அரிட்டாபட்டி மலை (எண்பெருங்குன்றம்)
அரிட்டாபட்டி மலை மதுரையைச் சுற்றி அமைந்த எண்பெருங்குன்றம் என்னும் எட்டு சமண மலைப்பள்ளிகளுள் ஒன்று. இந்த குன்று ஆனைமலைக்கு வடக்கே திருச்சி நெடுஞ்சாலையில் நரசிங்கம்பட்டிக்கு வடமேற்கே அமைந்துள்ளது. மதுரையில் இருந்து வடக்கே பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனைக் கழஞ்சிமலை என்று அழைக்கின்றனர்.
அரிட்டாபட்டி மலை
அரிட்டாபட்டி மலையின் பழம்பெயர் ”திருப்பிணையன்மலை”. இங்குள்ள கற்படுகைகள் மண்மூடிவிட்டன.
கல்வெட்டுச் சான்றுகள்
இம்மலையின் கீழ்ப்புறமுள்ள இயற்கையான குகைத்தளத்தில் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றது. “நெல்வேலி சழிவன் அதினன் வெளியன்” என்பவன் இப்பள்ளியை உருவாக்கியதாக அந்த கல்வெட்டுக் கூறுகிறது.
சிற்பச் சான்றுகள்
குகைத்தளத்தின் வெளிப்புறம் முக்குடைக்குக் கீழே அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்த தீர்த்தங்கரின் உருவம் ஒன்று பாறையின் புடைப்புச் சிற்பமாக உள்ளது. இதனை கி.பி. பத்தாம் நூற்றாண்டில் அச்சணந்தி என்ற முனிவர் செய்துள்ளார். திருப்பிணையன்மலையில் இருந்த பொற்கோட்டுக்கரணத்தார் பெயரால் செய்யப்பட்ட இத்திருமேனிக்குப் பாதிரிக்குடி ஊரவையினர் காவலாக இருந்துள்ளதை அதனடியில் பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இத்தீர்த்தங்கரின் உருவம் வண்ணம் தீட்டப்பட்டு அழியாது காணக்கிடைக்கிறது
உசாத்துணை
- எண்பெருங்குன்றங்கள் - முனைவர். வெ. வேதாசலம்
காணொளி
வெளி இணைப்புகள்
✅Finalised Page