செந்தீ நடராசன்
செந்தீ நடராசன் (பிறப்பு: ஜூலை 06, 1940) நாட்டார் வழக்காற்றியலாளர், சமூக மானுடவியல் ஆய்வாளர், தொல்லியல் மற்றும் கோயிற்கலை ஆய்வாளர். கலை இலக்கிய பெருமன்றத்தின் தலைவராக இருந்தவர். தமிழ்நாடு தொல்லியல் துறையின் தலைவராக பொறுப்பில் உள்ளார்.
பிறப்பு, கல்வி
செந்தீ நடராசன் ஜூலை 06, 1940 அன்று திருவனந்தபுரத்தில் (அப்போதைய திருவிதாங்கூர்) சுப்பையன், காளியம்மாள் தம்பதியருக்கு பிறந்தார். அப்பா சுப்பையன் திருவிதாங்கூர் மாகாண உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர். செந்தீ நடராசன் உடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரிகள். செந்தீ நடராசன் அவர்களில் இளையவர்.
செந்தீ நடராசன் ஐந்தாம் வகுப்பு வரை நாகர்கோவில் அரசு தொடக்கப்பள்ளியில் கற்றார். பின் ஆறாவது பாரம் (அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி) வரை எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். நாகர்கோவில் எஸ்.டி. இந்துக் கல்லூரியில் பி.யூ.சி பட்டமும், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் பட்டமும் பெற்றார். சென்னை சைதாப்பேட்டையிலுள்ள அரசுக் கல்லூரியில் பி.எட் தேர்ச்சி பெற்றார்.
தனி வாழ்க்கை
செந்தீ நடராசன் 1967 ஆம் ஆண்டு கமலாவை திருமணம் செய்துக் கொண்டார். கமலா நடராசன் (எம்.எட்) வேதியியல் ஆசிரியராக இருந்த ஓய்வு பெற்றவர். செந்தீ நடராசன் கமலா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள். மகன் செந்தில் குமரன், மகள் - செந்தளிர்.
1962 ஆம் ஆண்டு செந்தீ நடராசன் ஊட்டி செண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் ஐந்து மாதம் வேலை பார்த்த பின் நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலையில் சேர்ந்தார். 1962 முதல் 1966 வரை அகஸ்தீஸ்வரத்தில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினார். 1966-ல் சூரங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அங்கிருந்த போது பாளையங்கோட்டை சேவியர்ஸ் கல்லூரியில் அரசு செலவில் எம்.எட். படித்து பட்டம் பெற்றார். பின் அகஸ்தீஸ்வரம் உயர்நிலைப் பள்ளி, எஸ்.எல்.பி உயர்நிலைப் பள்ளியில் பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினார். 1996 முதல் 1999 வரை கலிங்கப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி 1999 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
தற்போது மனைவி கமலாவுடன் நாகர்கோவிலில் உள்ள நாகராஜர் கோவில் தெருவில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.
பொது வாழ்க்கை
கலை இலக்கிய பெருமன்றம்
செந்தீ நடராசன் சூரங்குடியில் வேலை செய்த போது அங்கே தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தோடு அறிமுகம் ஏற்பட்டது. 1966-ல் நாகர்கோவில் கலை இலக்கிய பெருமன்றம் தொடங்கப்பட்டபோது அதன் உறுப்பினர் ஆனார். அங்கே செந்தீ நடராசனின் எம்.எட். கல்லூரி தோழரான எழுத்தாளர் பொன்னீலன், நா. வானமாமலையை அறிமுகம் செய்து வைத்தார். நா. வானமாமலை உடனான தொடர்பு செந்தீ நடராசனை ஆய்வு பக்கம் திருப்பியது.
செந்தீ நடராசன் தன் ஆய்வை சமூக மானுடவியலிலும், நாட்டார் வழக்காற்றியலிலும் மேற்கொள்ளத் தொடங்கினார். கலை இலக்கிய பெருமன்றம் மூலம் நாடகம், இலக்கியம், பட்டிமன்றம் போன்றவற்றை நாகர்கோவிலில் நிகழ்த்தினார். சில நாடகங்கள் செந்தீ நடராசனே எழுதி அரங்கேறியவை. செந்தீ நடராசன் அந்நாடகங்களை இயக்கி அதில் நடிக்கவும் செய்தார்.
தொல்லியல் ஆய்வு
பொ.யு. 2000-ல் செந்தீ நடராசனுக்கு தொல்லியல் ஆய்வாளர் கோபாலனின் அறிமுகம் ஏற்பட்டது. கோபாலனின் அறிமுகம் வேலை ஓய்வுக்கு பின் செந்தீ நடராசனை தொல்லியல் ஆய்வு பக்கம் திருப்பியது. செந்தீ நடராசன் தொல்லியல் கருத்தரங்கில் பங்கேற்றார். கல்வெட்டில் பிராமி, வட்டெழுத்துகளைப் படிக்க கற்றுக் கொண்டார். தொல் தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம் சிற்பம் தொன்மங்கள், பண்பாட்டுத் தளங்கள் வழியே போன்ற செந்தீ நடராசனின் புத்தகங்கள் முக்கியமானவை. செந்தீ நடராசன் நாகர்கோவில், திருநெல்வேலி மாவட்டங்கள் தன் ஆய்வு களமாக கொண்டவர்.
