first review completed

சட்டைமுனி

From Tamil Wiki

சட்டைமுனி (மகாஇருடி) தமிழ்ப்புலவர், வைத்தியர். அகத்தியர் காலத்தைச் சேர்ந்த புலவர். பதினெண் சித்தர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சட்டைமுனி அகத்தியர் காலத்தைச் சேர்ந்தவர். புலவர், வைத்தியர். சிங்கள நாட்டு தேவதாசிக்கும், தமிழருக்கும் மகனாக ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார். குடும்பம் பிழைப்புத் தேடி தமிழகம் வந்த போது, விவசாயக் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தினார். வேலையில்லா நாட்களில் சட்டைமுனி கோயில்களில் தட்டு ஏந்தி யாசகம் செய்தார். உரிய வயது வந்ததும் சட்டை முனிக்குத் திருமணம் நடந்தது. ஆனால் அவர் மனம் இல்லறத்தில் லயிக்கவில்லை. கோயில் வாசலில் ஒருநாள் வடநாட்டிலிருந்து வந்த ஒரு சித்தரைத் தரிசித்தார். அவருடன் சொல்லிக் கொள்ளாமலே கிளம்பிவிட்டார். பின் போகரின் சீடராக வாழ்ந்தார். அப்போது கொங்கணர், கருவூரார் ஆகியோரின் தொடர்பு கிட்டியது. இவரின் மாணவர் பாம்பாட்டிச் சித்தர்.

சான்று
  • சட்டைமுனி பற்றி: போகர் ஏழாயிரம்

பாலனாம் சிங்கள தேவதாசி
பாசமுடன் பயின்றெடுத்த புத்திரன்தான்
சீலமுடன் சட்டைமுனி என்று சொல்லி
சிறப்புடனே குவலயத்தில் பேருண் டாச்சு

இலக்கிய வாழ்க்கை

சட்டைமுனி 'ஞானநூறு' என்னும் வேதாந்த நூலை எழுதினார். 'கல்பநூறு', 'வாதநிகண்டு' என்னும் நூல்களை எழுதினார். வாதநிகண்டு ரசவாத வித்தையைப் பற்றிய நூல். சட்டைமுனி 'திரிகாண்டம்', 'சரக்கு வைப்பு', 'வாதவைப்பு', 'நவரத்தின வைப்பு' ஆகிய நூல்களையும் எழுதியதாக ந.சி. கந்தையாபிள்ளை கருதினார்.

மறைவு

சட்டை முனி ஸ்ரீரங்கத்தில் ஜீவசமாதி அடைந்ததாக வைணவர்கள் கருதினர். சைவர்கள் இவர் சீர்காழியில் ஜீவசமாதி அடைந்ததாகக் கருதினர்.

நூல் பட்டியல்

  • ஞானநூறு
  • கல்பநூறு
  • வாதநிகண்டு
  • சட்டைமுனி திரிகாண்டம்
  • சரக்கு வைப்பு
  • வாதவைப்பு
  • நவரத்தின வைப்பு

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.