தாரா செரியன்
தாரா செரியன் (Tara Cherian) (மே 1913 - நவம்பர் 7, 2000) சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர், இந்தியாவின் முதல் பெண் மேயர். சமூக செயற்பாட்டாளர், அரசியல்வாதி.
வாழ்க்கைக் குறிப்பு
தாரா செரியன் மே 1913இல் பிறந்தார். சென்னை மகளிர் கிறுஸ்தவக் கல்லூரியில் படித்தார். ‘கில்ட் ஆஃப் சர்வீஸ்’ நிறுவனத்தில் இணைந்து வேலை பார்த்தார். கணவர் செரியனும் மேயராக இருந்தார்.
அரசியல் வாழ்க்கை
தாரா செரியன் 1957இல் சென்னை மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதன்மையாக மாநகராட்சிக்கான வருமானம் மோட்டார் வாகன வரி, முழு டெர்மினல் வரி மூலமும் கிடைக்கச் செய்தார்.
சிங்காரச் சென்னை
”சிங்காரச் சென்னை” திட்டத்திற்கு அடித்தளம் அமைத்தார். பெரிய திட்டங்களை இயற்றாமல், அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் சின்ன சின்ன விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி மக்களின் வாழ்வை மேம்படுத்தினார். சேரிகளில் வசிப்பவர்களுக்குச் சுத்தமான தண்ணீர், முறையான மின்சாரம், கழிவறை போன்றவற்றை வழங்குவதில் கவனம் செலுத்தினார். மருத்துவரின் மனைவியான தாரா செரியன் பல மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழுக்களில் இருந்தார். மாநகராட்சி மக்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் இலவச, அடிப்படை மருத்துவ உதவிகள் விளிம்பு நிலை மக்களுக்கு கிடைக்கச் செய்தார்.
பள்ளிக்கல்வி
282 பள்ளிகள் இருக்கு சென்னை மாநகராட்சியில் கட்டாயக் கல்வியைக் கொணர்ந்தார். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ”மேயரின் மதிய உணவுத் திட்டம் மற்றும் ஆடைகள்” திட்டம் அப்போதைய மத்திய நிதிஅமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியின் உதவியுடன் 1958இல் கொணர்ந்தார்.
விருது
- 1967இல் இந்திய அரசு தாரா செரியனுக்கு பத்ம பூஷன் விருதை வழங்கியது.
மறைவு
தாரா செரியன் நவம்பர் 7, 2000இல் தாரா செரியன் காலமானார்.
உசாத்துணை
- ‘முதல்’வர்கள்: சென்னையின் பெண் ஆளுமைகள்: இந்து தமிழ் திசை
- When Chennai got its first woman Mayor: V.V. RADHAKRISHNAN