under review

திருவம்மானை

From Tamil Wiki
Revision as of 01:03, 27 July 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)

திருவம்மானை திருவாசகத்தில் அமைந்துள்ள அம்மானை என்னும் சிற்றிலக்கியம். சிவபெருமானின் கோலத்தையும், இயல்புகளையும், எழுந்தருளும் தலங்களையும் பெண்கள் விளையாடும் அம்மானைப் பாடல்களில் பாடும் பதிகம்.

ஆசிரியர்

திருவம்மானையை இயற்றியவர் மாணிக்கவாசகர். திருவாசகத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. திருவண்ணாமலையில் இயற்றப்பட்டது.

நூல் அமைப்பு

அம்மானை என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைந்ததால் திரு அம்மானை எனப் பெயர் பெற்றது. ‘திரு’ என்பது அடைமொழி. ‘அம்மானை’ என்பது மகளிர் விளையாடல்களுள் ஒன்று. இது, மூன்று பெண்கள் கூடி மூன்று காய்களை வைத்துக்கொண்டு ஆடுவது. அவ்வாறு விளையாடுங்கால் பாடுவது போல அமைந்துள்ளது இப்பகுதி.

இறை அனுபவத்தினால் உண்டாகும் ஆனந்தம் திருவம்மானையில் பாடப்படுவதால் 'ஆனந்தக் களிப்பு' என்றும் அழைக்கப்பட்டது.

திருவம்மானை 20 தரவு கொச்சகக் கலிப்பாக்களால் ஆனது. சிவபெருமானின் அறக்கருணையும், மறக்கருணையும், விளையாடல்களும் கூறப்படுகின்றன. குதிரையின்மேல் எழுந்தருளி வந்து அடிகளுக்கும் பாண்டியனுக்கும் அருள் செய்த வரலாறு, தக்கன் யாகத்தை அழித்தது, திருமாலும், பிரம்மனும் அடிமுடி காணாதது போன்ற புராணக் குறிப்புகள் இடம்பெறுகின்றன.

அடிகளுக்கு ஊன் உயிர் உணர்வு ஆகியவற்றுள் கலந்து இனிக்கும் தன்மையும், கல்லைக் கனியாக்குவது போல் உள்லத்தைப் பக்குவப்படுத்தியதும், அரியவற்றிலும் அரிதான சிவனின் எளிவந்த தன்மையும் கூறப்படுகின்றன.

பாடல் நடை

கல்லைப் பிசந்து கனியாக்கி

கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
 வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
 கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
 வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
 தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும்
  ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 179

உள்ளிருக்கும் உள்ளானை

ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயான தத்துவத்தைத் தானே உலகேழும்
ஆயான ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jul-2024, 19:13:45 IST