கிருபா சத்தியநாதன்
கிருபா சத்தியநாதன் தமிழ்ப்பெண்களின் வாழ்க்கையை பற்றி ஆங்கிலத்தில் நாவல்களை எழுதியவர். இவரது நாவல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன. ஆகவே சில ஆய்வாளர் இவரை தமிழ் நாவலாசிரியர்களின் பட்டியலில் சேர்ப்பதுண்டு. இவர் Kamala- A Hindu life மற்றும் Saguna-A Christian life என்னும் இரு நாவல்களை எழுதியிருக்கிறார்
ஆசிரியர்
கிருபா பிறப்பால் மும்பையைச் சேர்ந்தவர். சென்னைக்கு மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் படிப்புக்காக வந்தார். சென்னை கிறிஸ்தவக்கல்லூரியுடன் நெருக்கம் உருவாகி சென்னையைச் சேர்ந்த சத்தியநாதனை மணந்துகொண்டார்.
எழுத்து,பிரசுரம்
கிருபா சத்தியநாதன் 1892 ல் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் ஆங்கில மாத இதழில் Kamala- A Hindu life என்னும் நாவலையும் 1893ல் Saguna-A Christian life என்னும் நாவலையும் எழுதினார். இவை இந்துப்பெண்ணின் வாழ்க்கையை விட கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கை கல்வி,சமூகப்பதவி ஆகியவற்றில் மேலோங்கியிருப்பதைச் சித்தரிக்கும் பிரச்சார நாவல்கள். இவற்றை சாமுவேல் பவுல் என்னும் மதப்பிரச்சாரகர் தமிழுக்கு மொழியாக்கம் செய்து கமலா- ஒரு இந்துப்பெண்ணின் வாழ்க்கை, சகுணா- ஒரு கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கை என்னும் தலைப்புகளில் 1896ல் நூலாக வெளியிட்டார்.
இலக்கிய இடம்
கிருபா சத்தியநாதன் தொடர்களை எழுதிய சென்னை கிறிஸ்தவக் கல்லூரி இதழில் அ.மாதவையா உள்ளிட்ட அன்றைய முன்னோடி தமிழ் நாவலாசிரியர்கள் எழுதிக்கொண்டிருந்தனர். சென்னையில் இருந்து வெளிவந்த விவேகசிந்தாமணி இதழில் அ.மாதவையா 1892ல் சாவித்ரி சரித்திரம் என்றபெயரில் ஒரு நாவலை எழுதிக்கொண்டிருந்தார். இந்நாவல்கள் எல்லாம் ஒரே காலகட்டத்தில் ஏறத்தாழ ஒரே வகையான கதைக்கருக்களைக் கொண்டவையாக உள்ளன. ஆகவே இவை ஒப்பீட்டு ஆய்வுக்குரியவை