செகராசசேகரன் (மன்னர்)
செகராசசேகரன் (மன்னர்) (ஆட்சிகாலம்: 1380-1414) யாழ்ப்பாண மன்னர். இவர் காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் இவர் பெயரில் வெளிவந்தன.
வாழ்க்கைக் குறிப்பு
செகராசசேகரன் ஈழத்து தமிழ் யாழ்ப்பாணத்தில் நல்லூரை ஆட்சி செய்த மன்னர். ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என்ற நூலின் படி சிங்கைச் செகராசசேகரனது ஆட்சிக்காலம் பொ.யு. 1380 முதல் 1414 வரை . கனகசூரிய சிங்கை ஆரிய மன்னரின் மகன். பரராசசேகர மன்னரின் இவரின் சகோதரர்.
அமைப்புப் பணிகள்
யாழ்ப்பாணத்தில் தமிழ்ச்சங்கம் அமைத்துச் செயல்படுத்தினார். அழிவுற்ற சரஸ்வதி மகாலயத்தைப் புதுப்பித்து நடத்தி வந்தார்.
இலக்கிய வாழ்க்கை
செகராசசேகரன் தட்சிண கைலாய புராணம் நூலை இயற்றினார். இவர் காலத்தில் எழுந்த நூல்கள் இவரது பெயரில் வெளியாகியுள்ளன. சோம ஐயர் செகராசசேகர மாலை என்னும் ஜோதிட நூலை இவர் பெயரில் பாடினார். செகராசசேகரம், பரராசசேகரம், அங்காதிபாதம் போன்ற வைத்திய நூல்களும் இவர் காலத்தில் எழுதப்பட்டன. பண்டிதராசர் என்னும் புலவரும் தக்ஷண கைலாச புராணம் என்னும் புராணத்தை இயற்றினார். செகராசசேகரனால் 632 விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட தக்கிண கைலாச புராணம் அரசகேசரியின் பாயிரத்தைக் கொண்டது. பண்டிதராசர் இயற்றிய நூலுக்கு, கவிவீர ராகவன் என்னும் புலவர் பாயிரம் எழுதினார்.
மறைவு
செகராசசேகரன் பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலமானார்.
இவர் பெயரில் வெளியாகிய நூல்கள்
- தட்சிண கைலாய புராணம்
- செகராசசேகர மாலை
- செகராசசேகரம்
- பரராசசேகரம்
- அங்காதிபாதம்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:செகராசசேகரன்:நூலகம்
✅Finalised Page