செல்வி
செல்வி (செல்வநிதி தியாகராசா, Chelvy Thiyagarajah) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், இதழாசிரியர், நாடக நடிகர், நாடக ஆசிரியர். பெண்ணியச் செயல்பாட்டாளர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். 1992-ல் சர்வதேச கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் கூட்டமைப்பான PEN அமைப்பின் கவிதைக்கான விருது பெற்றார்..
வாழ்க்கைக் குறிப்பு
செல்வநிதி தியாகராசா இலங்கையின் வட மாகாண நகரான வவுனியா அருகிலுள்ள சேமமடு கிராமத்தில் பிறந்தார். செல்வி என்ற பெயரில் அறியப்பட்டார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரங்கியல் மற்றும் நாடகத் துறையில் பயின்றார். அரசியல் செயற்பாட்டாளராகவும் இருந்தார். கவிஞர் சிவரமணியின் நெருங்கிய தோழி.
அமைப்புப் பணிகள்
- யாழ் பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ அவை, கலாச்சாரக் குழு மற்றும் இலக்கியவட்டத்தின் உறுப்பினராக இருந்தார்.
- 'பூரணி இல்லம்' என்ற பெண்கள் மையத்தின் உறுப்பினராக இருந்தார்.
இதழியல்
செல்வநிதி தியாகராசா 'தோழி' எனும் பெண் இலக்கிய இதழின் ஆசிரியர்.
நாடக வாழ்க்கை
செல்வி ஒரு நாடக நடிகையும் நெறியாளருமாவார். அவர் ‘சீதனம்’ மற்றும் ‘பாலியல் வன்முறைகள்’ என்ற இரு நாடகங்களை இயக்கியுள்ளார். புலிகளால் கடத்தப்படுவதற்கு முதல்நாள் 'Palestinian Intifada' என்ற நாடகத்தில் நடித்தார்.
இலக்கிய வாழ்க்கை
ஈழத்து பெண் கவிஞர்களின் கவிக்குரலாக வெளியிடப்பட்ட 'சொல்லாத சேதிகள்' என்ற தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்தன. செல்வியின் கவிதைகள் மனஓசை, 'மண்', 'அரங்கேற்றம்', 'ஓசை', 'நான்காவது பரிமாணம்', 'சரிநிகர்', 'திசை' போன்ற இதழ்களிலும் வெளிவந்தன. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புக்களிலும் இடம்பெற்றன. இரண்டு நாடகங்கள் எழுதியுள்ளார். கவிஞர் சிவரமணியின் கவிதைகளுடன் செல்வியின் கவிதைகளும் சேர்த்து செல்வி-சிவரமணி கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
இலக்கிய இடம்
”செல்வி தன் கவிதைகளுக்குள் அன்றைய வட இலங்கையின் அரசியல் சூழலைப் பதிவுசெய்தார். வெளிப்படையான கவிதைகள் எழுதினார். செல்வியின் கவிதையில் வரும் கிராமம் நினைவில் பசுமையுடன் இருக்கும் ரம்மியமான கிராமம். ஆனால் நிஜத்தில் சிதைந்துகொண்டிருக்கும் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தின் வரப்போரம் சிறு பறவையைப் போல் அமர்ந்து ஒட்டுமொத்த இலங்கைப் போராட்டத்தையும் சித்தரிக்க அவர் முயல்கிறார்.” என மண்குதிரை மதிப்பிட்டார்.
விருதுகள்
- கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் கூட்டமைப்பான Poets Essayists and Novelists (PEN) அமைப்பால் ‘Poetry International Award’ என்ற கவிதைக்கான சர்வதேச விருது வழங்கப்பட்டது.
மறைவு
செல்வநிதி தியாகராசா ஆகஸ்ட் 30, 1991-ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள அவரது வீட்டில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் கடத்தப்பட்டார். செல்வி கடத்தப்பட்ட பொழுது யாழ் பல்கலைக்கழகத்தில் அரங்கியல் மற்றும் நாடகத்துறையில் மூன்றாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தார். செல்வியின் விடுதலைக்காக பல சர்வதேச நாடுகள் குரல் கொடுத்தன. சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல மனித உரிமை நிறுவனங்களும் அவரது விடுதலையைக் கோரியிருந்தன. (இவர் பலத்த சித்திரவதைக்குப் பின் 1997-ல் கொல்லப்பட்டிருக்கலாம்). விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்.
நூல் பட்டியல்
கவிதைத் தொகுப்பு
உசாத்துணை
- ஆளுமை:செல்வநிதி தியாகராசா: noolaham
- PEN/Barbara Goldsmith: Freedom to Write Awards
- Report on Selvi death: University Teachers for Human Rights
- செல்வி: 10 ஆண்டுகள்- வீழ்வோமாயினும் வாழ்வோம்: isoslo
- பாதையற்ற நிலம் 11: நிலத்தில் விளைந்த கவிதைகள்: மண்குதிரை
- செல்வி – சில நினைவுகள்: மணியம்
✅Finalised Page