ஜெ.ஆர். ரங்கராஜு
ஜெ.ஆர். ரங்கராஜு (ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு; ஜெ.ர. ரங்கராஜு) (1875-1959) தமிழக எழுத்தாளர். இதழாளர். தமிழின் முன்னோடித் துப்பறியும் நாவலாசிரியர்களில் ஒருவர். ஆங்கில நாவல்களைத் தழுவிப் பல நாவல்களை எழுதினார். ‘துப்பறியும் கோவிந்தன்' என்ற கதாபாத்திரத்தை உருவாக்கிப் புகழ்பெற்றார். ஜெ.ஆர். ரங்கராஜுவின் நாவல்கள் நாடகங்களாகவும், திரைப்படங்களாகவும் உருவாகின. ஜெ.ஆர். ரங்கராஜுவின் நூல்களை 2009-ல் தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது.
பிறப்பு, கல்வி
ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு என்னும் ஜெ.ஆர். ரங்கராஜு, 1875-ல், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில், ஸ்ரீரங்கராஜு-லட்சுமி அம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். பாளையங்கோட்டையில் பள்ளி இறுதிவகுப்பு வரை படித்தார்.
தனி வாழ்க்கை
ஜெ.ஆர். ரங்கராஜு, தனது சகோதரர்களுடன் இணைந்து வெண்ணெய் வணிகத்தில் ஈடுபட்டார். பின் விவசாயக் கருவிகளை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தினார். மணமானவர்.
இலக்கிய வாழ்க்கை
ஆங்கில இலக்கியப் பரிச்சயம் பெற்றிருந்த ரங்கராஜு அவற்றின் தாக்கத்தால் அவற்றைத் தழுவி தமிழில் நாவல்களை எழுதினார். ரங்கராஜுவின் முதல் நாவல், ‘இராஜாம்பாள்’ 1908-ல் வெளியானது. தொடர்ந்து பல நாவல்களை எழுதினார். தனது நாவல்களைத் தானே தனது சொந்த அச்சகத்தில் வெளியிட்டார். ரங்கராஜுவின் நாவல்களில் ஊழல் எதிர்ப்பு, போலிச் சமயவாதிகள் எதிர்ப்பு, பெண் விடுதலை போன்ற சமூக சீர்திருத்தக் கருத்துகள் இடம் பெற்றன.
ரங்கராஜு எட்டு துப்பறியும் நாவல்களை எழுதினார். அவை பல பதிப்புகளாக வெளிவந்தன. இது பற்றி க.நா. சுப்ரமணியம், தனது இலக்கியச் சாதனையாளர்கள் நூலில், “ஜே.ஆர். ரங்கராஜுவின் ஐந்தாறு நாவல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்றாக 1916 முதல் 1923 வரையில் வெளிவந்தன. பிரஸ் சொந்தக்காரரான ரங்கராஜு பத்தாயிரம் பிரதிகளை அச்சிட்டு ஒவ்வொரு ஐநூறு பிரதிகளையும் ஒரு பதிப்பாகக் குறிப்பிட்டு 10 பதிப்புகள் வரை தன் நாவல்களை வெளியிட்டார். ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா, ஆனந்தகிருஷ்ணன் என்று ஒவ்வொரு நாவலும் வெளியாகும்போது மிகவும் பரபரப்பாக வாசகர்கள் வாங்கிப் படித்தனர்.” என்று குறிப்பிட்டுள்ளார். ரங்கராஜுவின் நாவல்கள் நாடகமாகவும், திரைப்படங்களாகவும் வெளியாகின.
முதல் அறிவியல் புதினம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.