சிற்றிலக்கியங்கள்

From Tamil Wiki
Revision as of 15:26, 10 February 2022 by Jeyamohan (talk | contribs)

சிற்றிலக்கியங்கள் : தமிழில் பொயு ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றிய ஓர் இலக்கிய வகை. பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள், புராணங்கள் ஆகியவை அல்லாத சிறியவகை நூல்களை இவை குறிக்கின்றன.

சிற்றிலக்கியம் எனும் சொல்

சிற்றிலக்கியம் என்னும் பெயர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவானது. அதற்கு முன்பிருந்த பெயர் பிரபந்தங்கள். மு.அருணாச்சலம் ’பிரபந்தம் என்ற சொல் வடமொழி. செம்மையாக்கப்பட்டது என்பது இதன் பொருள்.இக்காலத்தில் இதைச் சிற்றிலக்கியம் என்று சொல்கிறோம். காப்பியங்களை பேரிலக்கியங்கள் என்று சொல்லி இதனால் பிரபந்தத்தை சிற்றிலக்கியம் என்று சொல்கின்ற மரபு புதிதாகப் படைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.’

சிற்றிலக்கிய எண்ணிக்கை

பிரபந்தங்கள் 96 என்பது பிற்காலத்துக் கணக்கு. ’தொண்ணூற்றாறு கோல பிரபந்தங்கள் கொண்ட பிரான்’ என படிக்காசுப்புலவர் தன்னை ஆதரித்த சிவந்தெழுந்த பல்லவராயன் என்னும் சிற்றரசனைப்பற்றி பொயு 1686 ல் பாடிய உலாவில் குறிப்பிட்டிருப்பதை உ.வே.சாமிநாதய்யர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் அதற்கு முந்தைய சிற்றிலக்கிய இலக்கணங்களை வகுக்கும் தொன்மையான பாட்டியல் நூல்களில் அவ்வெண்ணிக்கை இல்லை என மு.அருணாசலம் சொல்கிறார். மிகப்பழைய பாட்டியல் நூலான பன்னிரு பாட்டியலில் சொல்லப்படும் நூல்வகை 81 தான். பின்னர் வந்த பாட்டியல்நூல்கள் சொல்லும் நூல்வகைகள் பின்னர் உருவானவை.

வீரமாமுனிவர் எழுதிய சதுரகராதி பொயு பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதில்தான் 96 பிரபந்தங்களின் எண்ணிக்கையும் பட்டியலும் வருகிறது. ஆனால் சதுரகராதி சொல்லும் சில பிரபந்த வகைகள் பிற்காலத்தைய பாட்டியல் நூல்களில் இல்லை. அவற்றில் வேறு நூல்வகைகள் குறிப்பிடப்படுகின்றன.

பிள்ளைக் கவி முதல் புராணம் ஈறாக

தொண்ணூற்றாறெனும் தொகையதான

முற்பகரியல்பு முன்னுற கிளர்க்கும்

பிரபந்த மரபியல்

என்று 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனப்படும் பிரபந்த மரபியல் 96 என்னும் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது. இந்நூல் முழுமையும் சிதைந்த நிலையில் கிடைக்கின்றது

96 என்ற எண் சாத்திரங்களின் எண்ணிக்கையாக பொதுவாகச் சொல்லப்பட்டு வந்தது என்று மு.அருணாசலம் சொல்கிறார். மணிமேகலையில் பாசண்ட சாத்தன் “பண்ணாற் திறத்திற் பழுதின்றி மேம்பட்ட தொண்ணூற்றாறு வகை கோவையும் வல்லவன்” என்று சொல்கிறான். 96 என்னும் எண் முக்கியமாதலால் எழுதப்பட்ட எல்லாவகை பாடல் வகைகளையும் இணைத்து அந்த பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது மு.அருணாச்சலம் கூற்று

சிற்றிலக்கிய வகைகள்

  1. அகப்பொருட்கோவை
  2. அங்கமாலை
  3. அட்டமங்கலம்
  4. அரசன்விருத்தம்
  5. அலங்காரபஞ்சகம்
  6. அனுராகமாலை
  7. ஆற்றுப்படை
  8. இணைமணி மாலை
  9. இயன்மொழி வாழ்த்து
  10. இரட்டைமணிமாலை
  11. இருபா இருபது
  12. உலா
  13. பவனிக்காதல்
  14. உலாமடல்
  15. உழத்திப்பாட்டு
  16. உழிஞைமாலை
  17. உற்பவமாலை
  18. ஊசல்
  19. ஊர் நேரிசை
  20. ஊர்வெண்பா
  21. ஊரின்னிசை
  22. எண்செய்யுள்
  23. ஐந்திணைச் செய்யுள்,
  24. ஒருபா ஒருபது
  25. ஒலியந்தாதி
  26. கடைநிலை
  27. கண்படைநிலை
  28. கலம்பகம்
  29. காஞ்சிமாலை
  30. காப்புமாலை
  31. குழமகன்
  32. குறத்திப்பாட்டு
  33. கேசாதிபாதம்
  34. கைக்கிளை
  35. கையறுநிலை
  36. சதகம்
  37. சாதகம்
  38. சிறுகாப்பியம்
  39. சின்னப்பூ
  40. செருக்களவஞ்சி
  41. செவியறிவுறூஉ
  42. தசாங்கத்தயல்
  43. தசாங்கப்பத்து
  44. தண்டகமாலை
  45. தாண்டகம்
  46. தாரகைமாலை
  47. தானைமாலை
  48. எழுகூற்றிருக்கை
  49. தும்பைமாலை
  50. துயிலெடை நிலை
  51. தூது
  52. தொகைநிலைச்செய்யுள்
  53. நயனப்பத்து
  54. நவமணிமாலை
  55. நாமமாலை
  56. நாழிகைவெண்பா
  57. நான்மணிமாலை
  58. நானாற்பது
  59. நூற்றந்தாதி
  60. நொச்சிமாலை
  61. பதிகம்
  62. பதிற்றந்தாதி
  63. பரணி
  64. பல்சந்தமாலை
  65. பன்மணிமாலை
  66. பாதாதிகேசம்
  67. பிள்ளைக்கவி
  68. புகழ்ச்சி மாலை
  69. புறநிலை
  70. புறநிலைவாழ்த்து
  71. பெயர் நேரிசை
  72. பெயரின்னிசை
  73. பெருங்காப்பியம்
  74. பெருமகிழ்ச்சிமாலை
  75. பெருமங்கலம்
  76. போர்க்கெழுவஞ்சி
  77. மங்கலவள்ளை
  78. மணிமாலை
  79. முதுகாஞ்சி
  80. மும்மணிக்கோவை
  81. மும்மணிமாலை
  82. முலைப்பத்து
  83. மெய்க்கீர்த்திமாலை
  84. வசந்தமாலை
  85. வரலாற்று வஞ்சி
  86. வருக்கக் கோவை
  87. வருக்கமாலை
  88. வளமடல்
  89. வாகைமாலை
  90. வாதோரணமஞ்சரி
  91. வாயுறைவாழ்த்து
  92. விருத்தவிலக்கணம்
  93. விளக்குநிலை
  94. வீரவெட்சிமாலை
  95. வெட்சிக்கரந்தைமஞ்சரி
  96. வேனில் மாலை

தமிழ் டிஜிட்டல் லைப்ரரி பிரபந்த மரபியல். முன்னுரை. மு.அருணாச்சலம்