first review completed

செய்கு முஸ்தபா

From Tamil Wiki

செய்கு முஸ்தபா (செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி) (ஜூலை 25,1836- 1888) ஈழத்து தமிழ் இஸ்லாமிய மதத்தலைவர், கவிஞர். காதிரியதுன் நபவிய்யா எனும் இசுலாமிய சூஃபி பிரிவைப் பரப்பினார்.

வாழ்க்கைக் குறிப்பு

செய்கு முஸ்தபா களுத்துறை, பேருவளையில் ஜூலை 25,1836 -ல் பிறந்தார். இஸ்லாத்தின் மூன்றாவது கலீபாவான ஹஸ்ரத் உஸ்மான் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வழித்தோன்றல்.மிக இளமையில் தாயையும், தந்தையும் இழந்தார். பின்னர் தனது சகோதரியின் அரவணைப்பில் வாழ்ந்தார். சிறுவயதிலேயே அரபு எழுத்தணிக்கலையில் (அப்ஜத்) தேர்ச்சி பெற்றிருந்தார்.தனது பன்னிரெண்டாவது வயதில் கல்வியைத் தொடர்வதற்கு இந்தியாவின் காயல்பட்டினம் சென்றார். அங்கு தப்ஸீர் (அல்-குர்ஆன் விளக்கவுரை), ஹதீஸ், பிக்ஹ் போன்ற இஸ்லாமியக் கல்வி கற்றார். மக்கா நகருக்குச் சென்று அங்கு புனித மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலின் (கஹ்பா பள்ளிவாசல்) இமாமான செய்குல் இஸ்லாம் முப்தி ஸைனி தெஹ்லான் றஹ்மதுல்லாஹி அலைஹியிடம் கல்வி கற்றார். தனது கல்வியை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பினார். இலங்கையில் தனது சன்மார்க்கப் பணியினைத் தொடர்ந்தார்.

ஆன்மிக வாழ்க்கை

இலங்கையில் யெமன் தேசத்தைச் சேர்ந்த செய்கு அஹ்மத் முபாரக் றஹ்மதுல்லாஹி அலைஹியைத் தனது ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்டார். செய்கு அஹ்மத் முபாரக் றஹ்மதுல்லாஹி அலைஹி, காதிரியதுன் நபவிய்யா எனும் இசுலாமிய சூபி சிந்தனைப் பிரிவைத் தோற்றுவித்தார். இவர்கள் இருவரும் சன்மார்க்கப் பணிக்காக இலங்கையின் காலி, மல்வானை, கஹடோவிட போன்ற இடங்களுக்கு சென்று, அங்கு இஸ்லாமிய ஆன்மிக நிலையங்களை உருவாக்கினர். பேருவளையில் காதிரியதுன் நபவிய்யா இஸ்லாமிய சூபி சிந்தனைப்பிரிவின் தலைமையகத்தை இவர்கள் நிறுவினர். செய்கு அஹ்மது முபாரக் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பொ.யு.1862-ல் மரணமடைந்தார். காலி தளாபிட்டிய ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு அருகாமையில் அடக்கம் செய்யப்பட்டார்கள். செய்கு அஹ்மது முபாரக் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்குப் பின்னர் செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி காதிரியதுன் நபவிய்யா இஸ்லாமிய சூபி சிந்தனைப்பிரிவின் தலைவராக இருந்தார். அதற்கான உத்தரவும் அனுமதியும், செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு செய்கு அஹ்மது முபாரக் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களால் கொட்டியாக்கும்புர நகருக்கு அண்மையிலுள்ள அம்பைப்பள்ளியில் வைத்து ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் காலத்தில் இலங்கைக்கு வந்து பேருவளையில் அவர்களைச் சந்தித்த யெமன் நாட்டைச் சோந்த இஸ்லாமிய அறிஞர் அஹ்தல் மௌலானா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களால் பேருவளை மாளிகாச்சேனை தக்கியாவில் வருடாந்த புகாரி ஹதீஸ்கிரந்த பாராயண மஜ்லிஸ் ஆரம்பிக்கப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

இவர் பத்குர் ரஹ்மா பி தர்ஜிமதில் குர்ஆன் (அரபுத் தமிழில் எழுதப்பட்ட உலகின் முதலாவது புனித அல்குர்ஆன் விளக்கவுரை நூல்), மீதான் மாலை, பவாரிகுல் ஹிதாயா, பாகியாதுஸ் ஸாலிஹாத் நூல்களை இயற்றினார்.

மறைவு

செய்கு முஸ்தபா 1888-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • பத்குர் ரஹ்மா பி தர்ஜிமதில் குர்ஆன்
  • மீஸான் மாலை (1864)
  • பவாரிகுல் ஹிதாயா
  • பாகியாதுஸ் ஸாலிஹாத்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.