முதற்கனல் (வெண்முரசு நாவலின் முதற்பகுதி)
‘முதற்கனல்’ எழுத்தாளர் ஜெயமோகன் மகாபாரதத்தை மீட்டுருவாக்கம் செய்து நவீனச் செவ்வியல் நடையில் எழுதிய வெண்முரசு நாவலின் முதற்பகுதி. மாபெரும் காவியநாவலான வெண்முரசுக்கு அஸ்திவாரம் போன்று மிகவும் உறுதியாக அமைக்கப்பட்ட பகுதி இது. ‘முதற்கனல்’ மாபெரும் அழிவின் முதல் பொறி. ஒரு பெண்ணின் சாபமே குருகுலத்தை அழிக்கும் முதற்கனல். அது அம்பையுடையது என்றல்ல, அதற்கும் முன்னால் அறுபது வயதில் பிள்ளைகள் பெற்று மடிந்த சுனந்தையின் கனல். ‘திரௌபதியின் கண்ணீர்தான் மகாபாரதம்’ என்று பொதுவாகக் கூறப்படும் சூழலில், ‘திரௌபதி போன்றே நூற்றுக்கும் மேற்பட்ட திரௌபதிகளின் கண்ணீரே மகாபாரதம்’ என்பதை இந்த ‘முதற்கனல்’ பகுதி காட்டுகிறது. ‘முதற்கனல்’ உணர்த்தும் அறுதி உண்மை, ‘எந்தக் கனலும் தான் உருவாகக் காரணமானவரை அழிக்காமல் அவிவதில்லை’ என்பதே!.
பதிப்பு
இணையப் பதிப்பு
‘வெண்முரசு’ நாவலின் முதற் பகுதியான முதற்கனல் எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் ஜனவரி 1, 2014 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு பிப்ரவரி 2024இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.
அச்சுப் பதிப்பு
‘வெண்முரசு’ நாவலின் முதற் பகுதியான முதற்கனலை நற்றிணை பதிப்பகம் 2014இல் அச்சுப் பதிப்பாக வெளியிட்டது. பின்னர், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது.
ஆசிரியர்
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன்.
கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்
‘‘முதற்கனல்’ ஜனமேஜெயனின் சர்ப்ப சத்ர யாகத்தை நிறுத்த வரும் ஆஸ்திகன் தன் அன்னை மானசா தேவியின் வேசர நாட்டிலிருந்து புறப்படுவதில் துவங்கி, அவன் வெற்றியுடன் தாயிடம் திரும்புவதில் முடிகிறது. இடையில் வைசம்பாயனரின் சொல்லில் விரிகிறது பாரதம். வியாச பாரதத்தில் உள்ள பகுதியைப் பொறுத்தவரை சந்தனுவின் மரணத்தில் துவங்கி சிகண்டி பீஷ்மரை இன்னாரென்று அறியாமல் சந்தித்து, தன்னைச் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள இறைஞ்சுவதோடு முடிகிறது.
கதை மாந்தர்கள்
சத்தியவதி, பீஷ்மர், வியாசர், அம்பை, அம்பாலிகை, விசித்திரவீரியன், சிகண்டி ஆகியோர் இந்த முதற்கனலின் முதன்மை மாந்தர்கள்.
உருவாக்கம்
வாழ்நாள் தோறும் அழும் பெண்களுக்குத் தோன்றாத் துணையாகவும் அணைத்துத் தேற்றும் தோழியாகவும் ஆதரவு அளிக்கும் அன்னையாகவும் அம்பை விளங்குகிறார். அம்பை தனித்த ‘முதற்கனல்’ மட்டுமல்ல, மகாபாரதம் முழுக்க பற்றி எரியக் கூடிய அனைத்துத் திரிகளையும் ஏற்றி வைக்கும் முழு முதற்பெருங்கனலும் ஆவார்.
மகாபாரதத்தில் அம்பையைப் போன்ற எத்தனையோ தெய்வங்களைக் காண நேரும். அவர்களுக்குக் ‘கட்டியம்’ கூறுவதாகவே இந்த ‘முதற்கனல்’ அமைந்திருக்கிறது.
அம்பையின் அகம் எந்த அளவுக்குப் பீஷ்மர் மீது சினம் கொள்கிறதோ அதே அளவுக்கு அவரை நேசிக்கவும் செய்கிறது என்பதை ஒரு குறிப்பின் வழியாக அறிய முடிகிறது. பீஷ்மர் காசிநகரின் மூன்று இளவரசிகளையும் சிறையெடுத்து, கங்கைநதியில் படகில் அஸ்தினபுரிக்குச் செல்லும்போது, அம்பை தான் சால்வரையே விரும்புவதாகக் கூறுகிறார். ஆனால், அப்போதே அவளின் அகம் பீஷ்மரை விரும்பத் தொடங்கிவிடுகிறது.
