தி.வ. தெய்வசிகாமணி
தி.வ. தெய்வசிகாமணி (திருப்பாசூர் வச்சிரவேல் தெய்வசிகாமணி; தெசிணி) (பிறப்பு: 1930) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர். தமிழக அரசு சட்டத்துறையின் தமிழ்ப்பிரிவில், இயக்குநராகப் பணியாற்றினார். வள்ளலார் விருது உள்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றார்.
பிறப்பு, கல்வி
திருப்பாசூர் வச்சிரவேல் தெய்வசிகாமணி என்னும் தி.வ. தெய்வசிகாமணி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாசூரில் வச்சிரவேல் - அரங்கநாயகி இணையருக்குப் பிறந்தார். திருப்பாசூரிலும் திருவள்ளூரிலும் பள்ளிக்கல்வி கற்றார். பி.காம். (ஆனர்ஸ்), எம்.ஏ.(தமிழ்), பி.எல். பட்டங்களைப் பெற்றார்.
தனி வாழ்க்கை
தி.வ. தெய்வசிகாமணி, தமிழக அரசின் சட்டத்துறையின் தமிழ்ப்பிரிவில், இயக்குநராகப் பணியாற்றினார். மணமானவர்.
இலக்கிய வாழ்க்கை
தி.வ. தெய்வசிகாமணியின் முதல் கவிதை 1947-ல் வெளியானது. தொடர்ந்து யுனெஸ்கோ கொரியர் உள்ளிட்ட பல இதழ்களில் பல கவிதைகளை எழுதினார். மரபுக் கவிதைகளில் தேர்ந்த தி.வ. தெய்வசிகாமணி, ’தெசிணி’ என்ற புனைபெயரில் எழுதினார். சிறார்களுக்கான படைப்புகள் பலவற்றை எழுதினார். தி.வ. தெய்வசிகாமணியின், சான்றுச் சட்டத்தின் முக்கியத்துவத்தைக் கூறும் ‘சான்றுச் சட்டவியல்' நூல், ஒரு குறிப்பிடத்தகுந்த சட்டம் சார்ந்த நூலாக அறியப்படுகிறது.
மொழிபெயர்ப்பு
தி.வ. தெய்வசிகாமணி சங்க இலக்கியங்கள் சிலவற்றை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார். பொருளாதாரம், சமூகம் சார்ந்த சில நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் மொழிபெயர்த்தார். ஜெர்மன். துருக்கி, கொரியா, சீனம், ஃபிரெஞ்ச், ஸ்பெயின், முதலிய நாடுகளைச் சேர்ந்த கவிஞர்களின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அவை, ’தெசிணியின் தமிழாக்கப் பாடல் திரட்டு' என்ற தலைப்பில் வெளியாகின. தி.வ. தெய்வசிகாமணி 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.
இதழியல்
தி.வ. தெய்வசிகாமணி, ‘கவிதை’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தினார். வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகள் பலவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டார். தலையங்கம், நேர்காணல் என அனைத்துமே கவிதை வடிவில் வெளியாகின.
விருதுகள்
- கவிதைக் காவலர் விருது - 1974
- பைந்தமிழ்ப் பாட்டு வேந்தர் விருது - 1984
- கவிதைப் பேரொளி - 1992
- நற்றமிழ் ஞானப் பாவலர் - 1990
- யுனெஸ்கோ கூரியர் இதழ் விருது - 1993
- வள்ளலார் விருது - 2001
- சிறந்த இதழியலாளர் விருது - 2001
- தேன் தமிழ்ச் சரபம் விருது - 1992
- தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது - 2017
ஆவணம்
’கவிதைக்காவலர் தெசிணி ஒரு பார்வை' என்ற தலைப்பில், தி.வ. தெய்வசிகாமணியின் வாழ்க்கை, இலக்கியச் செயல்பாடுகள் குறித்து மது..ச. விமலானந்தம் நூல் ஒன்றை எழுதினார். அதனை சூடாமணி பிரசுரம் வெளியிட்டது.
