first review completed

நான்காம் தமிழ்ச்சங்கம்

From Tamil Wiki
Revision as of 01:05, 2 May 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reverted edits by Tambot1 (talk) to last revision by Logamadevi)
மதுரைத் தமிழ்ச்சங்கம்

நான்காம் தமிழ்ச்சங்கம் (மதுரைத் தமிழ்ச் சங்கம்) (1901) தமிழ்நூல்களை பதிப்பித்தல், தமிழ்க்கல்வி ஆகிய செயல்பாடுகளுக்காக பாண்டித்துரைத் தேவர் தலைமையில் உருவாக்கப்பட்ட அமைப்பு.

வரலாறு

தமிழறிஞரும் இலக்கிய புரவலருமான பாண்டித்துரைத் தேவர் 1901-ஆம் ஆண்டு சென்னையில் கூடிய மாகாண அரசியல் மாநாட்டில் தமிழ்ச்சுவடிகளை காக்கவும், நூல்களை அச்சிடவும் ஓர் அமைப்பை உருவாக்கவேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்தார். அந்த மாநாட்டில் நான்காம் தமிழ்ச் சங்கம் ஒன்றை மதுரையில் நிறுவுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1901-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. தொடக்க விழாவிற்கு மன்னர் பாஸ்கர சேதுபதியவர்கள் வந்திருந்தார். உ.வே. சாமிநாதையர், சடகோப ராமாநுஜாச்சாரியார், ரா.ராகவ ஐயங்கார், மு.இராகவையங்கார், பரிதிமாற் கலைஞர்,மு சண்முகம் பிள்ளை போன்றவர்கள் விழாவிற்கு வந்திருந்தனர்.

மதுரை தமிழ்ச்சங்கம்

சங்கத் தொடக்க நாளில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

  1. தமிழ்க் கல்லூரி உண்டாக்குதல்.
  2. தமிழ் ஏடுகளை அச்சிட்டு பயன்படுமாறு தொகுப்பது.
  3. வெளிவராத அரியநூல்களை அச்சிட்டுப் பரப்புதல்.
  4. வடமொழி ஆங்கில நூல்களை தமிழில் மொழி பெயர்த்தல்
  5. தமிழ்க் கல்வி பற்றிய செந்தமிழ் இதழ் வெளியிடுதல்.
  6. தமிழில் தேர்வு நடத்தி பட்டமும் பரிசும் வழங்குதல்.
  7. தமிழ் அறிஞர்களைக் கொண்டு பேருரையாற்றச் செய்தல்.
  8. தமிழில் திறமிக்க பெருமக்களை ஒன்று கூட்டி தமிழாராய்தல்.
  9. வேண்டத்தக்க புது நூல்களும் புத்துரைகளும் படைத்து அவற்றை அரங்கேற்றுதல்

பாண்டித்துரைத் தேவர் சங்கத்தின் தலைவர். தமிழ் சங்கத்தின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை அவர் நண்பர் நாராயணையங்கார் வகித்தார்.

மலர்

துணை அமைப்புகள்

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் ஏழு துணை அமைப்புகளை நிறுவியது

  1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை (கல்லூரி)
  2. பாண்டியன் புத்தகச்சாலை (நூல்நிலையம்)
  3. தமிழ்ச் சங்க முத்திராசாலை (நூல், பத்திரிகை வெளியிடுவதற்கான அச்சகம்)
  4. கல்விக் கழகம் (வித்துவான் கூட்டம்)
  5. தமிழில் தேர்வுகள் நடத்தும் புலவர் கழகம்
  6. நூலாராய்ச்சிச் சாலை
  7. செந்தமிழ் இதழ்

பணிகள்

நான்காம் தமிழ்ச்சங்கம் ஏறத்தாழ முப்பதாண்டுகள் தீவிரமாகச் செயல்பட்டது. அதன் முதன்மைப்பணியாக விளங்கியது செந்தமிழ் இலக்கிய ஆய்விதழின் வெளியீடு. அதில்தான் தமிழாய்வின் பல களங்கள் முதன்முதலாக தொடங்கப்பட்டன. இலக்கியப் படைப்புகளின் கால ஆராய்ச்சி, பாடபேத ஆராய்ச்சி ஆகியவை நிகழ்ந்தன. நூல்பதிப்பு, கல்வெட்டு மற்றும் சாசனங்களை ஒப்பிட்டு ஆராய்வது முதலியவற்றுக்கான நெறிகள் உருவாகி வந்தன. பாண்டியன் புத்தகசாலை அரிய நூல்களை ஏடுகளில் இருந்து சேகரித்து தொகுத்து அட்டவணையிட்டது. மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் புலவர்தேர்வு தமிழாசிரியர்களை உருவாக்கியது

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.