under review

சி. விஜயராகவாச்சாரியார்

From Tamil Wiki
Revision as of 17:38, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சி. விஜயராகவாச்சாரியார்
சி. விஜயராகவாச்சாரியார்

சி. விஜயராகவாச்சாரியார் (சேலம் சி. விஜயராகவாச்சாரியார்) (சக்கரவர்த்தி விஜயராகவாச்சாரியார்) (C. Vijayaraghavachariar) (ஜூன் 18, 1852 - ஏப்ரல் 19, 1944) இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, வழக்கறிஞர். தமிழகத்தைச் சேர்ந்த முதல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர். இந்தியாவுக்கான ஸ்வராஜ் அரசியலமைப்பை உருவாக்கியவர்.

பிறப்பு, கல்வி

சி. விஜயராகவாச்சாரியார் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொன் விளைந்த களத்தூரில் சடகோபாசாரியாருக்கும், கனகவள்ளிக்கும் ஜூன் 18, 1852-ல் பிறந்தார். தந்தை ஒரு ஒரு மரபுவழி வைணவ பிராமண குடும்பத்தைச் சேர்ந்த புரோகிதர். விஜயராகவாச்சாரியார் தனது கிராமத்தில் உள்ள வேத பாடசாலைக்கு அனுப்பப்பட்டு, வேதங்களைக் கற்கத் துவங்கினார். பன்னிரண்டு வயதில் சென்னை பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்தார். 1870-ல் மெட்ரிக்குலேஷன் படித்தார். 1875-ல் மெட்ராஸ் பிரசிடென்சி கல்லூரியில் பட்டம் பெற்றார். வழக்கறிஞர் தேர்வை தனிப்பட்ட முறையில் எழுதி தேர்ச்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

சி. விஜயராகவாச்சாரியார் லட்சுமியை மணந்தார். ஒரே மகள் சீதா.

சி. விஜயராகவாச்சாரியார் 1881-ம் ஆண்டு முதல் வழக்கறிஞராகப் பயிற்சி செய்யத் தொடங்கினார். சேலத்தில் வழக்கறிஞர்களின் தலைவராகவும் இருந்தார். வ.உ.சிதம்பரம் பிள்ளை நடத்திய சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இருந்தார்.

ஆசிரியப்பணி

சி. விஜயராகவாச்சாரியார் 1875-ல் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் மங்களூரிலுள்ள அரசுக்கல்லூரிக்கு மாற்றப்பட்டார். மூன்று வருடங்களுக்குப் பிறகு அப்பணியிலிருந்து விலகிக் கொண்டார். சேலம் நகராட்சிக் கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் கணிதவியவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பொறுப்புகள்

  • 1882-ல் சேலம் மாநகர சபை உறுப்பினராக இருந்தார்.
  • 1895-ல் சென்னை மாநிலக் கவுன்சில் உறுப்பினராக இருந்தார்.
  • 1913-ல் மத்திய சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.
  • அகிம்சை முறை எதிர்ப்பு இயக்கத்தின் மெட்ராஸ் கிளையின் இரண்டு துணைத் தலைவர்களில் இவரும் ஒருவர். காந்தி அதன் தலைவராக இருந்தார். மற்ற துணைத் தலைவர் ஜி. கஸ்தூரி ரங்க ஐயங்கார்.
  • 1931-ல் இந்து மகாசபாவின் தலைவராக இருந்தார்.

இந்திய விடுதலைப் போராட்டம்

சேலம் கலவரம்

1882-ல் விஜயராகவாச்சாரியார் சேலத்தில் பயிற்சியை ஆரம்பித்த சிறிது காலத்தில் இந்து-முஸ்லிம் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் விஜயராகவாச்சாரியார் சம்பந்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டார். சேலம் இனக்கலவரத்தில் குற்றவாளியாகக் கருதப்பட்டு பத்து ஆண்டுகள் அந்தமான் தீவுகளுக்கு நாடுகடத்தப்பட்டு சிறைத்தண்டனை பெற்றார். இதனால் தனது நகரமன்றப் பதவியினையும் இழந்தார். சிறையிலிருந்தபடியே தான் குற்றமற்றவர் என வாதாடி விடுதலையானார். சேலம் கலவரத்தில் சிக்கியவர்களுக்கான வழக்குகளை நடத்தினார். அதனால் 'சேலத்தின் ஹீரோ' என்றும் 'தென்னிந்தியாவின் சிங்கம்' என்றும் அழைக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சி

