first review completed

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

From Tamil Wiki
Revision as of 15:38, 29 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved categories to bottom of article)
மணிமேகலை

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் சங்க காலப் புலவர். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை இயற்றியவர். சிலப்பதிகாரம் உருவாகக் காரணமானவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சீத்தலை என்பது மலை நாட்டிலுள்ள ஊரைக் குறிப்பது. அவ்வூரிலுள்ள ஐயனாரை சாத்தனார் என்றழைப்பர். சில அறிஞர்கள் 'சீத்தலை' என்பது திருச்சி மாவட்டம் பெருமாளூர் வட்டத்திலுள்ள ஊர் என்றும் கூறுவர். மதுரையில் நெல்லரிசி, புல்லரிசி, வரகு, தினை, சாமை, சோளம், தோரை, மூங்கில் நெல் ஆகிய எட்டுவகை கூலங்களை விற்கும் வாணிபத்தொழில் மேற்கொண்டு வந்தார். இவர் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர். சமணத் துறவி இளங்கோவடிகளுடன் நெருங்கிய நண்பராக இருந்தார்.

தொன்மம்

புலவர்கள் அவையில் பாடும் பிழையான பாட்டுக்களை சகித்துக் கொள்ள முடியாமல் தலையில் தன் எழுத்தாணியால் குத்திக் கொண்டு சீழ்வடிந்ததால் "சீழ்தலைச் சாத்தனார்" என்றழைக்கப்பட்டார். இந்தச் செய்தியை சாத்தனாரின் சமகாலத்தவரான மருத்துவன் தாமோதரன் திருவள்ளுவமாலையில் பாடியுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

சாத்தனார் கடைச்சங்கப்புலவர்களுள் நக்கீரர், பரணர், கபிலர் போன்றோருடன் ஒப்பு நோக்கத்தக்கவர். சேரமுனியாகிய இளங்கோவடிகள் சீத்தலைச் சாத்தனாரை "தண்டமிழ்ச் சாத்தன்"; "தண்டமிழாசான் சாத்தன்"; நன்னூற்புலவன்" என பாராட்டுகிறார். நற்றிணை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களிலுள்ள சில பாடல்களைப் பாடியுள்ளார். சங்கப்பாடல்களைப் பாடிய சாத்தனார் வேறுநபர் எனக் கூறுவாரும் உளர்.

சிலப்பதிகாரம்

மலைவளம் காணச்சென்ற செங்குட்டுவன் பேராற்றங்கரையில் தங்கியிருந்த போது அங்கு வந்த குறவர்கள் கண்ணகி கணவனோடு விண்ணுலகம் சென்ற செய்தியை அவருக்கு உரைத்தனர். உடனிருந்த சாத்தனார் கண்ணகியின் பெருமைகளை எடுத்துக் கூறி அவளுக்கு கோயில் எழுப்பச் செய்தார். குறவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு குணவாயிற்கோட்டத்தில் அரசு துறந்திருக்கும் இளங்கோவடிகளிடம் கண்ணகியின் கதையை எடுத்துக் கூறி சிலப்பதிகாரம் உருவாகக் காரணமாக அமைந்தார். சாத்தனார் தலைமையில் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை அரங்கேற்றினார்

  • சிலப்பதிகாரம்

மண்களி நெடுவேல் மன்னவற் கண்டு
கண்களி மயக்கத்துக் காதலோ டிருந்த
தண்டமிழாசான் காதலோடு இஃதுரைக்கும்

மணிமேகலை

சாத்தனார் இயற்றிய மணிமேகலை காப்பியம் பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நூல். மணிமேகலை பௌத்த சமயத்தைச் சார்ந்து, துறவியாகிப் பௌத்த சமயத்தைப் போற்றிப் பரப்பிய முறையை இக்காப்பியம் கூறுகிறது. இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என்னும் மூன்று கருத்துகளையும் இக்காப்பியம் அழுத்தமாகக் கூறுகின்றது. மணிமேகலை மேகலை என்னும் தமிழன்னையின் இடைஅணி என்ற பெருமையுடையது.

பாடிய பாடல்கள்
  • நற்றிணை 36
  • அகநானூறு 53
  • அகநானூறு 134
  • புறநானூறு 59

பாடல் நடை

  • மணிமேகலை பதிகம்

இளங்கோ வந்தன் அருளிக் கேட்ப
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திற மணிமேகலை துறவு
ஆறைம் பாட்டில் அறியவைத் தனன்

  • நற்றிணை 36

கல்லக வெற்பன் சொல்லின் தேறி,
யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து,
அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி,
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து,
ஆனாக் கௌவைத்துஆக,
தான் என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே?

  • அகநானூறு 53

இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
பொருளே காதலர் காதல்;
அருளே காதலர்' என்றி, நீயே.

உசாத்துணை


}



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.