64 சிவவடிவங்கள்: 44-தட்சயக்ஞஷத முர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று தட்சயக்ஞஷத முர்த்தி
வடிவம்
64 சிவ வடிவங்களில் நாற்பத்தி நான்காவது மூர்த்தம் தட்சயக்ஞஷத முர்த்தி. சிவபெருமான் தன்னை மதிக்காது ஆணவத்துடன் நிந்தனை செய்த தட்சனின் வேள்வியை அழிக்க எடுத்த மூர்த்தமே தட்சயக்ஞஷத மூர்த்தி.
தொன்மம்
தட்சன் தான் நடத்திய யாகத்தில் சிவபெருமானுக்கு அவிர்பாகம் கொடுக்காமல் நடத்த நினைத்தான். உடனே ததீசி முனிவர் அது முறையற்றது, சிவபெருமான் இன்றி யாகம் செய்தல் கூடாது என்று அறிவுறுத்தினார். ஆனால், தட்சன் அதனை ஏற்கவில்லை.
தட்சனின் வேள்வியில் அவிர்பாகம் பெறுவதற்காக பார்வதிதேவி உக்கிரமாகாளி, வீரபத்திரர் உடன் வந்திருந்தார். பார்வதி தேவி கேட்டும், அவர் சிவபெருமானின் மனைவி என்பதால் அவருக்குரிய அவிர்பாகம் மறுக்கப்பட்டது. தேவர்கள் அனைவரும் இதனைக் கண்டும் காணாமல் இருந்தனர். இதனால் பெருங்கோபம் கொண்ட வீரபத்திரர் தனது தண்டத்தால் திருமாலை அடிக்க அவர் வீழ்ந்தார். பின் பிரம்மா வீழ்ந்தார். வீரபத்திரர், சந்திரனைத் தன் காலடியில் தேய்த்தார். வீரபத்திரரின் பூதகணங்கள் தட்சன் இருப்பிடம், யாகசாலை, கோட்டை, மதில் என அனைத்தையும் அழித்தனர். இறுதியில் வீரபத்திரர் தட்சனின் தலையைக் கொய்தார்.
வீரபத்திரர் அனைத்து தேவர்களையும் துவம்சம் செய்தார். தேவ கணங்களை வதைத்தார். தேவர்களின் மனைவியர், இந்திராணி, தட்சனின் மனைவியர் என அனைவரையும் பார்வதி தேவியும், காளியும் துவம்சம் செய்தனர். அனைவரும் ஏதாவது ஒரு குறைபாட்டுடன் இருக்கும்படி வீரபத்திரர் செய்தார். போர் உச்சத்தை அடைந்ததும் சிவபெருமான் தோன்றி வீரபத்திரரை சாந்தப்படுத்தினார். பார்வதியின் உத்தரவிற்கேற்ப மாண்ட அனைவரும் உயிர்பெற்றனர். தட்சனையும் பிழைக்க வைக்கும்படி பிரம்மா வேண்ட, உடனே வீரபத்திரர் ஒரு ஆட்டுத்தலையை அவனுடலில் பொருத்தி அவனை உயிர்ப்பித்தார். அவன் பார்வதி - சிவபெருமான் தரிசனம் பெற்றுச் சிவகணங்களில் ஒன்றானான்.
சிவபெருமான் தன்னை வணங்காத தட்சனின் வேள்வியை அழிக்க எடுத்த மூர்த்தமே தட்சயக்ஞஷத மூர்த்தி
வழிபாடு
தரங்கம்பாடி - செம்பனார் கோயில் அருகே உள்ளத் தலம் திருப்பறியலூர். அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று. இங்குள்ள இறைவன் பெயர் வீரட்டேசர். இறைவி திருநாமம் இளம்கொம்பனையாள். கருவறை சுவறில் தக்ஷன் சிவனை ஆட்டுத்தலையுடன் வணங்கும் சிற்பம் உள்ளது. இங்குள்ள இறைவனை வில்வார்ச்சனை செய்து, பால் நைவேத்தியம் திங்கள், பிரதோஷம் அன்று அளித்து வழிபட பகைவர் தொல்லைத் தீரும். கோர்ட் வழக்கு சாதகமாகும். தம்பதியர் ஒற்றுமை ஓங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது..
உசாத்துணை
✅Finalised Page