விஜயராகவாச்சாரியார் இந்திய தேசிய காங்கிரஸின் நிறுவனர் ஏ.ஓ.ஹியூமின் நெருங்கிய நண்பர். 1885-ல் இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராக இருந்தார். காங்கிரஸின் பம்பாய் அமர்வில் கலந்து கொண்டார். 1887-ல் இந்திய தேசிய காங்கிரஸின் அரசியலமைப்பை உருவாக்கிய குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். 1895-1901 ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1913-1916 வரை அவர் இணைந்திருந்த இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மகாத்மா காந்தியின் வருகையுடன், காங்கிரஸ் அணிகளில் பழைய மிதவாதிகளுக்கும் புதிய தீவிரவாதிகளுக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. முன்னதாக, மிதவாதிகளின் கருத்துக்கள் அவரை ஈர்க்கவில்லை. காங்கிரஸின் சூரத் பிளவுக்குப் பிறகு அவர் தீவிர கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன்பின் காந்திய சிந்தனைகளை எடுத்துச் செல்வதில் முனைப்புடன் செயல்பட்டார். 1920-ல் நாக்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். அங்கு காந்தியின் ஒத்துழையாமையின் மூலம் பூரண சுதந்திரம் (பூர்ண ஸ்வராஜ்) என்ற கொள்கை விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1929-ல் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த சைமன் கமிஷனுக்கு எதிரான எதிர்ப்பின் முன்னணியில் இருந்தார். இந்திய அரசியலமைப்பை உருவாக்க மோதிலால் நேரு தலைமையில் கூடிய குழுவில் பங்கேற்றார். தென்னிந்தியாவின் காங்கிரஸ் தலைமை சி. ராஜகோபாலாச்சாரிக்கு மாறியபின் மதராஸ் இதழ்களில் பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதன் வழியாக அரசியலில் பங்கேற்றிருந்தார்.

லார்ட் ரிப்பன், லார்ட் கர்சன், லார்ட் மற்றும் லேடி ஹார்டிங் ஆகியோருடன் நட்புறவுடன் இருந்தார்.

அரசியலமைப்புச் சட்டம்

முதல் சுதந்திர இந்திய அரசியலமைப்பு நகலைத் தயாரித்தவர் சி. விஜயராகவாச்சாரியார். மத்திய சட்டமன்றத்தில் லார்டு பிர்கென்ஹெட் (Lord Birkenhead) என்ற ஆங்கிலேய அதிகாரி, 'இந்தியர்களால் ஒர் அரசியல் சாசனம் தயாரிக்க முடியுமா?' என்று ஒரு சவால் விட்டார். அந்த சவாலை ஏற்று, 1927-ல் இந்தியாவிற்கு முதன்முதலாக தனி ஒரு மனிதனாக 'ஸ்வராஜ் அரசியலமைப்புச் சட்டம்' என்ற ஒன்றைத் தயார் செய்து கொடுத்தார்.

இந்து மகா சபை

சி. விஜயராகவாச்சாரியார் இந்து மகாசபாவின் உறுப்பினராகவும் இருந்தார். 1931-ல் மகாராஷ்டிராவின் அகோலாவில் நடைபெற்ற அனைத்திந்திய இந்து மகாசபையின் தலைவராக இருந்தார்.

சமூக வாழ்க்கை

1906-ல் கல்கத்தாவில் காங்கிரஸ் மகாசபை கூட்டம் தாதாபாய் நௌரோஜி தலைமையில் நடைபெற்றபோது விஜயராகவாச்சாரியார் "நிரந்தர நிலச் சீர்திருத்தம் மற்றும் நிலக்குடி உரிமை அமைப்பு முறைகள்" பற்றிய தீர்மானங்கள் கொண்டுவந்து அவற்றை நிறைவேற்றினார்.

பெண்களுக்கு பருவமடைந்த பின்பே திருமணம் செய்யவேண்டும் என வாதிட்டார். மகள்களுக்கு தந்தையின் சொத்தில் பங்கு பெறுவதற்கான உரிமையையும் ஆதரித்தார். இந்து சட்டத்தைப் பற்றிய தேவையான மாற்றத்தை ஆதரித்தார். சுவாமி ஷ்ரத்தானந்தாவுடன் இணைந்து தீண்டாமைக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டார். இங்கிலாந்திலிருந்து செயல்பட்ட தீண்டாமைக்கு எதிரான அமைப்பிற்கு (Anti-Untouchability League) புரவலராக இருந்தார்.

மறைவு

சி. விஜயராகவாச்சாரியார் ஏப்ரல் 19, 1944-ல் காலமானார்.

நினைவு

சி. விஜயராகவாச்சாரியாரின் சேகரிப்புகள் நினைவு நூலகமாக ஆக்கப்பட்டது. சேலத்தில் விரிவுரை மண்டபங்கள் கட்டப்பட்டு அவருடைய பெயரிடப்பட்டது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Oct-2024, 12:51:39 IST