being created

ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

From Tamil Wiki
Revision as of 19:17, 15 February 2023 by ASN (talk | contribs) (Page created; Para Added, Images Added)
கவிஞர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

ஆலந்தூர் கோ. மோகனரங்கன் (பிறப்பு: ஜூன் 1, 1942-இறப்பு: அக்டோபர் 4, 2019) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், பதிப்பாளர். நூலகராகப் பணியாற்றினார். சிறார்களுக்காகப் பல பாடல்களை, கதைகளை எழுதினார். வசந்தா பதிப்பகம் என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி, அச்சில் இல்லாத பழைய நூல்கள் பலவற்றை மீண்டும் பதிப்பித்தார். தமிழக அரசின் விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

ஆலந்தூர் கோ. மோகனரங்கன், சென்னையில் உள்ள ஆலந்தூரில், ஜூன் 1, 1942 அன்று, மா. கோபால்-மீனாம்பாள் இணையருக்குப் பிறந்தார். ஆலந்தூரில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். சென்னை தியாகராய நகர் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வி கற்றார். பணியாற்றிக் கொண்டே அஞ்சல் வழி பயின்று புலவர் பட்டம் பெற்றார். முதுகலைத் தமிழ் பயின்றார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில், நேரடி மாணவராகச் சேர்ந்து ‘தமிழ்க் கவிதைகளில் சந்த அமைப்பு-வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் சிறப்பாய்வு” என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ஆலந்தூர் கோ. மோகனரங்கன் நூலகராகப் பணியாற்றினார். மனைவி வசந்தா. பிள்ளைகள் முனைவர் மோ.பாட்டழகன், மருத்துவர் கவிமணி, மருத்துவர் மோ.தேன்மொழி, மோ.வெற்றியரசி, மருத்துவர் மோ.அன்புமலர், மருத்துவர் மோ.கலைவாணன்.

இலக்கிய வாழ்க்கை

ஆலந்தூர் கோ. மோகனரங்கன் பள்ளியில் படிக்கும்போதே இலக்கிய ஆர்வம் உடையவராக இருந்தார். ’புதிய பாதை’ என்ற கையெழுத்து இதழினை நடத்தினார். நூலக வாழ்க்கை இவரை எழுத்தாளராக்கியது. ஆலந்தூரில் ’கவிதை வட்டம்’ என்ற இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் பல கவியரங்க நிகழ்வுகளை நடத்தினார். திரைப்படப் பாடலாசிரியராக விரும்பிப் பல முயற்சிகளை மேற்கொண்டார். பின்னர் அதனைக் கைவிட்டு கவிதைகளில் தனது கவனத்தைச் செலுத்தினார். இலக்கிய இதழ்களில் பல்வேறு கவிதைகளை எழுதினார். மரபு, புதுக்கவிதை என இரண்டிலும் தேர்ந்தவராக இருந்த மோகனரங்கன், இசைப் பாடல்களும் எழுதினார். ‘குறும்பா’ என்னும் பெயரிலும், ’குறுந்தொகையின் குழந்தைகள்' என்னும் பெயரிலும் ஹைக்கூ நூல்களைஎழுதினார். கவிதை நாடகங்கள், வாழ்க்கை வரலாறுகள் பல எழுதினார். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்குபெற்றார். இயல், இசை, நாடகம் என மூன்று துறைகளிலும் நூற்றுக்குமேற்பட்ட நூல்களை எழுதினார்.

தில்லியில் உள்ள தேசியப் புத்தக நிறுவனம், (நேஷனல் புக் ட்ரஸ்ட்) மோகனரங்கனின் கவிதைகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்த்து வெளியிட்டது. ஞானபீட நிறுவனம் இவரது கவிதைகளை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டது. இவரது படைப்புகளை ஆராய்ந்து பல மாணவர்கள் முனைவர், இள முனைவர் பட்டம் பெற்றனர். மலேசியாவில் நடைபெற்ற ஆறாம் உலகத்தமிழ் மாநாடு, மொரீஷியஸில் நிகழ்ந்த ஏழாம் உலகத் தமிழ் மாநாடு, தஞ்சாவூரில் நடந்த எட்டாம் உலகத் தமிழ் மாநாடு ஆகியவற்றில் கலந்துகொண்டு கவிதைகள் வாசித்தார். பாங்காக் நகரில் நடைபெற்ற உலகக் கவிஞர்கள் மாநாட்டில் பங்கு கொண்டார்.

