சாந்தானந்த சரஸ்வதி

From Tamil Wiki
Revision as of 11:40, 7 November 2023 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|சாந்தானந்த சரஸ்வதி சாந்தானந்த சரஸ்வதி (18 ஆம் நூற்றாண்டு) அத்வைத மரபை சேர்ந்த துறவி. சென்னையில் வாழ்ந்தார். பி.ஆர்.ராஜம் ஐயரின் ஞானகுரு == வாழ்க்கை == சாந்தானந்த சரஸ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சாந்தானந்த சரஸ்வதி

சாந்தானந்த சரஸ்வதி (18 ஆம் நூற்றாண்டு) அத்வைத மரபை சேர்ந்த துறவி. சென்னையில் வாழ்ந்தார். பி.ஆர்.ராஜம் ஐயரின் ஞானகுரு

வாழ்க்கை

சாந்தானந்த சரஸ்வதி பற்றி தரவுகள் ஏதுமில்லை. பி.ஆர். ராஜம் ஐயரின் வாழ்க்கை வரலாற்றை 1909ல் எழுதிய ஏ.எஸ். கஸ்தூரிரங்கய்யர் பி.ஏ.எல்.டி சாந்தானந்தரின் படத்துடன் அவர் பி.ஆர்.ராஜம் ஐயரின் குரு என்னும் தகவலையும் சில செய்திகளையும் சொல்கிறார்.

சாந்தானந்தர் சென்னையில் வாழ்ந்தார். அவர் எஃப்.ஏ. படித்தவர், ஆங்கிலத்தில் உரையாற்றுபவர். ஆகவே அவருக்கு இளைஞர்கள் நடுவே செல்வாக்கு இருந்தது. சாந்தானந்தரை பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க ராஜம் ஐயர் விரும்பினார். ஆனால் அன்று சாந்தானந்தர் தன் நிகழ்வுகளுக்கு கட்டணத்தொகை பெற்றுக்கொண்டார். ஆகவே ராஜம் ஐயரால் அவரை சந்திக்க முடியவில்லை.

ராஜம் ஐயர் பிரம்மவாதினி இதழில் எழுதிய ’மனிதன் -அவன் தாழ்வும் ஏற்றமும்’ என்ற கட்டுரை சாந்தானந்தரைக் கவர்ந்தது. ராஜம் ஐயரைச் சந்திக்க விழைந்தார். ராஜம் ஐயரின் நண்பர்கள் அவரை சாந்தானந்தரிடம் அழைத்துச் சென்றார்கள். அப்போது உணர்ச்சிபூர்வமான பக்தராக இருந்த பி.ஆர்.ராஜம் ஐயர் சாந்தானந்தர் வெறும் நூல்கல்வி மட்டுமே கொண்டவர் என எண்ணினார். முதற்சந்திப்புக்கு பின் போதிய ஆர்வத்துடன் அவர் சாந்தானந்தரை அணுகவில்லை.

ஒரு வெள்ளிக்கிழமை திருவான்மியூர் தியாகராஜ சுவாமி ஆலயத்திற்கு நண்பர்களுடன் சென்றார். அங்கே வழிபாட்டின்போது ராஜம் ஐயர் கண்ணீர் வடித்து தியான நிலையில் அமர்ந்திருந்தார். திரும்பும்போது அவருக்கும் நண்பர்களுக்கும் விவாதம் ஏற்பட்டது. ராஜம் ஐயர் பக்தி, அனுபூதிநிலை ஆகியவையே உயர்ந்த நிலை என்றுபேச ஞானமே மேலானது என்று நண்பர்கள் பேசினர்.

மறுபடியும் சாந்தானந்தரைச் சந்திக்கையில் இந்த விவாதத்தை அவரிடம் எடுத்துரைத்தனர். சாந்தானந்தர் ராஜம் ஐயருக்கு தனிப்பட்ட முறையில் ஞான உபதேசம் செய்தார். அத்துடன் ராஜம் ஐயர் ஞானமார்க்கத்தை ஏற்றுக்கொண்டார். சாந்தானந்தரை ஆசிரியராக ஏற்றுக்கொண்டார்.

சாந்தானந்தரைப் பற்றி ராஜம் ஐயர்

எவருடைய அருளால் யானே எங்குமாம் பிரம்மமென்பால்

கவருடை புவனமெல்லாம் கற்பிதம் என்றறிந்து

சுவரிடை வெளிபோல் யானென் சொரூபஸ்வபாவமானேன்

அவருடைய பதுமபாதம் அனுதினம் பணிகின்றேனே

என்று பாடியிருக்கிறார்

பி.ஆர்.ராஜம் ஐயர் பின்னர் விவேகானந்தரைச் சந்தித்தார். விவேகானந்தரின் நவவேதாந்தம் சார்ந்த கருத்துக்களை பரப்புவதற்காக அவர் பிறருடன் இணைந்து தொடங்கிய பிரபுத்தபாரதம் இதழை சாந்தானந்தரின் ஆசியுடன் தொடங்குவதாக அவ்விதழில் எழுதினார்.

உசாத்துணை