under review

ஞானாமிர்தம்

From Tamil Wiki
Revision as of 20:13, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
ஞானாமிர்தம்

ஞானாமிர்தம் (1888-1892) தொடக்க கால சைவ இதழ்களில் ஒன்று. யாழ்ப்பாணம் சபாபதி நாவலர் நடத்தியது.

ஞானாமிர்தம் என்னும் பெயரில் பொ.யு. 12-ஆம் நூற்றாண்டில் வாகீசமுனிவர் எழுதிய மெய்யியல் நூல் ஒன்றும் உண்டு

வரலாறு

சைவ அறிஞர் யாழ்ப்பாணம் வடகோவை சபாபதி நாவலர் 1889-ல் தொண்டைமண்டல சைவ வேளாளச் செல்வந்தர்கள் மற்றும் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி உதவியுடன் தொடங்கிய இதழ் இது. சென்னையில் வித்யானுபால அச்சியந்திர சாலை அமைத்து அதில் இருந்து 1889- மே மாதம் இந்த இதழை மாதம் தோறும் வெளியிட்டார். 1889 மார்ச் இதழுடன் நிதிச்சிக்கலால் வெளியீடு நிறுத்தப்பட்டது. இதழ் நின்றதை அறிந்த சேதுபதி மன்னர் மீண்டும் நன்கொடை அளித்தமையால் 1991- கார்த்திகை முதல் மீண்டும் சிதம்பரத்தில் இருந்து இதழ் வெளியாகியது.சேதுபதி மன்னர் 1991-ஆம் ஆண்டுக்கு 360 ரூபாயும் 1992-ஆம் ஆண்டுக்கு 300 ரூபாயும் நன்கொடையாக அளித்தார். அந்நிதியால் இதழ் வெளிவந்தது. 1892-ல் இதழ் நிறுத்தப்பட்டது.

உள்ளடக்கம்

ஞானாமிர்தம் இதழில் சித்தாந்த சைவ போதம், திராவிடப்பிரகாசிகை, ஜகத்குரு விசாரம் ஆகிய புகழ்பெற்ற தொடர்கள் வெளியிடப்பட்டன. திராவிட பிரகாசிகை பின்னாளில் நூலாக வெளிவந்தது. சைவ வரலாற்றை தொகுத்துச் சொல்லும் திராவிடப்பிரகாசிகை இலக்கிய வரலாறு எழுதுவதற்கான முன்னுதாரணமும் தூண்டுதலும் ஆகியது என கா.சிவத்தம்பி பின்னாளில் குறிப்பிட்டார்.

வேறு எந்த மாத இதழ்களிலும் காணக் கிடைக்காத வகையில், ஞானாமிர்த இதழில்தான், இதழில் இலக்கணம், இதழாசிரியரின் இலக்கணம், இதழைப் படிப்போரின் இலக்கணம் என மூன்றையும் குறிப்பிட்டு தனித்தனி கட்டுரைகள் வரைந்தார் நாவலர். இன்று படிப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் அன்று இதழ்கள் வளர்ந்து கொண்டிருந்த நிலையில் இதுபோன்ற வரையறைகள் தேவையாக இருந்தன என்பதை யூகிக்க முடிகிறது என ஆய்வாளார் சி.சொக்கலிங்கம் குறிப்பிடுகிறார்[1].

அடிக்குறிப்புகள்


✅Finalised Page