under review

கல்கண்டு (இதழ்)

From Tamil Wiki
Revision as of 22:35, 9 May 2024 by ASN (talk | contribs) (Page Created: Para Added: Image Added: Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கல்கண்டு இதழ், 1983, படம் நன்றி: ஏ.வி. பாஸ்கர்&கல்கண்டு இதழ்

கல்கண்டு (1948), குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை ஆரம்பித்த வார இதழ். தமிழ்வாணன் இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார். தமிழ்வாணனின் மறைவுக்குப் பின் அவரது மகன் லெட்சுமணன் என்ற லேனா தமிழ்வாணன் ஆசிரியராக இயங்கினார்.

வெளியீடு

குமுதம் இதழின் துணை இதழாக கல்கண்டு 1950-ல் வெளியானது. எஸ்.ஏ.பி.அண்ணாமலை இவ்விதழைத் தொடங்கி நடத்தினார். தமிழ்வாணன் இதழுக்கு முழுப் பொறுப்பையும் ஏற்று ஆசிரியராகச் செயல்பட்டார். ’கல்கண்டு' சிறுவர் இதழாக சிலகாலம் வெளிவந்தது. பின் பல்சுவை  இதழாக வெளியானது. நவம்பர் 10, 1977 வரை தமிழ்வாணன் ஆசிரியராக இயங்கினார். தமிழ்வாணனின் மறைவுக்குப் பின் ஆசிரியர் பொறுப்பை எஸ்.ஏ.பி. ஏற்றார். துணை ஆசிரியராக தமிழ்வாணனின்  மகன் லெட்சுமணன் என்ற லேனா தமிழ்வாணன் பொறுப்பு வகித்தார். 'கல்கண்டி'ன் தயாரிப்புப் பொறுப்பு முழுவதையும் லேனா தமிழ்வாணன் ஏற்று இதழை நடத்தினார்.

'கல்கண்டு' வார இதழ், டெம்மி 1 × 8 அளவில் 40 பக்கங்களுடன் வெளிவந்தது. தொடக்கத்தில் இதழின் விலை அணா 2. பின்னர் காலத்திற்கேற்ப விலைமாற்றம் செய்யப்பட்டது.

உள்ளடக்கம்

கல்கண்டு இதழின் முகப்பு வாசகமாக ’துணிவே துணை’ என்ற வாசகம் இடம்பெற்றது. உலகெங்கிலும் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளைப் பற்றிய துணுக்குச் செய்திகள் இவ்விதழில் இடம்பெற்றன. தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன், ரவீந்தர் உள்ளிட்டோரின் மர்மத் தொடர் கதைகள் வெளியாகின. ராஜேஷ்குமாரின் தொடர்கதை முதன் முதலில் கல்கண்டு இதழில் தான் வெளியானது. கல்கண்டு இதழில் வெளியான 'கேள்வி பதில்' பகுதி மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றது. பல்வேறு கேள்விகளுக்கு சுவையான, அறிவுப்பூர்வமான பதில்களை தமிழ்வாணன் அளித்தார். அவரது மறைவுக்குப் பின் ‘ஜூனியர் பதில்கள்’ என்ற தலைப்பில், லேனா தமிழ்வாணன் இப்பகுதியைத் தொடர்ந்தார். லேனா கல்கண்டு இதழில் எழுதிய 'ஒரு பக்க கட்டுரை' என்ற தலைப்பிலான விழிப்புணர்வுக் கட்டுரைகள் குறிப்பிடத்தகுந்தன.

திரைப்பட விமர்சனனங்கள், உள்நாட்டு, வெளிநாட்டுச் செய்திகள், பொது அறிவுச் செய்திகள், துணுக்குகள், உலக நிகழ்வுகள் ஆகியன எளிய தமிழில் கல்கண்டு இதழில் இடம்பெற்றது.

நிறுத்தம்

2000-ங்களில் கல்கண்டு இதழ் நின்று போனது.

மதிப்பீடு

கல்கண்டு, பல்வேறு துணுக்குச் செய்திகளுக்கு, பொது அறிவு மற்றும் உலக நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துத் தமிழில் வெளியான இதழாக அறியப்படுகிறது.

உசாத்துணை

  • நகரத்தார் கலைக்களஞ்சியம், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன்; இணை ஆசிரியர்கள்: கரு. முத்தய்யா, சபா. அருணாசலம். பதிப்பு: 2002

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.