under review

ஜோஹான் பிலிப் பப்ரிஷியஸ்

From Tamil Wiki
Revision as of 14:43, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
ஜோஹான் பிலிப் பப்ரிசியஸ்
பப்ரிஷியஸ் கல்லறை

ஜோஹான் பிலிப் பப்ரிஷியஸ் (Johann Phillip Fabricius) (ஜனவரி 22, 1711 - ஜனவரி 23, 1791) லுத்தரன் சபையைச் சேர்ந்த ஜெர்மனி நாட்டு கிறித்தவ மதப் போதகர், தமிழறிஞர். ஆங்கில-தமிழ் அகராதி, தமிழில் கிறித்தவ வேதாகமம் எழுதியது முக்கியமான பங்களிப்பு. ஜோகான் பிலிப் பப்ரிஷியஸ் என்பவர் ஒரு கிறித்தவ மத போதகர். ஜெர்மன் நாட்டில் கிலிபெர்க் (Kleeberg) என்ற ஊரில் சர்வகலாசாலைகளில் பயின்று 28-10-1739ல் கிறித்துவ மத போதகர்களுக்கான குரு பட்டம் பெற்றார். அதன் பிறகு இந்தியாவில் கிறித்தவ சமயத்தை வளர்க்கும் நோக்கத்துடன் அங்கிருந்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார்.

பிறப்பு, கல்வி

ஜெர்மனி நாட்டில் பிராங்க்ஃபர்ட்டில் கிலீபெர்க் என்ற ஊரில் 22-01-1711ல் பிறந்த இவர் யூறா (Jura) மற்றும் ஹாலே (Halle) ஆகிய பல்கலைக்கழகங்களில் பயின்று அக்டோபர் 28, 1739-ல் கிறித்தவ மத போதகர்களுக்கான குரு பட்டம் பெற்றார்.

பப்ரிஷியஸ் வாழ்க்கைக்குறிப்பு

மதப்பணி

இவரைப் பற்றிய செய்திகள், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள "அற்புதநாதர்" லுத்தரன் ஆலயச் சுவரிலுள்ள கல்வெட்டில் உள்ளன. 8 செப்டெம்பர் 1740 ல் தரங்கம்பாடி வந்து சேர்ந்த இவர் தரங்கம்பாடியில் 1742 ஆம் ஆண்டு, டிசம்பர் 4 ஆம் தேதி வரை கிறித்தவ மதப்பணிகளைச் செய்து வந்தார். அதன் பிறகு தரங்கம்பாடி லுத்தரன் சபையைச் சேர்ந்த குருக்கள் சென்னையில் நடத்தி வந்த ஊழியத்திற்கு இவர் தலைமைப் பொறுப்பேற்றார். அன்று முதல் 49 ஆண்டுகள் சென்னையில் கிறித்தவ சமயத் தொண்டாற்றினார். சென்னையில் இவருடைய சபையில் பல்வேறு நாட்டினர் இருந்ததால், அவர்களிடையே சொற்பொழிவு ஆற்றுவதற்காக ஜெர்மன், டச்சு, போர்ச்சுக்கீசியம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளையும் கற்றறிந்தார். இவரை 'சன்னியாசி குரு’ என்று அழைத்தனர். திருமணம் செய்து கொள்ளாமல் எளிமையாக வாழ்ந்த இவர் சபையின் பொருளாளராக இருந்தமையால் பலர் இவரிடம் பணத்தைக் கொடுத்திருந்தனர். இவர் நிதிநிர்வாகத்தில் திறமையற்றவராயிருந்தார். அதனால், ஓர் உபதேசியாரின் பேச்சைக் கேட்டு தன்னிடம் சபையார் அளித்த பெரும் பணத்தை வட்டிக்குக் கொடுத்து இழப்பைச் சந்தித்தார். இதனால் இறுதி 13 வருடங்களில் அடிக்கடி சிறை செல்ல நேர்ந்தது. 1746-ல் பிரான்ஸ் நாட்டினர் சென்னையைக் கைப்பற்றியதால் ஜெர்மானியரான பப்ரிஷியஸ் பழவேற்காட்டுக்குத் தப்பியோட வேண்டியதாயிற்று. இவர் திரும்பி வருவதற்குள் இவர் கட்டிப் பராமரித்து வந்த சில பள்ளிக்கூடங்கள் கத்தோலிக்கக் குருக்களால் கையகப்படுத்தப்பட்டன. 1757, 1767, 1780 ஆகிய ஆண்டுகளில் பப்ரிஷியஸ் தன் இருப்பிடத்தை விட்டு அகன்று வேறு இடங்களில் அடைக்கலமாக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சென்னை அற்புத நாதர் ஆலயத்திலுள்ள கல்வெட்டு

