இராசப்ப முதலியார்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த இராசப்ப முதலியார் தமிழ்ப்புலவர். கர்னாடக இசைப் பாடல்கள் இயற்றியவர்.
இசைப்பணி
தமிழ்ப்புலவராகிய இராசப்ப முதலியார் முருகன் மீது பல பஜனைக் கீர்த்தனங்கள் எழுதியவர். இவரது கீர்த்தனைகள் பஜனைக்குரிய எளிய சொற்களில் எதுகை மோனையோடு எழுதப்பட்டவை.
எடுத்துக்காட்டு
மயிலை சிங்காரவேலர் மீது இவர் பாடிய கீர்த்தனை:
- ராகம்: பைரவி
- தாளம்: ஆதி
- பல்லவி:
மயிலைச் சிங்கார வேலா - தெய்வானைவல்லி வள்ளி நாயகி லோலா
- அனுபல்லவி:
கயிலைப் பரன் கபாலி கற்பக வல்லி சூலி
கனிவா யெடுத்தணைக்குங் கனிவாய் முத்தங் கொடுக்குங்
கந்தா மதலை சுகந்தந்தாய் எனவே கொஞ்சும்
மைந்தா மயில் மீதேறி வந்தா தரித்தல் என்றோ (மயிலை)
இவர் இயற்றிய பதங்களில் ஒன்று:
- ராகம்: சுருட்டி
- தாளம்: ஆதி
- பல்லவி:
தேடியழைத்தோடி வாடி - போடி சேடி
- அனுபல்லவி
நீடுபுகழ்வேளூர் - நாடு முத்தையனைத் (தேடி)
- சரணம்
கோடி கொடுத்தாலும் தேடி வராதவன்
வீடேறி வந்தழைத் தானடியே - யான்
மோடி செய்தேனடி போடியென் றோடினான் (தேடி)
நூல்கள்
- ஸ்ரீமுத்தையன் பஜனைக் கீர்த்தனம் - 39 கீர்த்தனைகள், 3 பதங்கள், 18 பலவகைப் பாடல்கள் (கட்டியம், ஊசல், எச்சரிக்கை, லாலி, பள்ளியெழுச்சி) - 1903-ல் அச்சானது. வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமார சுவாமி, தெய்வானை, வள்ளி மீதான பாடல்கள் அடங்கியது இத்தொகுதி.
- மயிலைக் கபாலீசர் பஜனைக் கீர்த்தனம் - 16 கீர்த்தனைகள் - 1903-ல் அச்சானது.
- சுந்தரேசர் கீர்த்தனம் - 7 கீர்த்தனைகள் -1910-ல் அச்சானது.
உசாத்துணை
✅Finalised Page