second review completed

அல்லி (நாவல்)

From Tamil Wiki
அல்லி மு.வ

அல்லி (1952) மு. வரதராசனார் எழுதிய நாவல். ஆண் பெண் உறவைப்பற்றிய புறவயமான ஆய்வுநோக்கை முன்வைக்கும் படைப்பு.

எழுத்து, பிரசுரம்

மு. வரதராசனார் எழுதிய தொடக்ககால நாவல்களில் ஒன்று. 1952-ல் இது நூலாக வெளிவந்தது. இதை டாக்டர் அல்லி என்ற பேரில் நாடகமாகவும் எழுதியிருக்கிறார்.

கதைச்சுருக்கம்

அல்லி ஒரு மருத்துவர். படிக்கும்போதே அவள் மணமுடிக்கப்படுகிறாள். கணவன் பாலியல்பிறழ்வுகள் கொண்டவன். அவர்களின் மணவாழ்க்கை முறிகிறது. பாலியல் பிறழ்வின் காரணங்களைக் கண்டறியும்பொருட்டு தன் முன் வரும் நோயாளிப்பெண்களை ஆராயும் அல்லி பாலியல்நூல்கள் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் கலைகளே காரணம் என்று கண்டறிகிறாள். எது குற்றம் என்னும் நூலில் அதை எழுதி புகழ் அடைகிறாள். அவள் கணவன் தவறை உணர்ந்து ஒரு குறிப்பு எழுதுகிறான். அக்குறிப்பை தற்செயலாக ஒரு பழைய புத்தகக்கடையில் கண்டடையும் அல்லி அவனை தேடிச்செல்கிறாள். அதற்குள் அவன் இறந்து விட்டிருக்கிறான்.

’இதுவரையில் தவறு செய்தவர்களை பிடித்துப் பிடித்து விடாமல் தண்டித்து வந்து என்ன பயன் கண்டோம்? குற்றங்கள் வளர்ந்து வருகின்றனவே தவிர, குறையவில்லை. உடம்பில் உட்கார்ந்து கடித்த கொசுக்களாகப் பார்த்து அவைகளை வேட்டையாடி நசுக்கிப் பொசுக்கி விடுவதில் வல்லவர்களாக இருக்கிறோம். அதற்காகவே நீதிமன்றங்கள், சிறைக் கூடங்கள் எல்லாம் ஏற்படுத்தி, ஏராளமாகச் செலவழித்து வருகிறோம். ஆனால் கொசுக்கள் வளர்வதற்கு இடம் தருகின்ற சாக்கடைகளையும் தேக்கங்களையும் ஒழித்துச் சீர்ப்படுத்துவதற்கு அதில் கால்பங்கு முயற்சியும் செய்வதில்லை’ என்று சொல்லும் ஆசிரியர் அந்த கோணத்தில் பாலியல் பற்றிய ஒழுக்கவாதச் சிந்தனைகளை எழுதியிருக்கிறார்.

இலக்கிய இடம்

இந்நாவல் தமிழ்ச்சூழலில் ஃப்ராய்டியப் பார்வை உருவாவதற்கு முந்தைய பாலியல் அணுகுமுறையைக் காட்டும் நூலாக கருதப்படுகிறது. மரபான பார்வை கொண்ட நாவல் இது.

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.