இலக்கிய வாழ்க்கை

தமிழில் இலக்கியங்களையும், செய்யுட்களையும் கற்றறிந்தார். இவர் ஒன்பதாயிரம் சொற்கள் கொண்ட ஆங்கில-தமிழ் அகராதியை எழுதி வெளியிட்டார். அவருக்கு முன் சீகன்பால்க், ஜூல்ச் ஐயர் ஆகியோர் பைபிளை மொழியாக்கம் செய்திருந்தனர். பிழையற்ற, எளிய மொழியாக்கம் ஒன்று தேவை என எண்ணி 1752-ல் பைபிளை மொழிபெயர்ப்பு செய்யத் தொடங்கி 20 ஆண்டுகள் செயல்பட்டு 1772-ல் மொழியாக்கம் செய்து முடித்தார். தன் மொழியாக்கத்தை எளிய மக்கள் புரிந்துகொள்கிறார்களா என்று வாசித்து கேட்கவைத்து கருத்தறிவது இவர் வழக்கம். தரங்கம்பாடியிலுள்ள சீகிலின் ஐயருக்கும், தானியேல் என்பவருக்கும் அனுப்பி பரிசீலித்தார். 1772-ல் சென்னை கிறித்தவ மார்க்க கல்வி அபிவிருத்திச் சங்க SPCK அச்சகத்தில் இவர் மொழியாக்கம் செய்த பைபிள் புதிய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டது. புதிய ஏற்பாடு முடிந்ததும், பப்ரிஷியஸ் பழைய ஏற்பாட்டு வேலையைத் தொடங்கினார். இந்த மொழிபெயர்ப்பு இன்று புழக்கத்தில் இல்லையாயினும் பின்னர் வந்த மொழிபெயர்ப்புகளில் இதன் தாக்கம் உள்ளது. பழைய ஏற்பாடு பாகம் பாகமாய் அச்சிடப்பட்டது. 1777-ல் ஆதியாகமம் முதல் நியாயாதிபதிகள் வரை, 1782-ல் ரூத் முதல் யோபு வரை, 1791-ல் சங்கீதங்கள் முதல் உன்னதப்பாட்டு வரை, 1796-ல் தீர்க்கதரிசன நூல்களும் அச்சிடப்பட்டன.

மொழியாக்கச் சிறப்பு

ஹூப்பர் (J.S.M. Hooper) என்பவர் "வேத மொழிபெயர்ப்பின் சரித்திரத்திலே பப்ரிஷியஸ் செய்து முடித்த வேலை அரும் பெரும் செயலெனப் பாராட்டப்பட வேண்டும்" என்றார். இந்த மொழிபெயர்ப்பு "பொன் மொழிபெயர்ப்பு" (Golden Version) என்று பலராலும் பாராட்டப் பெற்றது. பப்ரிஷியஸ் தமிழில் மொழிபெயர்த்த பைபிள் தான் தமிழ் மொழியில் உரைநடை உருவாகி வந்த காலத்தில் வெளிவந்த பெரிய உரைநடைநூல். பின்னர் வேறுபல மொழிபெயர்ப்புகள் வந்த போதிலும் "தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையார்" இன்றளவும் பப்ரிஷியஸ் எழுதிய மொழிபெயர்ப்பு வேதாகமத்தையே பயன்படுத்தி வருகின்றனர். பைபிள்நடை என அறியப்படும் தமிழுக்கு இந்த மொழிபெயர்ப்பே ஆதாரமாக விளங்குகிறது. தமிழ்க் கிறிஸ்தவ சபைகளில் பப்ரிஷியஸ் தமிழில் மொழிபெயர்த்தவையும் எழுதியவையுமான பல ஞானப்பாட்டுக்கள் பாடப்படுகின்றன.

மறைவு

ஜனவரி 23, 1791-ல் பப்ரிஷியஸ் காலமானார். அவர் இறந்தபோது அவருடைய உடலை லுத்தரன் மிஷன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னையில் அவர்களின் ஆளுகையில் இருந்த ஆர்மீனியர்களின் Chapel Nossa Senhora de milagres / Chapel of Our Lady of Miracles என்னும் சிற்றாலய வளாகத்தில் அடக்கம் செய்தனர்.

நினைவுச்சின்னம்

1828ல் சென்னை கிறிஸ்தவ கொள்கை பரப்பும் சங்கமும் (SPCK) ஆங்கிலேய அரசாங்கமும் இணைந்து பழுதடைந்த சிற்றாலயத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் ஒரு புதிய ஆலயத்தை கட்டி 1828ல் ஆலயப் பிரதிருஷ்டை செய்தனர். அப்போது ஆலயக் கல்லறைத் தோட்டத்தில் இருந்த அனைத்துக் கல்லறைகளையும் பழுதுபார்த்து புதுப்பித்தனர். புதுப்பிக்கபபட்ட கல்லறைகளில் பப்ரிஷியஸ் கல்லறையும் ஒன்று. இக்கல்லறையின் மேல் 'Johann’ என்ற அவரது ஜெர்மன் பெயர் 'John’ என்று ஆங்கிலமாக்கப்பட்டிருக்கிறது. சென்னை, வேப்பேரியில் உள்ள ரிதர்டன் சாலையில் (Ritherdon Road) இருக்கும் புதுப்பிக்கப்பட்ட இந்த சிற்றாலயம் தற்போது "தூய. மத்தியாஸ் ஆலயம்" (St. Matthias Church) என்றும், "தி இங்கிலிஷ் சர்ச்" (The English Church) என்றும் அழைக்கப்படுகிறது. பப்ரிஷியஸ் கல்லறையின் மேல் கீழ்க்கண்ட வாசகங்கள் இடம் பெற்றிருக்கின்றன. Blessed are the Dead who die in Lord The Rev. John Philip Fabricious Died: 1791 Well done thou good and faithful servant Erected by The Parishioners of St. Matthias Church For Historical Records.

நூல் பட்டியல்

  • வேதாகம மொழிபெயர்ப்பு
  • ஆங்கில-தமிழ் அகராதி

உசாத்துணை


✅Finalised Page