ஆலந்தூர் கோ. மோகனரங்கன் சிறார் நூல்கள்
சிறார் இலக்கியம்

சிறார் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்ட ஆலந்தூர் கோ. மோகனரங்கன் குழந்தைகளுக்காகப் பல பாடல்களை, நாடகங்களை எழுதினார்.’பொய்யே நீ போய்விடு' என்பது இவர் எழுதிய முதல் சிறார் நாடகம். இவர் கவிதைகள் பள்ளி மாணவர்களின் பாட நூல்களில் இடம் பெற்றன. தமிழகத்தில் மட்டுமல்லாது கர்நாடகம், சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ் போன்ற நாடுகளின் தமிழ்ப் பாடப் புத்தகங்களிலும் இவரது கவிதைகள் இடம் பெற்றன.

இவர் எழுதிய ‘அழகிய தமிழில் எழுதுங்கள்’ என்ற குழந்தைப் பாடல்கள் நூல், தமிழக அரசின் கரும்பலகைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டது.

பதிப்பு

ஆலந்தூர் கோ. மோகனரங்கன், பழந்தமிழ் இலக்கியங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அச்சில் இல்லாத நூல்களை மீண்டும் பதிப்பிக்க, மோகனரங்கனின் மனைவி வசந்தா மோகனரங்கன் ‘வசந்தா பதிப்பக’த்தைத் தொடங்கினார். அதன் மூலம் ஆறுமுக நாவலர், சுன்னாகம் குமாரசாமிப் புலவர், சபாபதி நாவலர், பரிதிமாற்கலைஞர், அரசஞ் சண்முகனார் போன்றோரின் நூல்களை வெளியிட்டார். திருமணம் செல்வக்கேசவராய முதலியார், மறைமலையடிகள், திரு.வி.கலியாண சுந்தர முதலியார், கா.சுப்ரமணியப்.பிள்ளை, மயிலை சீனி வேங்கடசாமி, கா.அப்பாத்துரை போன்றோரின்  நூல்களை மறுபதிப்புச் செய்து வெளியிட்டார். அண்ணா  1942 முதல் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து  22 தொகுதிகளாக வெளியிட்டார்.  

கலைஞர் மு. கருணாநிதி விருது

விருதுகள்

  • ‘வணக்கத்துக்குரிய வரதராசனார் கதை' என்னும் நூல், 1982-ல், குழந்தை இலக்கியப் படைப்பில் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான முதல் பரிசு பெற்றது.
  • ’இமயம் எங்கள் காலடியில்’ என்னும் கவிதைத் தொகுப்பு நூல் தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான வகைமையில் இரண்டாம் பரிசு பெற்றது.
  • ‘கொஞ்சு தமிழ்க் கோலங்கள்’ தொகுப்புக்கு அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது கிடைத்தது.
  • ‘பொன்னம்மா ஒரு புதுமைப்பெண்’  நாடகம், ஏ.வி.எம்.அறக்கட்டளையின் தங்கப் பதக்கம் பெற்றது.
  • தமிழக அரசின் பாவேந்தர் விருது.
  • நாரண துரைக்கண்ணன் வழங்கிய ‘கவிவேந்தர்' விருது.
  • வி.ஜி.பி. தமிழ்ச் சங்கம் வழங்கிய வி.ஜி.பி. விருது.
  • வாணுவம்பேட்டை திருவள்ளுவர் இலக்கிய மன்றம் வழங்கிய ‘இலக்கிய ஆய்வுச் சுடர்’ விருது.
  • மாம்பலம் சந்திரசேகர் வழங்கிய சான்றோர் விருது.
  • கலைஞர் மு. கருணாநிதி விருது
  • குழந்தை எழுத்தாளர் சங்கம் வழங்கிய ‘குழந்தை இலக்கிய மாமணி' பட்டம்.
  • முத்தமிழ்க் கவிஞர் பட்டம்
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் Federation Radio Children’s Listening Club இணைந்து வழங்கிய ‘குழந்தை இலக்கிய ரத்னா’ பட்டம்.

