under review

மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்

From Tamil Wiki
Revision as of 13:17, 5 June 2023 by Ramya (talk | contribs)
மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்

மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் (1998) காப்புரிமை சிக்கலில்லாத தமிழ் நூல்களை இணையத்தில் அறிவுச்சேகரமாக தொகுத்தளிக்கும் திட்டம். இதன் நிறுவனர் கு. கல்யாணசுந்தரம்.

தொடக்கம்

மதுரைத் திட்டம் 1998இல் பொங்கல் அன்று கு. கல்யாணசுந்தரத்தின் தன்னார்வத்தால் தொடங்கப்பட்ட திட்டம். எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறும் தன்னார்வ முயற்சி. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் இணைந்து செய்யும் பணி. இத்திட்டத்தின் தலைவர் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் கு. கல்யாணசுந்தரம். துணைத்தலைவர் அமெரிக்காவில் வசிக்கும் மல்லிகார்ஜுனன்.

நோக்கம்

உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம்.

திட்டம் பற்றி

  • மதுரைத் திட்டம் உலகில் பல நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் அவரவர் தங்களது வீடுகளில் தனியார் கணினி கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ் இலக்கியங்களை கணினியில் உள்ளிட்டு (அ) பிழை திருத்தி மின்பதிப்புகளாக தயாரிக்கும் ஒரு கூட்டு முயற்சி.
  • தமிழ் இலக்கியங்களை மின்வழி பாதுகாத்து மற்றவர்களுடன் இலவசமாக பகிர்ந்து கொள்வதில் விருப்புள்ள அனைவரும் இத்திட்டதில் பங்கு பெறலாம்.
  • மதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் ஆரம்ப காலத்தில் இணைமதி, மயிலை தமிழ் எழுத்திருக்கள் (fonts) கொண்டு தயாரிக்கப்பட்டது.
  • 1999முதல் இணையம் வழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான இணையம்வழி நிர்மானிக்கப்பட்ட தமிழ் தகுதர (TSCII - Tamil Script Code for Information Interchange) வடிவம் கொண்டு தயாரித்து மின்பதிப்புகள் வெளியிடப்பட்டது.
  • மின்பதிப்புகள் இணையத்தில் இணைய பக்கங்களாகவும், PDF வடிவத்திலும் வினியோகிக்கப்பட வகைசெய்யப்பட்டது.
  • 2003 முதல் பல்மொழி ஒருங்குக் குறியீடு (Unicode) முறையில் மின்னூல்கள் தொகுக்கப்பட்டன.

செயல்பாடு

சங்க கால நூல்கள், நீதிநெறி நூல்கள், இலக்கண நூல்கள், பக்தி நூல்கள் (சைவ, வைணவ, இஸ்லாமிய, கிருத்துவ சமய நூல்கள்) காப்பியங்கள், பிரபந்த வகை நூல்கள், இருபதாம் நூற்றாண்டின் தமிழ்நாட்டு ஆசிரியர் நூல்கள், ஈழத் தமிழர், மலேசியத் தமிழர் நூல்கள் என சங்ககால நூல்கள் முதல் தற்காலத் தமிழ்நூல்கள் வரை அனைத்தும் மதுரைத்திட்டத்தின் வழி பதிவேற்றப்பட்டது. படிமக்கோப்புகளாகவும்(PDF), ஒருங்குகுறி(Unicode) எழுத்துருக்கோப்புகளாகவும், இணையப்பக்கங்களாகவும் தமிழிலக்கியங்கள் மதுரைத்திட்டத்தின் வழியாக வாசகர்கள் தரவிரக்கலாம். தமிழக அரசின் பொதுவுடமையாக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் ஜெயகாந்தன் போன்ற இலக்கிய ஆளுமைகள் ஆகியோர் தாங்களே காப்புரிமை நீக்கி வழங்கிய நூல்கள் என பல தற்கால நூல்களும் மதுரைத் திட்டத்தின் சேகரிப்பில் உள்ளன. ஒரே ஒரு பிரதி மட்டுமே உள்ள, “சிவபுரம்” என்ற தலைப்பில் 1902 ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட நூல் ஜி.யு. போப் அவர்களால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நூலகத்திற்கு வழங்கப்பட்டதை அறிந்து, அங்கு சென்று நூலை படநகல்களாக எடுத்து அவற்றை மின்னாக்கம் செய்தனர்.

உசாத்துணை

இணைப்புகள்


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.