பிரெண்டா பெக்
பிரெண்டா பெக் ( Dr. Brenda E.F. Beck ) (1940),கனடாநாட்டு மானுடவியலாளர். தமிழ்நாட்டில் கொங்கு வட்டார நாட்டார் பண்பாட்டை ஆய்வுசெய்தவர். அண்ணன்மார் சாமி கதை என்னும் நாட்டார் காவியத்தை முழுமையாக பதிவுசெய்து ஆய்வுக்குறிப்புகளுடன் பதிப்பித்தவர். எட்டு நூல்களும் அறுபதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளும் எழுதி தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படைகளை உலக அளவில் அறிமுகம் செய்தவர். கனடாவில் தமிழ் பண்பாட்டுச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுபவர்.
பிறப்பு, கல்வி
பிரெண்டா கனடாவில் 1940ல் பிறந்தார். அவருக்கு 14 வயதிருக்கையில் லெபனான் நாட்டில் பெய்ரூட் நகரில் பணியாற்றிய அவருடைய தந்தை குடும்பத்துடன் சிரியா, லெபனான், துருக்கி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் , இந்தியா ஆகிய நாடுகளுக்கு பயணமாக அழைத்துச்சென்றார். . திருச்சியில் இருந்து கோயம்புத்தூருக்கு செய்த ஒரு பயணம் தமிழ்ப்பண்பாட்டுடன் அவருடைய முதல் அறிமுகம். 1964ல் பிரெண்டா ஆக்ஸ்ஃபோர்ட் சாமர்வெல் கல்லூரி (Somerville College, Oxford)யில் மானுடவியலில் முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்தார். கோவை அருகே ஓலப்பாயம் என்னும் ஊரில் தங்கி தமிழ் பயின்றார். தமிழ்ப்பெண்கள் போல நகைகளும் புடவையும் அணிந்து தமிழ் கிராமத்தின் ஓர் உறுப்பினராகவே ஆனார்.
அண்ணன்மார் சுவாமி கதை
பிரெண்டா 1965ல் கிராமத்துப் பாடகர்கள் அண்ணன்மார் சுவாமி கதையை பாடுவதை கேட்டார்.பொன்னர் -சங்கர் கதை என இன்று அறியப்படும் அந்த நாட்டார்க்காவியம் அப்போது பலர் சேர்ந்து பலநாட்கள் தொடர்ச்சியாக பாடுவதாக இருந்தது. பொது பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கருதப்படும் அண்ணன்மார் சுவாமி கதை பாட்டு, நடனம், கூத்து என பலவடிவங்களில் கொங்கு கிராமங்களில் அவர்களின் குலக்கதையாக ஓர் இதிகாச தகுதியுடன் புழங்கியது
பிரெண்டா அண்ணன்மார் சுவாமி கதையை ஒலிப்பதிவு செய்தார். 18 இரவுகளிலாக மொத்தம் 38 மணிநேரம் இந்த ஒலிப்பதிவு நீடித்தது. பிரெண்டா இருபதாயிரம் பக்கங்கள் அளவுக்கு நாட்டார் கதைகளை கொங்கு வட்டாரத்தில் இருந்து சேகரித்தார்.