under review

செல்வேந்திரன்

From Tamil Wiki
Revision as of 16:26, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)

To read the article in English: Selventhiran. ‎

செல்வேந்திரன்

செல்வேந்திரன் (பிறப்பு: ஆகஸ்ட் 22, 1982) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர். இதழியலாளராக பணிபுரிந்தவர் தற்போது ஊடக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.

பிறப்பு, கல்வி

செல்வேந்திரன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கதிரேசன், மெர்ஸிபாப்பா இணையருக்கு கடைசி மகனாக ஆகஸ்ட் 22, 1982-ல் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்கள், இரண்டு அக்காக்கள். சாத்தான்குளம் தூயஇருதய ஆண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். குடும்பச் சூழல் காரணமாக அப்பாவின் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொடர்கல்வி திட்டத்தில் அரசியல்-அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

செல்வேந்திரன் நவம்பர் 18, 2010-ல் திருக்குறளரசியை மணந்தார். மகள்கள் இளவெயினி, இளம்பிறை. செல்வேந்திரன் 2004-2008வரை ஆனந்த விகடனின் சர்குலேஷன் பிரிவிலும், 2009-2020வரை தி ஹிந்து(ஆங்கில நாளிதழ்) விற்பனை மற்றும் விநியோகப் பிரிவில் பணியாற்றினார். அர்த்தமண்டபம் என்ற நிறுவனத்தின் மூலம் இலக்கியம், வணிகம், சினிமா மற்றும் பிற துறைகளில் சாதித்தவர்களுக்கு தன்வரலாற்று நூல்கள் வெளிவர உதவியுள்ளார். அரசியல் கட்சிகளுக்கு அரசியல் வியூக ஆலோசகராக செயல்படுகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களுக்கு திரைக்கதைகள், வசனங்கள் எழுதி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

செல்வேந்திரன் இளமை காலத்தில் "செம்புலம்" எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தினார். ஆனந்த விகடன், தி ஹிந்து தமிழ் ஆகியவற்றில் அரசியல், சமூகம், இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை எழுதினார். ஆனந்தவிகடனில் வெளியான இவரின் முடியலத்துவம் கவிதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வந்தது. 2020-ல் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதற்கான பதின்பருவ வழிகாட்டி நூலான ”வாசிப்பது எப்படி” என்ற நூலை எழுதினார். 2020-ல் எழுத்தாளர் ஜெயமோகன், நண்பர்களுடன் ராஜஸ்தான் ஜெய்பூரிலிருந்து குஜராத் கட்ச் வரையான பயணத்தைப் பற்றிய பாலை நிலப்பயணம் என்ற பயணக்கட்டுரை நூலை எழுதினார். வாசிப்பு, இலக்கியம் மற்றும் விற்பனை குறித்த பல உரைகளை ஆற்றி வரும் தொழில்முறை பேச்சாளர். இவரின் உரைகள் ஜெயமோகன் தளத்தில் கட்டுரைகளாக வெளிவந்தன. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பின் தொடக்க காலத்திலிருந்து ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். ப சிங்காரம், அ. முத்துலிங்கம், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், அசோகமித்திரன், சுஜாதா, சிவராமகாரந்த் ஆகியோரைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் குறிப்பிடுகிறார்.

ஆவணப்படம்

  • வண்ணதாசனுக்காக "நதியின் பாடல்" எனும் ஆவணப்படத்தை இயக்கினார்.

இலக்கிய இடம்

மெல்லிய கேலியும் பகடியும்கொண்ட நடையில் பயணக்கட்டுரைகள், தன்முன்னேற்றக் கட்டுரைகள் மற்றும் சமூக ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவருபவர்.

நூல்பட்டியல்

  • முடியலத்துவம் (கவிதைத் தொகுப்பு)
  • வாசிப்பது எப்படி (2020)
  • பாலை நிலப்பயணம் (2020)
  • நகுமோ லே பயலே (2020)
  • உறைப்புளி (2020)
  • பெரும்வெற்றுக் காலம் (2022)
  • மேடைப் பேச்சின் பொன்விதிகள்! (2023)
தொகுப்பாசிரியர்
  • மய்யம் (தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்)
மொழிபெயர்க்கப்பட்டவை
  • How to Read - 'வாசிப்பது எப்படி' நூலின் ஆங்கில மொழியாக்கம்

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:17 IST