மதிப்பீடு
தெசிணி என்னும் தி.வ. தெய்வசிகாமணி, மரபுக் கவிதைகளில் தேர்ந்த கவிஞர். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் எழுதும் புலமை பெற்றிருந்தார். மொழிபெயர்ப்பில் தேர்ந்த இவர் சட்டத்துறை தொடர்பான பல மொழியாக்கங்களை மேற்கொண்டார். ‘கவிதை’ இதழ் மூலம் இவர் ஆற்றிய மொழிபெயர்ப்புப் பணி குறிப்பிடத்தகுந்த ஒன்று. கவிதை, மொழிபெயர்ப்பு என இரு தளங்களிலும் இயங்கி மிக முக்கிய பங்களிப்புகளைத் தந்த படைப்பாளியாக தி.வ. தெய்வசிகாமணி மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
சிறார் இலக்கியம்
- அறிவை வளர்க்கும் நீதிக் கதைத் திரட்டு - 1999
- வாழ்ந்து காட்டியவர்கள் - 2000
- படிப்பினை முப்பது - 2000
- கருத்துக் கதைக்கொத்து - 2001
- பாட்டுப் பூங்கா - 2001
- இருபது கதைகள் - 2002
கவிதை நூல்கள்
- வைகறைக் கனவுகள் - 1974
- தெசிணியின் தலையங்கக் கவிதைகள் (இரு தொகுதிகள்) - 1999
- திருமெய்ப் பொருட்பா - 2001
- இயற்கைக் கவிதைகள்
- இயற்கை - அகத்துறைப் பாடல்கள்
- அகத்துறைப்பாடல்கள்
- பதினொரு பாட்டியல்
- பாடல் பெற்ற தலைகள்
- பாரதம்
- ஐந்து கண்டங்கள்
- குமுகாயப் பாடல்கள்
- மொழி - இனப் பாடல்கள்
- நெஞ்சைத் தொட்டவை - சுட்டவை
- தெசிணியின் 23 கவிதைகள்
- தெசிணியின் தமிழாக்கப் பாடல் திரட்டு
கட்டுரை நூல்கள்
- தொன்மைத் தத்துவங்களும் அண்மை அறிவியல்களும்
- காலம் பதித்த கால் தடங்கள்
- எழுத்தும் சுவடியும்
- உயிர் வாழ உகந்த உலகம்
- இலக்கியத் திறனாய்வு நூல்கள்
- குறளின்பம் - குறுந்தொகையின்பம் - 2002,
- கலித்தொகையும் முத்தொள்ளாயிரமும் - 2002
- இலக்கியக் காட்சிகள் - 2002
- திருக்குறள் - அறத்துப்பால்
- திருக்குறள் - பொருட்பால்
- திருக்குறள் - இன்பத்துப்பால்
மொழிபெயர்ப்பு
தமிழிலிருந்து ஆங்கிலம்:
- கார்நாற்பது
- களவழி நாற்பது
- இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
- நன்னெறி
ஆங்கிலத்திலிருந்து தமிழ்:
- அமெரிக்க மக்களின் பொருளாதாரம் - 1964
- அமெரிக்கக் கூட்டுறவுகள் - 1966
- தத்தாத்திரேய இராமச்சந்திர பேண்ட்ரே - 1998
- பாட்டியின் பின்னல் கலை - 2000
- மூன்று கண்டங்களும் மூன்றாம் உலகமும்
- நீருக்கடியில் விந்தை உலகம்
உசாத்துணை
- தெசிணியின் தமிழாக்கப் பாடல் திரட்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு, 2003
- தெசிணி நூல்கள்: தினமலர் இதழ்
- தெசிணி நூல்கள்: மெரீனா புக்ஸ் தளம்
- இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.