being created

குகை நமசிவாயர்

From Tamil Wiki
Revision as of 13:54, 7 November 2022 by ASN (talk | contribs) (Para Added)
குகை நமசிவாயர் :

கர்நாடகாவில் பிறந்து, தமிழ்நாட்டின் திருவண்ணாமலைக்கு வந்து, வாழ்ந்து மறைந்த ஞானிகள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர் குகை நமசிவாயர். இவரது காலம் பொதுயுகம் 16-ம் நூற்றாண்டு.

தோற்றம்

லிங்கத்தையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுபவர்கள் 'லிங்காயத்' என அழைக்கப்பட்டனர். கர்நாடகாவில் உள்ள மல்லிகார்ஜூனம் என்ற பகுதியில், அப்படி ‘லிங்காயத்துக்கள்’ ஆக வாழ்ந்து வந்த சிவத் தொண்டர் குடும்பத்தில் தோன்றியவர் நமசிவாயர்.

இறை பக்தி

நமசிவாயர் இளம் வயதுமுதலே பக்தியில் நாட்டம் உடையவராக இருந்தார். இளைஞரானதும் ஸ்ரீசைலம் சென்று அங்கு வாழ்ந்த யோகி சிவானந்த தேசிகரைச் சரணடைந்தார். அவருக்குத் தொண்டு செய்து வந்தார். அவரால் தீட்சை அளிக்கப்பெற்றார்.

திருவண்ணாமலை பயணம்

ஒரு நாள், நமசிவாயரின் கனவில் தோன்றிய அருணாசலேஸ்வரர், தனது தலத்திற்கு வந்துசேருமாறு கட்டளையிட்டார். அதனை குருவிடம் தெரிவித்து அவரது ஆசியுடன் அண்ணாமலைக்குப் புறப்பட்டார் நமசிவாயர். உடன் சக சீடரான விருபாக்ஷ தேவர் என்பவரும் பயணப்பட்டார்.

வழியில் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டனர் இருவரும். ஆணவத்துடன் ஆட்சி செய்த தொண்டை மன்னனின் ஆணவத்தை அகற்றினர். அற்புதங்கள் பலவற்றை அரங்கேற்றி, ‘சைவ சமயமே மெய்ச் சமயம்’ என்பதை மன்னனுக்கு உணர்த்தினர்.

அண்ணாமலையில் தவ வாழ்க்கை

அண்ணாமலைக்கு வந்த இருவரும் மலையில் ஒரு புறத்தில் தனித் தனியாகத் தங்கினர். விருபாக்ஷித் தேவர் தங்கியிருந்து தவம் செய்த குகை பிற்காலத்தில் ‘விருபாக்ஷி குகை’ என்றும், நமசிவாயர் தங்கி தியானம் செய்து வந்த குகை, ‘நமசிவாயர் குகை’ என்றும் அழைக்கப்பட்டது.

நமசிவாயர் காலையில் எழுவார். காலைக் கடன்களை முடிப்பார். அண்ணாமலையார் ஆலயத்திற்குச் செல்வார். குருவின் வழிமுறையின்படி ஆலயத்துக்குள் செல்லாமல் வெளியில் இருந்தபடியே பூஜை, வழிபாடு செய்வார். பின் வீடுகளுக்குச் சென்று உணவுக்காக யாசிப்பார். யாரேனும் உணவளித்தால் உண்பார். இல்லாவிட்டால் அன்று முழுவதும் பட்டினியாக இருப்பார்.

தண்டனை

ஒரு சமயம், தன் குரு போதித்திருந்தபடி அண்ணாமலை ஆலயத்தின் உள்ளே செல்லாது ராஜ கோபுரத்தின் முன்னின்றபடியே வணங்கினார் குகை நமசிவாயர்.  அதை தினம்தோறும் கவனித்து வந்தார் சிவாக்ரக யோகி என்னும் மற்றொரு மகான். 'குமை நமசிவாயர் இறைவனை அவமானப்படுத்துகிறார்' என எண்ணி, ஒருநாள் தன் கையில் உள்ள பிரம்பால் நமசிவாயரின் முதுகில் நையப் புடைத்தார். நமசிவாயரோ அவரை எதிர்த்து ஏதும் கூறாமல், தன்னுடைய தீய மனோபாவங்களை விலக்கவே இறைவன் தன்னை தடியால் அடித்திருக்கின்றார் எனப் பொருள்படும்படி தமிழில் ஒரு வெண்பாப் பாடி சிவாக்ரக யோகியைப் பணிந்தார்.

