சீதக்காதி நொண்டிநாடகம்
சீதக்காதி நொண்டிநாடகம் சீதக்காதி வள்ளலைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட நொண்டிநாடகம் என்னும் சிற்றிலக்கியம்.
ஆசிரியர்
சீதக்காதி நொண்டி நாடகத்தை எழுதியவர் பெயர் அறியவரவில்லை. எனினும் இவர் இஸ்லாமியர் என்றும் புதியதாக இஸ்லாமிய மார்க்கத்தை எற்றவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கதைச்சுருக்கம்
முகலாயப் பேரரசர் ஔரங்கசேபின் உத்தரவுப் படி துல்பகார்கான், இஸ்மாயீல்கான் என்னும் இரு படைத்தலைவர்களின்கீழ் முகலாயச்சேனை இராமராயர் ஆண்டுவந்த செஞ்சிக்கோட்டையை முற்றுகையிட்டது. செஞ்சிக்கோட்டையின் முற்றுகை எட்டு ஆண்டுவரையில் (1689-1697) நீடித்ததால், தென்னிந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான சம்பவமாயிற்று. தென்னாட்டில் முதன்முதல் முகலாயர்கள் பெரும்படையுடன் வந்து தங்கி ஒருகோட்டையை நீண்ட காலம் முற்றுகையிட்டது இதுவே முதல் முறை. இதன்மூலம் முகலாயர்களின் பழக்க வழக்கங்களை மக்கள் அறிந்து கொண்டனர்.
அக்காலத்திய வரலாற்றுக் குறிப்புகள் இந்த நூலில் கிடைக்கின்றன.
நூல் அமைப்பு
செஞ்சிக்கோட்டை முற்றுகை வரலாற்றுடன் சேர்த்து அமைக்கப்பட்டுள்ள நொண்டிநாடகம், சீதக்காதியைப் பற்றியது. இதில் சீதக்காதியின் புகழை நொண்டி பாடுகிறான்.
நான் அழகர் மலைக் கள்வன். என் பெயர் ஒடுங்காப்புலி என்பது. என் தந்தை, ‘கல்லாவிற் பால் கறப்போன்’. அவன்பெயர் வணங்காப்புலி என்பது. நான் குலவித்தைகள் பலவற்றையும் வகையாய்த் தெரிந்தபின்பு, சொக்கரைச் சேவிக்க மதுரை சென்றேன். அங்கு ஒரு கணிகையிடம் தன் பொருள்யெல்லாம் பறிகொடுத்தேன். அவள் ‘சின்னச் சிறை’ வேண்டுமெனக் கேட்டதால் திருவரங்கம் சென்று மற்றொரு கள்ளனுடன் சேர்ந்து ஒரு தாசிவீட்டில் நுழைந்து நகைகளைத் திருடினான். அச்சமயம், முகலாயப் பேரரசர் அவ்ரங்ஸேபின் உத்தரவுப் படி துல்பகார்கான், இஸ்மாயீல்கான் இருவரின் கீழ் முகலாயச்சேனை கோட்டையை முற்றுகையிட்டது. வேலூரும் வந்தவாசியும் கைப்பற்றப்பட்டன. மராட்டியசேனையும் புறமுதுகிட்டது. முகலாயப் படை செஞ்சிக் கோட்டையைச் சுற்றி வளைத்தது. மக்கள் பயந்து வீடுவாசல்களை விட்டு காடுகளில் ஒளிந்தார்கள். எங்கும் அச்சம் நிறைந்திருந்தது. ஊர்களெல்லாம் பாழாயின.
