நமது செட்டிநாடு (இதழ்)
- XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ
நமது செட்டிநாடு (2015) நகரத்தார்களின் சார்பில் வெளிவந்த மாத இதழ். எம்.ஏ.எம்.ஆர். முத்தையா அய்யப்பன் இவ்விதழைத் தொடங்கினார்.
வெளியீடு
நகரத்தார்களின் கலாச்சாரம், கல்வி, பொருளாதாரம் மற்றும் சமய அந்தஸ்தை மேம்படுத்துவதற்காக, எம்.ஏ.எம்.ஆர். முத்தையா அய்யப்பன் அவர்களால், மே 2015-ல் நமது செட்டிநாடு இதழ் தொடங்கப்பட்டது. அச்சிலும் இணையத்திலும் வரும் இவ்விதழின் ஆண்டுச் சந்தா தொடக்க காலத்தில் 240/- ஆக இருந்தது. தற்போது ஆண்டுச் சந்தா: ரூபாய் 300/- தனிப்பிரதி இதழின் விலை: ரூபாய் 25/- ஆசிரியர்: ந. ஆவுடையப்பன் பதிப்பாளர்: அண. வயிரவன். புதுவயல் செல்லப்பன், குழ.கதிரேசன், ஆறாவயல் ஆர்.எம். சண்முகம், முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி, விசாலாட்சி சுப்ரமணியம் ஆகியோர் இதழின் ஆசிரியர் குழுவில் செயல்பட்டனர்.
இதழின் நோக்கம்
நமது செட்டிநாடு இதழின் நோக்கம் குறித்து முதல் இதழில், “செட்டிநாட்டு நகரத்தார், பணி, கல்வி, வணிகம் தொடர்பாகப் பல்வேறு நாடுகளில் பரவி வாழ்ந்து வந்தாலும், அவர்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, ஈகைக் குணம், கல்விப்பணி, தொழில் என தொன்றுதொட்டு முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த நெறிமுறைகளில் இன்றும் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முனைப்பும் ஈடுபாடும் நம் சமூக இளைஞர்களிடம் வழிவழியாகத் தொடர வேண்டும் என்ற பேரவாவின் விளைவாக நமது செட்டிநாடு மாத இதழ் தொடங்கப்பட்டுள்ளது. நம் சமுதாய மக்கள், தொடர்ந்து முழு அர்ப்பணிப்போடு சமூக முன்னேற்றப் பணிகளில் ஈடுபடத் தூண்டுதலாக, ஆன்மிகம், சமய முன்னேற்றம், வரலாறு, கலை மற்றும் பண்பாடு, இலக்கியம், சமுதாயப் பணி, தொழில் வளர்ச்சி, கல்விப்பணி முதலியவை தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து நமது செட்டிநாடு வெளியிட்டு ஊக்கப்படுத்தும்.” என்ற குறிப்பு இடம்பெற்றது.
உள்ளடக்கம்
நகரத்தார் மக்கள் செய்த சாதனைகள், நகரத்தார்களின் கல்விப் பணிகள், இதழியல் பணிகள், பதிப்புப் பணிகள், திரைப்பட, நாடக வரலாற்றுத் துறையில் நகரத்தார் இன மக்கள் செய்த சாதனைகள், மருத்துவ சேவை, சமய சேவை, சமூக சேவை, தமிழ் இலக்கியச் சேவை செய்த நகரத்தார்கள் என நகரத்தார்களின் வாழ்க்கை குறித்த பல்வேறு செய்திகள் நமது செட்டிநாடு இதழில் இடம் பெற்றன.
நகரத்தார்களின் நேர்காணல்கள், கடல் கடந்து வாழும் நகரத்தார்களின் வாழ்வியல், நகரத்தார்களின் தொன்மையான பண்பாடு, வாழ்க்கை முறைகள் இதழில் ஆவணப்படுத்தப்பட்டன. நகரத்தார்கள் செய்த ஆலயப்பணிகள் குறித்த தகவல்கள் விரிவாக இடம் பெற்றன. கலை, இலக்கியம், அரசியல், சமூகம், தொழில் துறை எனப் பல்துறைச் சாதனையாளர்கள் பற்றிய செய்திகள் இதழ்தோறும் வெளியாகின.
புதுவயல் செல்லப்பன், குழ.கதிரேசன், எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி தொடங்கி, அரு. நாகப்பன், ரெ. முத்துகணேசன், ஞா. மாணிக்கவாசகன், சோம. வள்ளியப்பன், பழ. கைலாஷ் உள்ளிட்ட பலர் இவ்விதழுக்குப் பங்களித்தனர்.
மதிப்பீடு
நமது செட்டிநாடு இதழ் ’நகரத்தார்களின் கலைக்களஞ்சியம்’ என்று மதிப்பிடத்தக்க வகையில் பல்வேறு செய்திகளைத் தாங்கிவந்த இதழாக மதிப்பிடப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
10-Jun-2024, 09:54:46 IST