த ஊரான தஞ்சைமாவட்டம் மன்னார்குடி வட்டம் கடுக்காகாடுக்குச் சென்று கல்வி பயின்றார். 1952-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் குடியேறினார். மனைவி சாந்தகுமாரி. பிள்ளைகள் கோமதி, சியாமா சுந்தர். மூன்று பேரப்பிள்ளைகள்.

தொழில்

படிப்பை முடித்த கேசவன், வாசுகி தொடக்கப் பள்ளியில் தம் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். தொடர்ந்து உயர்நிலைப் பள்ளி, தொடக்கக்கல்லூரிகளில் தமிழாசிரியராக இருந்தார். பின்னர் தமிழ்ப் பள்ளி, தமிழ்க் கல்விப் பிரிவுக்குக் கண்காணிப்பு அதிகாரியாகவும் பணியாற்றினார். சிங்கப்பூர் பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகத்திலும் அறநெறிக் கல்வித்திட்டக் குழுவிலும் கல்வி தொழில்நுட்பப்பிரிவிலும் பணியாற்றிய அவர், கல்வி மேம்பாட்டு அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார். சிங்கப்பூர்க் கல்வி அமைச்சின் தமிழ்மொழி, இலக்கிய பாடத்திட்ட குழுவின் செயலாளராகவும் தமிழ்க்கல்வி தொடர்பான மற்றும் பல குழுக்களிலும் உறுப்பினராகவும் பணியாற்றினார். ஓய்வுபெற்றபின் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம், தேசியக் கல்விக்கழகம் ஆகியவற்றில் தமிழாசிரியராகவும் விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார்.

இலக்கிய வாழ்க்கை

1970, 1980-களில் தமிழ் வானொலியில் படைத்த ‘எளிய தமிழ்’ நிகழ்ச்சி வழி தமிழ் மொழியையும் இலக்கணத்தையும் எளிமையாக்கிப் படைத்தார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், தமிழர் பேரவை, கவிமாலை அமைப்பு ஆகியவற்றின் தலைவராகவும், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் செயலாளராகவும் பணியாற்றினார். நிருத்தியாலயா கவின்கலைக்கழகத்தின் துணைத்தலைவராகவும், பாஸ்கர் கலைக்கழகத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். பாஸ்கர் கலைக்கழகத்துக்காக ‘புயலுக்குப்பின்’, ’குலுக்கு மாமி' ஆகிய நாடங்களை எழுதியுள்ளார்.தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் 1965-ல் வெளியிட்ட போராட்டம் என்னும் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

இலக்கிய இடம்

தமிழ்ப்பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி "சிங்கப்பூர் சித்தார்த்தன் தமிழை ஓதியும் உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான் அந்நெறி நின்றும் வாழ்பவர் . சிங்கப்பூர் சித்தார்த்தன் சிந்தனைச்செல்வர்” எனப் பாராட்டியிருக்கிறார்.

விருதுகள்

2006-ல் கவிமாலை அமைப்பின் இலக்கியக் கணையாழி விருது வழங்கப்பட்டது.

தமிழ் முரசு, கல்வி அமைச்சு, தமிழாசிரியர் சங்கம் ஆகியவை இணைந்து வழங்கும் நல்லாசிரியர் விருது நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது 2012-ல் முதன்முதலில் இவருக்கு வழங்கப்பட்டது.

நூல்கள்

இலகு தமிழில் சிங்கப்பூர் சித்தார்த்தன்.jpg.jpg

2003-ஆம் ஆண்டு வெளிவந்த ‘இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம்’ நூல் 2005-ல் தமிழக அரசின் ‘சிறந்த இலக்கண நூல்’ விருதைப் பெற்றது. இவ்விருதைப் பெற்ற முதல் நூல் இது. 2006-ஆம் ஆண்டில் அனந்தாச்சாரி அறக்கட்டளை விருதையும் இந்நூல் பெற்றது.

மற்ற நூல்கள்
  • தமிழ் வாழும் (2000)
  • நமது இலக்கு என்ன? அதை அடைவது எப்படி (2007)
  • 2008- தமிழ் நலம் தமிழர்க்கு ஆக்கம் (2008)
  • மெய்ப்பொருள் காண்போம்! மேனிலை அடைவோம்! (2014)

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.