நொண்டி ஒரு குதிரையைத் தேடுவதற்காக துல்பகார்கான்பாளையத்துக்கு ஒரு பிச்சைக்காரனைப் போல வேடம் தரித்துக் கொண்டு சென்றான். அமாவாசையன்று இருட்டில் ஒரு குதிரையைத் திருடி பிடிபட்டான். சுந்தர மகராயன் துரை என்பவரால் மாறுகால் மாறுகை வாங்கப்படவேண்டுமென தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஒரு கையும், காலும் இழந்தவனைக் கண்டு இரங்கிய விசயரகுநாதப் பெரியதம்பியின் இளைய சகோதரர் ‘மந்தரத்திண்புயத்தான் கன துரை மாமு நயினார்ப் பிள்ளை சிகிச்சைக்கு பண உதவி செய்து சுகமடைந்தபின் கீழக்கரைக்கு வருமாரு அழைத்தார். குணமடைந்த நொண்டி கீழக்கரைக்குச் சென்றது நயினார்ப்பிள்லையால் சீதக்காதியிடம் அழைத்துச் செல்லப்பட்டான். சீதக்காதி அவனுக்குப் பொருள் உதவி செய்து, இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றச் சொல்லி, ஹஜ் யாத்திரை செய்யப் பணித்தார். நொண்டி ஹஜ் யாத்திரை செய்து அல்லாவைத் துதிக்க, அவனது துண்டிக்கப்பட்ட கையும், காலும் மீண்டும் வளர்ந்தன.
.
சீதக்காதி நொண்டிநாடகத்தில் பூபாளம், நாதநாமக்கிரியை, மோகனம் என்னும் மூன்று ராகங்கள் காணப்படுகின்றன. பாட்டுக்கள் ஆதி தாளத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந் நாடகத்தின் நூற்றுஎண்பத்தாறாவது கண்ணியில் தம்புரா, மத்தளம் முதலிய இசைக்கருவிகள் கூறப்பட்டிருக்கின்றன.
பாடல் நடை
மாறுகால் மாறுகை வாங்குதல்
கோட்டைக்கப்புற நடத்தி யவரவர்
குழுவுங்கடைத் தெருவும் வழியும்விட்டுப்
பேட்டைத்தெருவிலிருத் தியம் பட்டப்
பிரமனை யழைப்பித்தா ரரண்மனை யார்
கருவி பிரமனெடுத் துக் கூர்மையைக்
காட்டிக்கைச் சாணையிற் றீட்டிக் கொண்டு
வரையுங் குறியுங் குறித்தே சுறுக்கினில்
வலக்காலு மிடக்கையும் வாங்கினானே
கீழக்கரையில் சீதக்காதி கொலுவிருத்தல்
வரிசைச்செய்யிது நயினான் சிருஷ்டித்த
வாலமன்மதனொரு பாலிருக்க
அரசர்க டொழுசரணன் குட்டி
யாலிப் பிள்ளையொரு பாலிருக்க
....
சங்கநிதி பத்மநிதிபோல் நிதிவாரிச்
சடையாமலிருகையுங் கொடைகொடுக்க
இங்கித சௌந்தரிய மின்னார் ஆலாத்தி
யேந்தி யிருபுறமுஞ் சேர்ந்து நிற்க
...
நிறைந்த கலைமதி வந்தே சமுகத்தில்
நின்றதென்ன வெள்ளை வட்டமொன்று நிழற்றச்
சிறந்த சிங்காசனத் தில் செய்தக்காதி
சிலைமதனைப் போலக் கொலுவிருந்தான்
...
விஞ்சையற் கனுகூ லன் காயலில்
விசயரகுநாதப் பெரியதம்பிக்
கஞ்சமலர்ப்பாதத் தைக் கண்ணாரக்
கண்டுகளி கூர்ந்து நான் தெண்டனிட்டேன்
சீதக்காதி நொண்டியை ஹஜ் செய்யப் பணித்தல்
படித்துப் *பறலு சுன்னத்து* நவிலுடன்*
*பாத்திகாவோதிசல வாத்த *றிந்து
முடித்துக் கலா* தொழு தே னிவனல்ல
முசிலிமெனச் சொன்னா ரிசுலாமானோர்
தொழுகையு நோன்பையு மே* சக்காத்தையு*ந்
தொகுத்தபடி முடித்து நடத்திடென் றார்
பழுதறு கஜ்ஜு செயவே போவென்றார்
பக்கத்திலிருந்தோர்கள் மக்கமதற்கு
உசாத்துணை
வள்ளல் செய்தக்காதி நொண்டி நாடகம், தமிழ் இணைய கல்விக் கழகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.