புருஷன்
புருஷன் (புருடன்) இயற்கையின் பிரக்ஞைநிலை. இயற்கையின் உள்ளுறைந்துள்ள தன்னிலை. பிரகிருதியின் மறுநிலையாக அமைபவன். பிரகிருதி என்னும் இயற்கையை அறிபவன். அதன் வழியாக இயற்கையில் குணங்களை உருவாக்குபவன். இயற்கையை இயக்கம் கொள்ளச் செய்பவன். சாங்கியதரிசனம் புருஷன் என்னும் கருத்துருவை உருவாக்கியது. வேதாந்தம் உட்பட பிற தரிசனங்கள் அதை விரிவாக்கம் செய்துகொண்டன.
சொற்பொருள்
தொன்மையான சம்ஸ்கிருத அகராதியான யாஸ்கரின் நிருக்தம் புருஷ என்னும் சொல்லை புரு என்னும் வேர் கொண்டதாக வரையறை செய்கிறது. புரு என்றால் இருப்பது. புர என்றால் இருக்கும் இடம். புருஷ என்னும் சொல்லுக்கு உறைவது, இருந்துகொண்டிருப்பது, இருப்பை உணர்வது என்று பொருள்.
தோற்றுவாய்
புருஷன் என்னும் உருவகத்தின் தோற்றுவாய் கற்காலத்தைய நீத்தோர் வழிபாடு, மூத்தோர் வழிபாடு, உடல் வழிபாடு போன்ற தொடக்கநிலையில் இருந்தே உருவாகி வருவது. புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்கால பாறைக்குடைவு ஓவியங்களில் மிகப்பெரிய மானுட உருவங்கள் வரையப்பட்டுள்ளன. படுத்திருப்பதுபோலவோ நிற்பதுபோலவோ. சில ஓவியங்களில் அவை வான்முகில்களையோ மலைகளையோ சுமந்துகொண்டிருப்பதுபோல் வரையப்பட்டுள்ளன. அந்த மானுட உடல்களின் உள்ளே பல்வேறு விலங்குகளின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன.
இந்த உருவங்களுக்கு பலவகையான விளக்கங்கள் உள்ளன. ஒரு விளக்கம்., உயிர்நீத்த பெருந்தந்தைகள் அல்லது தலைவர்கள் அவ்வாறு வரையப்பட்டிருக்கலாம். அவர்களுக்காகவே நெடுங்கற்கள் நாட்டப்பட்டிருக்கின்றன. அவர்களை ஒரு சமூகமாக, ஒரு தொகையுருவமாக பார்ப்பதையே அந்த ஓவியங்களுக்குள் உள்ள உருவங்கள் காட்டுகின்றன. விலங்குகள் உள்ளிட்ட இயற்கையின் வடிவமாகவே அவர்கள் உருவகிக்கப்பட்டனர். இரண்டாவது விளக்கம், மனிதர்களை தெய்வசக்திகளுக்குப் பலிகொடுக்கும் வழக்கம் தொன்றுதொட்டே இருந்தது என பழங்குடிச் சடங்குகள் காட்டுகின்றன. அப்படிப் பலிகொடுக்கப்பட்டவர்கள் பல்வேறு பலிவிலங்குகளுக்கு நிகரானவர்கள். அவர்களின் உருவங்கள் அப்படிச் செதுக்கப்பட்டிருக்கலாம்.
உலகமெங்கும், மானுடனை, மானுட உடலை தெய்வ வடிவமாக வழிபடும் வழக்கம் உள்ளது. மானுட உடலை இயற்கையாகவும், பூமியாகவும் உருவகம் செய்துகொண்டிருந்தார்கள். இந்திய நிலத்தில் இருந்த அந்த உருவகங்களே பின்னர் புருஷன் என்னும் கருத்துருவமாக ஆயின.