மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
இவரது இயற்பெயர் பொருங்கண்ணன். பாண்டி நாட்டைச் சேர்ந்த கடற்கரையில் அமைந்த மருங்கூர்பட்டினத்தில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
இவர் சங்கத்தொகை நூலான அகநானூற்றில்(80) உள்ள நெய்தல் திணைப்பாடலொன்றைப் பாடினார். இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியதாக பாடல் அமைந்துள்ளது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- தந்தை கடலில் பிடித்துவந்த மீனைக் காயவைத்து அதனைக் கவர வரும் பறவைகளை ஓட்டிக்கொண்டு பகலில் தலைவனை நினைத்துக்கொண்டிக்கும் தலைமகள்.
- நெய்தல் திணையில் பூத்திருக்கும் அடும்புக்கொடி பற்றிய சித்திரம்.
பாடல் நடை
- அகநானூறு: 80
கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்
இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின்
வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப!
நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த
பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும்.
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின்
செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப,
இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ,
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன்
தண் நறும் பைந் தாது உறைக்கும்
புன்னைஅம் கானல், பகல் வந்தீமே.
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]
- தமிழ்ச்சுரங்கம்-அகநானூறு-80
✅Finalised Page