under review

தி. சதாசிவ ஐயர்

From Tamil Wiki

தி. சதாசிவ ஐயர் (முகாந்திரம் தி. சதாசிவ ஐயர்) (1882 - நவம்பர் 27, 1950) ஈழத்து தமிழ் தமிழறிஞர், எழுத்தாளர், புலவர். வடமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

தி. சதாசிவ ஐயர் யாழ்ப்பாணம் தெற்கு அளவெட்டியில் பெருமாக்கடவை என்னும் ஊரில் 1882ஆம் ஆண்டு தியாகராஜ ஐயர், செல்லம்மாள் இணையருக்குப் பிறந்தார். கல்கத்தாப் பல்கலைக் கழகத்தின் எஃப்.ஏ.(F.A.) தேர்வில் முதற் பிரிவில் தேறினார்.

ஆசிரியப்பணி

தி. சதாசிவ ஐயர் மல்லாகம் ஆங்கில வித்தியாசாலையிலும் கந்தரோடை ஆங்கில வித்தியாசாலையிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1910ஆம் ஆண்டு தொடக்கம் கல்வித்திணைக்களத்தில் வித்தியாதரிசியாகவும்(Director of Education), 1927இல் தொடக்கம் பகுதி வித்தியாதரிசியாகவும் பணியாற்றினார்.

அமைப்புப்பணி

யாழ்ப்பாணத்தில் 1921இல் தோற்றுவிக்கப்பட்ட ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத்தை நிறுவியதில் முக்கிய பங்காற்றினார். நீண்ட காலம் இதன் செயலாளராக இருந்தார். சங்கம் நடத்திய பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் சோதனைகளில் தேறியவர்களுக்கு பள்ளிகளில் ஆசிரிய நியமனம் கிடைக்க வழி செய்தார். தனது சொந்தச் செலவில் சுன்னாகம் கதிரமலை தேவஸ்தானம் எதிரில் பிராசீன பாடசாலை என்ற பெயரில் பாடசாலை ஒன்றை அமைத்தார். இப்பாடசாலையில் தமிழும் சமஸ்கிருதமும் பயிற்றுவிக்கப்பட்டன. புகழ் மிக்க தமிழறிஞர் வித்துவ சிரோமணி சி. கணேசையர் இப்பாடசாலைக்கு பொறுப்பாக இருந்தார்.

இதழியல்

ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத்தினர் 1942ஆம் ஆண்டில் வெளியிட்ட ”கலாநிதி” என்ற பத்திரிகைக்கு ஆசிரியராகப் பணியாற்றினார். 1945இல் சுவதர்மபோதம் என்ற மும்மாத இதழுக்கு ஆசிரியராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் புலமை பெற்றவர். காளிதாசரின் ”இருது சங்காரம்” என்னும் காப்பியத்தை ”இருது சங்கார காவியம்” என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார். தேவி தோத்திர மஞ்சரி, தேவி மாநச பூசை அந்தாதி ஆகிய நூல்களையும் தமிழில் எழுதினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கும் நாட்டார் பாடல்களைத் தொகுத்து ”வசந்தன் கவித்திரட்டு” என்னும் நூலாக வெளியிட்டார். மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் கொண்ட ஏட்டுப் பிரதிகளை அச்சேற்றி வெளியிட்டார். குழந்தைகளுக்காகப் பிள்ளைப் பாட்டு நூல் வெளிவர உதவினார்.


விருதுகள்

  • இலங்கை அரசு தி. சதாசிவ ஐயருக்கு ”முகாந்திரம்” என்னும் கௌரவ பட்டத்தை அளித்தது.

மறைவு

தி. சதாசிவ ஐயர் நவம்பர் 27, 1950இல் காலமானார்.

நூல் பட்டியல்

  • இருது சங்கார காவியம்
  • தேவி தோத்திர மஞ்சரி
  • தேவி மாநச பூசை அந்தாதி
  • பெருமாக்கடவைப் பிள்ளையார் இரட்டைமணிமாலை
  • தமிழ்மொழிப் பயிற்சியும் தேர்ச்சியும்
வெளியிட்ட நூல்கள்
  • கரவை வேலன் கோவை
  • வசந்தன் கவித்திரட்டு
  • ஐங்குறுநூறு (மூலமும் உரையும்)

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.