தன்னுடைய தாயகமும் தன்னைப் புறக்கணித்தபோது அம்பை கங்கையில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள நினைக்கிறாள். அப்போது ‘விருஷ்டி’ என்ற தேவதை, அம்பையிடம் ‘உன் அகம் பீஷ்மரை விரும்புகிறது’ என்பதைக் குறிப்புணர்த்துகிறது. அதனால்தான் அவள் பீஷ்மரை நாடிச் செல்கிறார். அவரும் புறக்கணித்தபோது அவர் மீது அவளுக்கு மாறாச் சினம் ஏற்படுகிறது. ஆனாலும் அவர் மீது அவளின் அகம் கொண்ட பற்று சிறிதும் குன்றவில்லை. இதனைப் பீஷ்மர் சப்தசிந்து நாட்டில் அதிதியாகத் தங்கும் இரவில் உர்வரை காணும் கனவிலிருந்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
சிகண்டி வராஹியாக மாறி உர்வரையின் கனவில் வந்து பீஷ்மரைக் கொல்வதாகக் கூறப்படுகிறது. அதே கனவு சிகண்டிக்கும் வருகிறது. சிகண்டிக்குக் கனவில் வரும் உர்வரை தன்னுடைய அன்னை அம்பையாகவே தெரிகிறது. மறுநாள் விடியலில் உர்வரை பீஷ்மரை மணந்துகொள்ள விரும்புவதாகக் கூறுகிறாள். ‘நீங்கள் என்னை மணந்துகொண்டால் வராஹி உங்களைக் கொல்வதிலிருந்து தப்பிவிடலாம்’ என்று கூறுகிறார் உர்வரை.
சிவன் அம்பைக்குக் கூறிய அருளுரையின்படி, அம்பை தன் அகக் கனலை முழுமையாகச் சிகண்டியிடம் கையளித்து, பீஷ்மரைக் கொல்லுமாறு கூறுகிறாள். அதே அம்பைதான் பீஷ்மர் மீது தன் அகத்தில் இருக்கும் காதலின் காரணமாக உர்வரையின் கனவில் வந்து, பீஷ்மரை மணக்க விரும்புகிறாள். அதனால்தான் அவள் தன் மகன் சிகண்டிக்கும் உர்வரையின் வடிவில் தானே வெளிப்பட்டு நிற்கிறாள். ஒரு மனிதரை ஒரே நேரத்தில் முற்றிலும் கொல்லவும் முழுமுதலாக விரும்பவும் அம்பையால் மட்டுமே முடிகிறது.
அன்னையின் அல்லது தந்தையின் ஆணைகளைச் சிரமேற்கொண்டு செய்து முடிக்கும் மைந்தர்களாகப் பலரை நாம் இதில் காணமுடிகிறது. தன் தாயின் அல்லது தந்தையின் கனலைத் தன் நெஞ்சில் சுமந்து சென்று, ஏற்றுக்கொண்ட செயலை முடித்து அந்தக் கனலை அவிக்கும் மகன்களாக நாம் மனசாதேவின் மகன் ஆஸ்திகனையும் (நாகர்குலத்தைக் காக்கும் பொறுப்பு) பிரதீபரின் இரண்டாவது மகன் சந்தனுவையும் (கங்கர்களுடன் மணஉறவை ஏற்படுத்தும் பொறுப்பு), சத்யவதியின் மூத்தமகன் வியாசரையும் (அஸ்தினபுரிக்கு வாரிசுகளைத் தோன்றச் செய்யும் பொறுப்பு) குறிப்பிடலாம்.
அம்பையைப் போலவே வாழ்க்கையில் மிகுந்த சினத்தை ஏந்தி அலைபவராக நாம் சிகண்டியையும் (அம்பைக்கு ஏற்பட்ட இழிவு) பால்ஹிகரையும் (தன் அண்ணன் தேவாபிக்கு ஏற்பட்ட இழிவு), கங்காதேவியும் (சந்தனு தனக்குக் கொடுத்த வாக்கை மீறியதால்), வியாசரையும் (அவரின் அன்னை சத்யவதி ‘மச்சகுலம்’ என்பதால், அவர் ஞானம் பெறுவதற்கு அதுவே தடையாக இருப்பதால்) எண்ணிக் கொள்ளலாம். அவர்களிடம் இறக்கி வைக்க இயலாத சினம் பெருகியபடியே இருக்கிறது. அது அவர்களின் மனத்தைப் பிறழச் செய்து, உயிரைக் குடித்துவிடுகிறது.
இதில் அம்பையின் கனல் அடிநாதமாக இருந்தாலும் எண்ணற்றவர்களின் அகக்கனல்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இது, ‘எண்ணற்றவர்களின் முதற்கனலின் தொகுப்பு’ என்றும் கூறலாம்.
உசாத்துணை
- https://venmurasu.in/mutharkanal/chapter-1
- https://venmurasudiscussions.blogspot.com/
- https://www.youtube.com/watch?v=ZfQvXKOEJVQ
- https://www.youtube.com/watch?v=oSxlqukLP1E
- https://www.youtube.com/watch?v=Vo1ZIbqIO04
- https://solvanam.com/2014/09/20/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.