under review

பாபநாச முதலியார்

From Tamil Wiki
Revision as of 13:57, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)

பாபநாச முதலியார்(1650–1725) கும்பகோணத்தைச் சேர்ந்த புலவர். கும்பேசக் குறவஞ்சியை இயற்றினார். கர்நாடக இசையில் சில கீர்த்தனைகளையும் இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

பாபநாச முதலியார் கும்பகோணத்தில் 1650-ல் பிறந்தார். சிவபக்தர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். கும்பகோணம் வாணாதுறை வடக்கு வீதியில் திருவேங்கடம் பிள்ளை என்பவர் வசித்திருந்த வீடு இவர் வீடென்று சில பழைய பத்திரங்களால் தெரியவந்தது. இவர்காலத்தில் தஞ்சையில் மராட்டியர் ஆட்சி செய்தனர். ஏகோஜி என்ற மராட்டிய மன்னரை கும்பேசர் குறவஞ்சியில் (பாடல் 6, 43) பாடியதால் ஏகோஜி மன்னர் காலத்தில் இவர் வாழ்ந்ததாக அறிய வருகிறது.

இலக்கிய வாழ்க்கை

பாபநாச முதலியார் கும்பகோணத்தில் கோவில் கொண்ட கும்பேசரைப் பாட்டுடைதலைவனாகக் கொண்டு கும்பேசர் குறவஞ்சி இயற்றினார். கீர்த்தனைகளுடன் பல வகைப் பாக்கள் கலந்து எழுதப்பட்டது கும்பேசர் குறவஞ்சி. உ.வே. சாமிநாதையரிடம் இருந்த ஓலைச்சுவடிகளைக் கொண்டு அவரது மகன் கல்யாணசுந்தரையர் கும்பேசர் குறவஞ்சியை 1944-ல் பதிப்பித்தார்.

கீர்த்தனைகள்

பாபநாச முதலியார் தமிழில் பலகீர்த்தனங்ளைப் பாடினார். . தம் கீர்த்தனங்களில் இவர் பாபநாசம் என்ற முத்திரையைப் பாட்டின் பொருளோடு இசைந்து நிற்கும்படி அமைத்திருப்பர். (கும்பேசக் குறவஞ்சி-35, 49, 58,72,89,113 ) இடையிடையே கீர்த்தனங்களில் சில சரணங்கள் தெலுங்கு மொழியில் உள்ளன ( 12, 15,41). இவருடைய கீர்த்தனைகளைக் கனம் கிருஷ்ணையா, மதுரகவி, அனந்தபாரதி, கோபாலகிருஷ்ண பாரதியார் முதலிய சங்கீத சாகித்திய வித்துவான்கள் பாடினார்கள் என்று கும்பேசர் குறவஞ்சியின் முன்னுரையில் கல்யாணசுந்தரையர் குறிப்பிடுகிறார். இவர் இயற்றிய கீர்த்தனைகளில் கிடைத்தவை

  • நடமாடித் திரிந்த - காம்போதி - கண்ட சாபு
  • முகத்தைக் காட்டி - பைரவி - மிஸ்ர சாபு
  • பேரும் நல்ல த்யாகர் - பூர்வகல்யாணி - மிஸ்ர சாபு

உசாத்துணை

கும்பேசர் குறவஞ்சி-சைவம்.ஆர்க்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Sep-2023, 19:30:56 IST