உண்மையான ஒரு துறவியை அடித்து விட்டோமே என்று எண்ணி சிவாக்ரக யோகி மனம் வருந்தினார்.

சிவ தரிசனம்

ஒருநாள், குகை நமசிவாயர், அண்ணாமலையார் ஆலயம் அருகே வந்து கொண்டிருந்தபோது குருவான சிவானந்த தேசிகர் எதிரே வந்தார். அதுகண்ட நமசிவாயர் மகிழ்ந்து குருவை வணங்கித் துதித்தார். குரு, அண்ணாமலை ஆலயத்துள் நுழைந்தார். நமசிவாயரும் அவரைப் பின் தொடர்ந்தார். இருவரும் அண்ணாமலையார் திருவுருமுன் சென்று நின்றனர். கண்களை மூடி உள்ளம் உருக, இறைவன் மீது பாடல்களைப் பாடித் தொழுதார் நமசிவாயர். அவர் மீண்டும் கண் விழித்துப் பார்த்த போது குரு அங்கே இல்லை. மாயமாய் மறைந்து விட்டிருந்தார். தனக்கு அருள் செய்ய அருணாலரே அங்கு குரு உருவில் வந்தார் என்பதை உணர்ந்தார் நமசிவாயம். இறைவனின் கருணயை எண்ணி வியந்தார். சிவபெருமானைப் பல பாடல்கள் பாடித் துதித்தார்.

குகையில் தவம்

அதுமுதல் தினந்தோறும் அருணாசலேஸ்வரர் ஆலயத்திற்கு வருவதும், பூமாலையோடு பாமாலை சாற்றுவதும் நமசிவாயரின் வழக்கமானது. ஒருநாள் நமசிவாயரின் கனவில் தோன்றிய இறைவன், “எம் ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள குகைக்குச் சென்று தவம் செய்து எம்மை அடைவாயாக” என்று ஆணையிட்டார். அவ்வாறே நமசிவாயரும் மலைமேல் உள்ள சிறு குகைக்குச் சென்று தங்கி, அங்கேயே தவம் புரிய ஆரம்பித்தார். அதனால் அவருக்கு  ‘குகை நமசிவாயர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

குரு நமசிவாயர்

பல ஆண்டுகாலம் தவம் செய்து வந்த குகை நமசிவாயரைத் தேடி சீடர் ஒருவர் வந்தார். அவர் பெயரும் நமசிவாயம்தான். பல ஆண்டுகளாக தனக்கான குருவை சீடர் தேடிக் கொண்டிருந்தார். குகை நமசிவாயரே தனக்கேற்ற குரு என முடிவு செய்த சீடர், அவரைச் சரணடைந்தார். சீடர் நமசிவாயமானார்.

குகை நமசிவாயரும் சீடரைப் பல்வேறு வகைகளில் சோதித்து தமது சீடராக ஏற்றுக் கொண்டார். நாளடைவில் சீடர் ஆன்ம ஞானத்தின் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர் என்பதை அறிந்தார். அதனால் தம் சீடரிடம், “அப்பா, நீ இனிமேல் சீடன் நமசிவாயம் அல்ல. குரு நமசிவாயம்!, ஆன்ம ஞானத்தில் நீ மிக மிக உயர்நிலையை அடைந்து விட்டாய். ஆகவே இனி நீ இங்கே என்னுடன் இருப்பதை விட சிதம்பரம் சென்று அங்கேயே தங்கி சேவைகள் செய்து வருவாயாக!” என்று கூறி ஆசிர்வதித்தார்.