கல்வெட்டு ஆய்வுகள்
செந்தீ நடராசன் கல்வெட்டு ஆய்வுகளை சமூகவியல் பார்வையில் நிகழ்த்தியவர். குமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பல புதிய வட்டெழுத்து கல்வெட்டுகள், கிரந்த கல்வெட்டுகள், செப்பேடுகளை படித்து பதிவு செய்துள்ளார். செந்தீ நடராசன் நாகர்கோவிலில் உள்ள குமார கோவில் வெளிச்சுவரில் அமைந்த முப்பத்தி ஆறு வரிக் கல்வெட்டை கண்டுப்பிடித்து, படித்து பதிவு செய்துள்ளார்.[1]
பொ.யு. 1366 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்றில் வட்டெழுத்தில் தொடங்கி தற்கால தமிழ் எழுத்து வரையுள்ள கல்வெட்டை கண்டுபிடித்துள்ளார்.[2]
குழு செயல்பாடுகள்
- தமிழ்நாடு தொல்லியல் துறை தலைவராக 2019 முதல் 2023 வரை பொறுப்பில் இருந்தார்.
- தமிழக கலை இலக்கிய பெருமன்றத்தின் உறுப்பினராக இருபத்தைந்து ஆண்டுகள் மேல் இருந்தார்.
இதழியல் பங்களிப்பு
பொ.யு. 1977-ல் செந்தீ நடராசன் குமரி மாவட்ட கலை இலக்கிய பெருமன்ற செயலாளராக இருந்த போது ’புதிய வானம்’ என்ற மாத இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். இவ்விதழ் பதினெட்டு பதிப்புகள் வெளிவந்துள்ளது.
விருதுகள்
- நல்லாசிரியர் விருது
- அருவிணையாளர் விருது
- சிற்பம் தொன்மம் கவிதை உறவுகள் சென்னையில் ஏர்வாடி ராதாகிருஷ்ணன்.
நூல்கள்
- சிவ... சிவ... (கணிச்சியோன்)
- புலைப்பேடி என்றொரு விசித்திர வழக்கம்
- பண்பாட்டுத் தளங்கள் வழியே
- சிற்பம் தொன்மம்
- தொழ்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்
- குமரியில் சமணத்தின் சுவடுகள்
ஆய்வுரை காணொளிகள்
- சங்க இலக்கியம், தொல்லியல் ஆய்வாளர் செந்தீ நடராசன் - பகுதி 1, NamTamilMedia, யூடியூப்.காம்
- தொல் எழுத்துப் பயிற்சி சந்திப்பு, தொல்லியல் ஆய்வாளர் செந்தீ நடராசன் - பகுதி 2, NamTamilMedia, யூடியூப்.காம்
- ஆதிச்சநல்லூர், கீழடி ஆய்வுகள் ஓர் பார்வை - தொல்லியல் ஆய்வாளர் செந்தீ நடராசன் - பகுதி 3, NamTamilMedia, யூடியூப்.காம்
- கோயில்களில் சமஸ்கிருதம் ஆதிக்கம் செலுத்த கதை, ஆய்வாளர் செந்தீ நடராசன் - பகுதி 4, NamTamilMedia, யூடியூப்.காம்
- வாசிப்பும் நானும், ஆய்வாளர் செந்தீ நடராசன் - பகுதி 5, NamTamilMedia, யூடியூப்.காம்
- வரலாற்றைத் திருத்துவது சாத்தியமா? ஆய்வாளர் செந்தீ நடராசன் - பகுதி 6, NamTamilMedia, யூடியூப்.காம்
உரைகள்
- தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் புத்தக வெளியிட்டு விழா செந்தீ நடராசன் கருத்துரை, பகுதி - 1
- தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் புத்தக வெளியிட்டு விழா செந்தீ நடராசன் கருத்துரை, பகுதி - 2
நேர்காணல் காணொளிகள்
- அவ்வை நோன்புக்கு பின்னிருக்கும் உண்மை? ஆய்வாளர் செந்தீ நடராசன் நேர்காணல் பகுதி - 1, யூடியூப்.காம்
- தொல்லியல் vs அகழ்வராய்ச்சி - தொல்லியல் ஆய்வாளர் செந்தீ நடராசன் நேர்காணல் பகுதி - 2, யூடியூப்.காம்
வெளி இணைப்புகள்
- சிற்பங்கள் தொன்மங்களைச் சித்திரிக்கின்றன: செந்தீ நடராசன் நேர்காணல், இந்து தமிழ் திசை, மார்ச் 15, 2015
- செந்தீ நடராசன் முழுமையான பண்பாட்டை நோக்கி..., இந்து தமிழ் திசை, மே 27, 2018
அடிக்குறிப்புகள்
- ↑ கல்வெட்டு குறிப்பு: குமாரகோவிலில் கிடைத்தது ஒருவர் கொடுத்த நிவந்தத்தை பற்றிய குறிப்பு அமைந்த கல்வெட்டு. அதில் ‘நிலமும், புரையிடமும், ஆள் அடிமையும் விட்டுக் கொடுத்து’ என்ற வரி உள்ளது. இதன் படி கோவில் பணிக்கு நிலம், புரையிடம், அடிமை ஆட்களும் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது என்ற சமூகவியல் ஆய்வில் அக்கல்வெட்டை ஆராய்ந்து பதிவு செய்துள்ளார்.
- ↑ தமிழகத்தில் பொ.யு. 13 ஆம் நூற்றாண்டிற்கு முன்பாகவே வட்டெழுத்து புழக்கம் குறைந்துவிட்டது. குமரி மாவட்டத்தில் பொ.யு. 14 ஆம் நூற்றாண்டில் கிடைத்த கல்வெட்டு அங்கே வட்டெழுத்துக்கள் 14 ஆம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்ததைக் காட்டுகிறது என ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.