under review

திருக்கலம்பகம்

From Tamil Wiki
Revision as of 20:14, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
archives.org

திருக்கலம்பகம் அருணகிரிநாதர் காலத்தில் தோன்றிய சமண நூலாகும். இதன் ஆசிரியர் உதீசித்தேவர். இந்நூல் அருகனின் தோத்திர நூலாகும். 110 பாடல்களையுடையது. கலம்பக இலக்கணங்கள் கொண்டது. ஒரு தலம் குறித்துப் பாடப் பெறாமல் பொதுவாய் அருகனைத் துதிக்கின்றபடியால், தலத்தைச் சுட்டியதாக வழங்காமல் திருக்கலம்பகம் என்று பெயர்பெற்றது.

ஆசிரியர்

திருக்கலம்பகத்தை இயற்றியவர் உதீசிதேவர். இவர் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள ஆர்ப்பாகை (ஆர்ப்பாக்கம்) என்னும் ஊரில் வாழ்ந்தவர். இவர் சாவக நோன்பி ( சமண இல்லறத்தார்) ஆவார். இவருடைய காலம் 15 -ஆம் நூற்றாண்டு எனலாம். இக்காலக் கட்டத்தில் தோன்றிய பிற சமண நூல்கள் ஆதிநாதர் பிள்ளைத் தமிழ், அனந்தகவி உரை போன்றவையாகும்.

உதீசிதேவரின் காலத்திற்குச் சற்று பின்பு தோன்றிய அனந்த தேவர் என்பவர் எழுதிய உரை பதிப்பில் இல்லை[1].

பதிப்பு

இந்நூல் ஓர் சுவடிப் பதிப்பாகும். சுவடியிலிருந்து 1903-ஆம் ஆண்டில் படியெடுக்கப்பட்டது.

  • முதல் பதிப்பு - திருக்கலம்பகம் மூலமும் உரையும் மு.இராகவய்யங்கார், மதுரைத் தமிழ்ச் சங்கம் (1911)
  • இரண்டாம் பதிப்பு - திருக்கலம்பகம் மூலமும் உரையும் அ.சம்பந்தராவ் நயினார் (1935)
  • மூன்றாம் பதிப்பு-ஆ.சக்கரவர்த்தி நயினார் திருக்கலம்பகம் மூலம் (1955)
  • நான்காம் பதிப்பு- உதீசித்தேவர் இயற்றிய திருக்கலம்பகம் புலவர் தன்யகுமார் , மதுரை தமிழ் சமணர்கள் சங்கம் (1995)

முதல் மூறு பதிப்புகளும் இப்போது கிடைப்பதில்லை. நான்காம் பதிப்பு மட்டும் கிடைக்கிறது.

நூல் அமைப்பு

திருக்கலம்பகம் கலம்பகம் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. கலம்பக நூல்கள் பொதுவாகப் பதினெட்டு உறுப்புகளையும் 100 பாடல்களையும் கொண்டதாய் அமையும். ஆனால் இக்கலம்பகம் 16 உறுப்புகளும் 110 பாடல்களும் உடையது. வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஒரு போகு கலிப்பா, விருத்தம், வெண்டுரை ஆகிய பாவகைகளால் ஆனது.

நீயே சிவபிரான், நீயே திருமால், நீயே பிரமன், நீயே முருகன், உனது சக்தியே அம்பிகை எனப் பலவாறாக அருகனைப் போற்றிய வகையில் பாடல்கள் உள்ளன. அருகதேவனின் திருமுகம், சடைமுடி, திருக்கைலாயம், காலனைக் கடிந்தது, காமனை வென்றது, முப்புரம் எரித்தது போன்ற செய்திகள் இடம்பெறுகின்றன.

பாடல் நடை

பாடல்கள் எளிமையான மொழி நடையைக் கொண்டுள்ளன.
பாடுவது உன்னடித் தாமரை, பல்வினை மாசறநின்று
ஆடுவது உன்னடி வாரப்புனல், அடியேன் தலைமேல்
சூடுவது உன்னடிச் சேடமலர், என் துணைக்கரங்கள்
கூடுவது உன்னடி; கோமான் எனக்கோர் குறையிலையே
ஆதி நாள்புணர் ஏதில் வல்வினை
கோதில் வாமனை ஓதில் ஓடுமே

உசாத்துணை

தமிழ் இணைய கல்விக் கழகம்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page