சரவணப்பெருமாள் கவிராயர்
சரவணப்பெருமாள் கவிராயர் கவனகர் மரபில் வந்தவர். வெகு விரைவாக கற்பனை, சிலேடை, யமகம், திரிபு மற்றும் சந்தப்பாடல்களை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவர் ஒரே வேளையில் பத்துக்கும் மேற்பட்ட செயல்களில் கவனத்தைக் குவிக்கும் நினைவாற்றல் கலையான அவதானத்தில் திறன் பெற்றவர்.
பிறப்பு
சரவணப் பெருமாள் கவிராயர் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பரமக்குடி முதுகுளத்தூரில் வேளாளர் மரபில் அருணாச்சல கவிராயருக்கு மகனாகப்பிறந்தார். இவருடைய தாத்தா அஷ்டவதானி சரவணப்பெருமாள் கவிராயர்.
பங்களிப்புகள்
இவர் இராமநாதபுரம் அரசவையில் கவிஞராக இருந்தார். இவர் இவருடைய காலத்தில் வாழ்ந்த செல்வந்தர்களை புகழ்ந்து பாடி பல பரிசுகளை பெற்றுள்ளார். இவர் இயற்றிய தனிப்பாடல்கள் தனிச்செய்யுள் சிந்தாமணியில் சேர்க்கப்பட்டுள்ளது
இயற்றிய நூல்கள்
- மதுரைச்சிலேடை வெண்பா
- திருச்சுழியல் ஓரேழுத்தந்தாதி
- கழுகுமலை ஓரேழுத்தந்தாதி
- மகர வந்தாதி
- பனசைத் திரிபந்தாதி
- கயற்கண்ணி மாலை
- புவனேந்திரன் அம்மானை
- கந்தவருக்குச் சந்தவெண்பா
"கும்பனுக்குஞ் சங்கரனுக் குங்குருவே பிள்ளைமதிக்
கும்பனுக்குஞ் சங்குவரிக் குங்குயிலுக்-கும்பயந்தேன்
தென்றலுக்கும் ஐங்கணைச்சிலம்பனுக்கும் என்செயச்சொல்
என்றலுக்கும் மங்கைநித்த மே"
என்பது இவருடைய கந்தவருக்குச் சந்தவெண்பாவில் வரும் ஒரு பாட்டு.
இறப்பு
இவர் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மறைந்தார்.
உசாத்துணை
- தமிழ்ப் புலவர் வரிசை எட்டாம் புத்தகம், சு அ இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1955
✅Finalised Page