குருவின் சொல்லை ஏற்று குரு நமசிவாயரும் சிதம்பரத்திற்குச் சென்றார். அங்கு தம்மைக் காண வந்தோர் அளித்த பொன்னையும், பொருளையும் கோயிலுக்கே அளித்து அதனை சீர் செய்தார். பல்வேறு திருப்பணிகளை மேற்கொண்டார்.  இறுதியில் திருப்பாற்கடல் குளக்கரை அருகே உள்ள ஓரிடத்தில் குரு நமசிவாயர் மகா சமாதி ஆனார்.

குகை நமசிவாயர் செய்த அற்புதங்கள்

குகை நமசிவாயரை ஆட்டிடையன் ஒருவன் ஒருநாள் அணுகினான். சினையாடான தனது ஆடுகளில் ஒன்று இறந்து விட்டது என்றும், அதன் குட்டிகளையாவது அவர் காப்பாற்றித் தர வேண்டும் என்றும் வேண்டித் தொழுதான். இறந்த சினையாட்டை அங்கேயே விட்டு விட்டு மறுநாள் வந்து தன்னைக் காணுமாறு சொன்னார் குகை நமசிவாயர்.

அவன் மறுநாள் காலை வந்து பார்த்த போது, குட்டிகள் இரண்டு விளையாடிக் கொண்டிருந்ததுடன், அந்தத் தாய் ஆடும் உயிர் பிழைத்திருந்தது. தனது தவ ஆற்றலால் குகை நமசிவாயர் அதனை உயிர்ப்பித்திருந்தார். மகிழ்ச்சியுடன் அவரை வணங்கி விடை பெற்ற ஆட்டிடையன், ஊருக்குச் சென்று நடந்த விவரங்களைக் கூறினான்.

அதை நம்பாத சிலர், ஒரு வாலிபனை நோயாளி போல் கட்டிலில் பொய்யாகப் படுக்கச் செய்து, குகை நமசிவாயரிடம் கூட்டி வந்தனர். “இவன் இறந்து போய் விட்டான். நீங்கள்தான் எழுப்பித் தர வேண்டும்” என்று பொய்மையாக வேண்டி அழுதனர்.

தன் தவ ஆற்றலால் நடந்ததை உணர்ந்த குகை நமசிவாயர், “போனவன் போனவன் தான். இனி உயிர் பிழையான்” என்றார்.

அது கண்டு கொக்கரித்த அக்கும்பல், “நீங்கள் ஒரு போலித் துறவி. இவன் இறக்கவில்லை. நாங்கள் அப்படி நடிக்கச் செய்தோம். இதோ பாருங்கள், இவன் எழுந்திருப்பான்” எனக் கூறி அவனை எழுப்ப முயற்சித்தனர். ஆனால் பயனில்லை. குகை நமசிவாயரின் வாக்குப் பலித்து உண்மையாகவே அவன் இறந்து விட்டிருந்தான். மூடர்கள் அவமானப்பட்டு அவ்விடம் விட்டு அகன்றனர்.

குகை நமசிவாயர் இச்செயல் கண்டு வருந்தினார். அவரது துயரம் ஒரு வசையாக வெளிப்பட்டது.

“கோளர் இருக்குமூர்,கொன்றாலும் கேளாவூர்” என்று தொடங்கிப் பாடியவர், இறுதி வரியாக, “அழியும் ஊர் அண்ணாமலை” என்று பாட வாயெடுக்கு முன் இறைவன் அசரீரியாய், “அடேய், நான் ஒருவன் இங்கிருக்கிறேனடா!” எனக் குரல் கொடுக்க, குகை நமசிவாயர் சினம் தணிந்து, வரியை மாற்றி, 'அழியா ஊர் அண்ணாமலை' என்று பாடி முடித்தார்.

கோளர் இருக்குமூர் கொன்றாலும் கேளாவூர்

காளையரே நின்று கதறுமூர் - நாளும்

பழியே சுமக்குமூர் பாதகரே வாழுமூர்

அழியா ஊர் அண்ணாமலை

- என்பது அந்தப் பாடல்.


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.