under review

மதுரை ஆதீனம்

From Tamil Wiki
மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனம் என்பது தமிழகத்தின் சைவ சமயத் திருமடங்களில் ஒன்று. திருஞானசம்பந்தர் இம்மடத்தை மதுரையில் தோற்றுவித்ததாக நம்பிக்கை உள்ளது.

இடம்

மதுரை ஆதீனம் மதுரை ஆவணிமூலக்கடைத்தெருவில் உள்ளது. மதுரை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தொன்மம்

மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் சமண மதத்தைத் தழுவிய போது அவனது ஆட்சிக்குட்பட்ட பாண்டிய நாட்டின் பகுதி முழுவதும் சமண மதமாக இருந்தது. சிவாலயங்களில் பூசைகள் நடைபெறவில்லை. சைவ சமயத்தில் பற்றுக் கொண்ட கூன்பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசியும் மந்திரி குலச்சிறையாரும் சிவபக்தர். இவர்கள் திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்தனர். மதுரைக்கு வந்த திருஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு அரசரின் ஆணையால் தீ வைக்கப்பட்டது. சம்பந்தர் தீயிலிருந்து தப்பி வந்து சிவனை தேவாரப்பதிகப் பாடலால் வேண்டினார். நெருப்பு வெப்பு நோயாக கூன்பாண்டியன் மேல் மாறியது. சமணர்கள் மன்னனின் நோயைக் குணப்படுத்த பல முயற்சி செய்தும் இயலவில்லை. திருஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடி மன்னனின் வெப்பு நோயைக் குணப்படுத்தினார். சமணர்களுடன் அனல்வாதம் புனல்வாதம் என அனைத்திலும் ஞானசம்பந்தர் வென்று கூன்பாண்டியனின் கூன் முதுகு நோயை நீக்கி நின்றசீர் நெடுமாறனாக மாற்றினார். ஞானசம்பந்தர் சைவத்தையும், தமிழையும் மதுரையில் மீண்டும் நிலைநாட்டினார் என்ற நம்பிக்கை உள்ளது.

பீடாதிபதி

மதுரை ஆதீனத்தை நிர்வகிப்பவர்கள் பீடாதிபதிகள் என்று அழைக்கப்பட்டனர். இந்த மடம் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது என்றும், இதுவே பழைமையான மடம் என்றும் அம்மடத்தினர் நம்புகின்றனர்.

  • 291 - சோமசுந்தர தேசிகர்
  • 292 - அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமி (ஆகஸ்ட் 13, 2021 வரை)
  • 293 - ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (ஆகஸ்ட் 23, 2021 முதல் தற்போது வரை)

மதுரை ஆதீன மீட்புக்குழு

மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமி தனக்கு அடுத்த பீடாதிபதியாக நித்தியானந்தாவை நியமித்ததைக் கண்டித்து தமிழகத்தின் இதர திருமடங்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பின. பிற திருமடங்களின் ஆதரவுடன் நெல்லை கண்ணனை தலைமையாக கொண்ட மதுரை ஆதீன மீட்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. மதுரை ஆதீனத்திலிருந்து நித்தியானந்தா உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்; புதிய ஆதீனத்தை தமிழகத்தின் மற்ற ஆதீன மடங்களை கலந்தாலோசித்து தேர்ந்தெடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டிசம்பர் 19, 2012-இல் நித்தியானந்தா பீடாதிபதி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

கோயில்கள்

  • கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (தஞ்சாவூர்)
  • திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் (தஞ்சாவூர்)
  • கச்சனம் கைச்சின்னேசுவரர் கோயில் (திருவாரூர்)
  • மீனாட்சி அம்மன் கோவில் (மதுரை)

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.