இராய கோபுரம் (மதுரை)
திருமலை நாயக்கர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெளியே அமைந்துள்ள ஆவணி மூல வீதியில் கட்டத் தொடங்கிய கோபுரத்தின் பெயர் இராய கோபுரம் எனப்படுக்கிறது. இந்த கோபுரத்தின் முதல் தளம் 18 மீட்டர் உயரமுள்ளது. இந்த கோபுரம் மதுரை கோவில் வளாகத்தில் உள்ள மற்ற கோபுரத்தின் முதல் தளத்தை விட இரண்டு மடங்கு பெரியது. இந்த கோபுரம் கட்டப்பட்டிருந்தால் தென் இந்திய அளவில் மிக பெரிய கோபுரமாக இருந்திருக்கும். இது மீனாட்சி கோவிலின் கிழக்கே ஏழுகடல் வீதி தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது.
கட்டப்பட்ட வரலாறு
திருமலை நாயக்கர் 1654-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி கோவில் வளாகத்தில் உள்ள புது மண்டபத்தை கட்டி முடித்ததும். அதனையும் கோவில் வளாகத்தில் சேர்ந்து கீழ ஆவணி மூல வீதியில் இராய கோபுரத்தை கட்டத் தொடங்கினார். மதுரை நகரத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஊட்டத்தூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 64 சைவ வைணவ தளங்களிலும் கட்ட எண்ணினார்.
எழுபது வயதை கடந்திருந்த திருமலை நாயக்கரின், பலவித உடல் நலமின்மையாலும், மதுரையில் ஏற்பட்டிருந்த பொருளாதார சிக்கலாலும் இராய கோபுரம் கட்டும் பணி நின்றது.
இராய கோபுரத்தின் முதல் தளம் மற்ற கோபுரங்களில் இல்லாத வகையில் பலவித சிற்ப அலங்காரத்துடன் அமையப் பெற்றது. இந்த கோபுரத்தின் அஸ்திவார தூண்கள் ஒரே கல்லால் ஆனது. இந்த கோபுரம் திராவிட கட்டிடப் பாணியில் அமைந்துள்ளது.
கோபுர அமைப்பு
தற்போது கிடைக்கும் இந்த கோபுரத்தின் முதல் தளம் 18 மீட்டர் உயரம் கொண்டது. பூமிக்கு அடியில் பத்து அடி ஆழமும் மேலே முப்பத்தைந்து அடி நீளமும் கொண்டது.
இந்த கோபுரத்தின் நுழைவுவாயில் அருகில் திருமலை நாயக்கரின் ஆளுயர சிற்பமும், அவரது அமைச்சர் சொக்கப்பர் மற்றும் பொன்னையாள் என்ற கோவில் நடனப் பெண்ணின் சிற்பமும் உள்ளன.
பெயர் காரணம்
”ராய” என்றால் தெலுங்கு மொழியில் கல் எனப் பொருள். கல்லாலான கோபுரம் என்பதால் இராய கோபுரம் எனப் பெயர் வந்தது.
கோபுரம் பற்றி
“இந்த கோபுரம் கட்டப்பட்டிருந்தால் இந்தியாவிலிருக்கும் கட்டிடங்களுள் மிகச் சிறந்த ஒன்றாக இருக்கும்” என மதுரை நகர ஆளுநராக இருந்த ஜெ.பி.எல். செனாய் ஐ.ஏ.எஸ் தமது ‘கோவில் நகரம் மதுரை’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.
கட்டப்பட்ட ஆண்டு
இந்த கோபுரத்தை திருமலை நாயக்கர், மதுரை புது மண்டபம் கட்டி முடித்த 1654-ஆம் ஆண்டு கட்டத் தொடங்கினார். அவர் இறந்த 1659-ஆம் ஆண்டு இந்த கோபுரம் கட்டும் பணியும் நின்றது.
உசாத்துணை
- மதுரை நாயக்கர் வரலாறு, அ.கி. பரந்தாமனார்
இணைப்புகள்
✅Finalised Page