standardised

கல்லாடர் (பொயு 11-12 ஆம் நூற்றாண்டு)

From Tamil Wiki
கல்லாடம்

கல்லாடர் (பொயு 11-12 ஆம் நூற்றாண்டு) முருகன் மீது கல்லாடம் என்னும் பக்திநூலை இயற்றியவர்.

பிற கல்லாடர்கள்: பார்க்க கல்லாடனார்

கல்லாடம் நூல்

கல்லாடம் என்னும் நூல் பதினைந்து முதல் அறுபத்தாறு அடிகள் வரையில் உள்ள 102- ஆசிரியப்பாக்களைக் கொண்ட மூவாயிரத்து நானூற்று எட்டு அடிகளால் ஆனது. பாயிரத்தில் யானைமுகன் வணக்கம் ஒன்றும், முருகன் வணக்கம் ஒன்றுமாக இரண்டு பாடல்கள் உள்ளன. இதன் மொழியமைப்பு சங்கப்பாடல்களை ஒட்டி, நிறைய சொல்லாட்சிகளை எடுத்தாண்டதாக உள்ளது. இதன் பேசுபொருள் பிற்காலப் புராணங்களைச் சார்ந்தது. இதில், இராமாயணம், பாரதம், பதினெட்டு புராணக் கதைகள், திருவிளையாடற் கதைகள், திருத்தொண்டர் வரலாறு ஆகியவை குறிப்பிடப்படுகின்றன

தொன்மம்

திருநாவுக்கரசர் எழுதிய திருக்கோவையார் நூலில் நூறு துறைகளைத் தேர்ந்து ஒவ்வொரு துறைக்கும் ஓர் ஆசிரியப்பா இயற்றி முருகன் முன் அரங்கேற்றினார். ஒவ்வொரு செய்யுள் முடியும்போதும் முருகன் தன் தலையை அசைத்து மகிழ்ந்தார்.

பதிப்பு வரலாறு

திருவாவடுதுறை மகாவித்துவான் தாண்டவராயத் தம்பிரான் சுவாமிகள் 19- ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கல்லாடம் நூலை மயிலேறும் பெருமாள் பிள்ளை உரையுடன் செப்பம் செய்து வைத்திருந்தார் என்றும், பெரும்பான்மையும் இப்போது கிடைக்கக் கூடியனவான சுவடிகள் இந்தச் சுவடியின் படிகளே என்றும் மர்ரே ராஜம் 1956- ஆம் ஆண்டு பதிப்பின் முன்னுரை சொல்கிறது. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இந்த நூலை (மூலம் மட்டும்) 1868- ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிட்டார். பின்னர், 1872-ஆம் ஆண்டு புதுவை க. சுப்பராய முதலியார் இந் நூல் மூலமும், 37- செய்யுட்களுக்கு மயிலேறும் பெருமாள் பிள்ளை உரையும், மூன்று செய்யுள் நீங்கலாக மற்றவைகளுக்குத் தாம் எழுதிய உரையுமாகச் சேர்த்து வெளியிட்டார். 1911-ஆம் ஆண்டு, காஞ்சீபுரம் வித்வான் இராமசாமிநாயுடு அவர்கள் முன்னுரைகளுடன் ஒர் அகலவுரையும் எழுதிச் சேர்த்து வெளியிட்டார். இந்த முற்பதிப்புக்களும், சென்னை அரசாங்கச் சுவடி நிலையத்தில் கிடைத்த ஆறு ஏடுகளும், சென்னை அடையாற்றில் இருக்கும் டாக்டர் உ.. வே. சாமிநாதையர் நூல் நிலையத்தில் உள்ள ஏழு ஏடுகளும் கொண்டு மர்ரே ராஜம் பதிப்பு வெளிவந்தது. பள்ளியக்கிரகாரம் நீ. கந்தசாமிப் பிள்ளை பதிப்பாசிரியர். பெ. நா. அப்புஸ்வாமி, பி. ஸ்ரீ., வி. மு. சுப்பிரமணியம், மு. சண்முகம் உதவினர்.  

நூலாசிரியர்

நூல்முகத்தில்

கல்லாடர் செய்பனுவற் கல்லாட நூறுநூல்

வல்லார்சங் கத்தில் வதிந்தருளிச்-சொல்லாயு

மாமதுரை ஈசர் மனமுவந்து கேட்டுமுடி

தாமசைத்தார் நூறுதரம்.

என்று செய்யுளில் இதை எழுதியவர் கல்லாடர் என தரப்பட்டுள்ளது. இந்த பாயிரமும் முற்பாடல்களும் பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பிற்பட்டவை

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.