மறைவு

ஆலந்தூர் கோ. மோகனரங்கன், அக்டோபர் 4, 2019 அன்று  காலமானார்.

ஆவணம்

‘ஒரு கிளை நூலகரின் தமிழ்ப் பயணம்' என்ற தலைப்பில், ஆலந்தூர் கோ. மோகனரங்கனின் வாழ்க்கையை நூலாகத்  தொகுத்துள்ளார், மருத்துவர் மோ. கவிமணி.

’ஆலந்தூர் மோகனரங்கன் இலக்கிய உறவுகள்’ என்ற தலைப்பில் முனைவர் மோ. பாட்டழகன் நூல் ஒன்றைத் தொகுத்துள்ளார்.

‘ஐக்கூ உலகில் ஆலந்தூர் மோகனரங்கன்’ என்ற தலைப்பில் புலவர் குடந்தை பாலு நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

‘பாரதிதாசன் பரம்பரையில் ஆலந்தூர் மோகனரங்கன்’ என்ற தலைப்பில் கவிஞர் வான்முகில் நூல் ஒன்றைப் படைத்துள்ளார்.

மதுரை யாதவர் கல்லூரி மாணவர் மு.கண்ணன் ‘ஆலந்தூர் கோ. மோகனரங்கன் கவிதைகள்-ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து எம்.பில். பட்டம் பெற்றார்.

மாணவர் ராசா,  சென்னைப் பல்கலைக் கழகத்தில்,  ஆலந்தூர் கோ. மோகனரங்கனின் கவிதைத் தொகுப்பான, ‘இமயம் எங்கள் காலடியில்' என்ற நூலை ஆய்வு செய்து எம்.பில். பட்டம் பெற்றார்.

சாவித்திரி . ‘பூவை அமுதன், பி.வி.கிரி, ஆலந்தூர் கோ. மோகனரங்கன் ஆகியோரின் சிறுவர் இலக்கியப்பணிகள்’ என்றதலைப்பில் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

“ஆலந்தூர் கோ. மோகனரங்கனின் ‘சித்திரப் பந்தல்' கவிதைத் தொகுப்பில் சமுதாயப் பார்வை” என்ற தலைப்பில், பி.ஜோணிமோசஸ் ஆய்வு செய்து, எம்.பில். பட்டம் பெற்றார்.

“ஆலந்தூர் கோ. மோகனரங்கன் படைப்புகளில் புதினங்கள்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து, பெ. ராமமூர்த்தி முனைவர் பட்டம் பெற்றார்.

ஆலந்தூர் கோ. மோகனரங்கன் நினைவேந்தல்

நினைவேந்தல்

2015 ஆம் ஆண்டு முனைவர் மோ.பாட்டழகனால்  ’கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம்’ என்ற ஆய்வு மையம் ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலம் பல கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பன்னாட்டுக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. அதில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் நூல்களாக வெளியிடப்பட்டன.

முனைவர் மோ.பாட்டழகன், 2018-ஆம் ஆண்டு ’கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் ஃபவுண்டேஷன்” என்ற அறக்கட்டளை அமைப்பை நிறுவினார். இதன் கீழ், ’கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்’, ’கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் சட்டவியல் ஆய்வு நிறுவனம்’ ஆகியன இயங்கி வருகின்றன.

‘முத்தமிழ் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன் ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சி மையம்’ என்ற அமைப்பும் சேவைப் பணியாற்றி வருகிறது.

இலக்கிய இடம்

இசைப் பாடல், எழுத்து, நாடகம் என்று பல்துறைகளில் செயல்பட்டாலும் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் அடிப்படையில் கவிஞர். சந்த நடையில் பல பாடல்களை எழுதினார். சிறார்களைக் கவரும் வகையில் பல குழந்தைப் பாடல்களை எழுதினார். கவிஞராகவும், சிறார் பாடல்கள் பலவற்றைத் தந்தவராகவும் அறியப்படுகிறார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அழ. வள்ளியப்பா, குழ. கதிரேசன் போன்ற குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் வரிசையில் ஆலந்தூர் கோ. மோகனரங்கனும் இடம் பெறுகிறார்.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.