under review

அருண் விஜயராணி

From Tamil Wiki
Revision as of 17:50, 6 September 2022 by Manobharathi (talk | contribs)
அருண் விஜயராணி
அருண் விஜயராணி

அருண் விஜயராணி (1954- ஆம் ஆண்டு மார்ச் 16) இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவர். ஆஸ்திரேலியாவின் முக்கிய பெண் படைப்பாளியாக பல்வேறு துறைகளில் பங்களித்துள்ளார். சிறுகதை, நாடகம், விமர்சனம், வானொலி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் இவர் வழங்கிய தொடர் பங்களிப்பு முக்கியமானது.

தனி வாழ்க்கை

இலங்கையின் வட மாகாணத்தில் உரும்பிராய் என்ற ஊரில், 1954-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் திகதி, செல்லத்துரை - சிவபாக்கியம் இணையருக்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்த விஜயராணி, சிறு பிராயத்திலேயே குடும்பத்தினரோடு தலைநகர் கொழும்புக்குப் புலம்பெயர்ந்தார். இவரது தந்தையார் செல்லத்துரை இலங்கையின் பிரபல ஓவியர். விஜயராணி, கொழும்பில் வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகம் மற்றும் கொழும்பு இந்துக்கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். 1980-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அருணகிரி என்பவரை மணம் செய்துகொண்டு, மத்திய கிழக்கு நாட்டுக்கு புலம்பெயர்ந்தார். பின்னர், லண்டனுக்குச் சென்று சிறிது காலம் வசித்தார். 1989-ல் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து மெல்பேர்னில் வசித்தார். 2015- ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் திகதி காலமானார்.

இலக்கிய வாழ்க்கை

அருண் விஜயராணி 1972-ஆம் ஆண்டில் "இந்து மாணவன்" என்ற பாடசாலை மலரில் "அவன் வரும்வரை" என்ற தனது முதலாவது சிறுகதையை எழுதினார். கொழும்பில் வாழ்ந்த காலப்பகுதியில் இலங்கை வானொலியில் இவரது "விசாலாட்சிப்பாட்டி பேசுகின்றாள்" என்ற நகைச்சுவைத்தொடர் 25 வாரங்கள் ஒலிபரப்பாகியது. அதன்பிறகு, இவரது பெயர் இலங்கைப் படைப்புலகில் பரவலாகத் தெரியத்தொடங்கியது.

1979-ஆம் இல் பெண் எழுத்தாளர்கள் தாமரைச் செல்வி, மண்டூர் அசோகா, தேவமனோகரி விஜேந்திரா, அருண் விஜயராணி, தமிழ் பிரியா ஆகிய ஐவர் சேர்ந்து எழுதிய "நாளைய சூரியன்" - என்ற கதை, கொழும்பிலிருந்து வெளியான "வீரகேசரி" பத்திரிகையின் வார வெளியீட்டில் தொடராக வந்தது. கிராமத்தில் பிறந்து நகரத்துக்கு வருகின்ற இளைஞன், ஹிப்பியாக அலையும் கலாச்சார மோதலுடைய இந்தத் தொடர், அன்றைய காலகட்டத்தில் இலங்கைத் தமிழ் வாசகச் சூழலில் சில எதிர்ப்புகளையும் விமர்சனத்தையும் சந்தித்தது.

1990-ல் தமிழ் புத்தகாலயத்தின் ஊடாக வெளிவந்த அருண் விஜயராணியின் "கன்னிகாதானங்கள்" என்ற சிறுகதைத்தொகுதி, இவரது எழுத்துக்களை பலர் அறிய வழிவகுத்தது. 'கன்னிகாதனங்கள்" தொகுப்பிலுள்ள சில கதைகளை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கனடாவிலுள்ள சியாமளா நவரட்ணம் ஆகியோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்கள்.

சர்ச்சை

"கன்னிகாதானங்கள்" தொகுப்பிலுள்ள 'அவசரம் எனக்கொரு மனைவி வேண்டும்" என்ற தனது கதை 'நளதயமந்தி" திரைப்படத்திற்காகத் திருடப்பட்டுள்ளது என்று அருண் விஜயராணி திரைப்படம் வெளிவந்தபோது வழங்கிய பேட்டி அப்போது வாசகர் மட்டத்தில் சிறு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. வலைப்பூ ஆரம்பித்து பலர் எழுதத் தொடங்கியிருந்த அக்காலத்தில், இந்த விடயம் பரவலாக விவாதிக்கப்பட்டது.

இலக்கிய இடம்

தொண்ணூறுகளில் இலங்கையிலிருந்து இடம்பெற்ற இரண்டாவது புலம்பெயர்வு அலையில் வெளிநாடுகளுக்கு வந்தவர்கள் எழுதத் தொடங்கிய பல கதைகள், புதினங்கள் மற்றும் புனைவுகள் பெரும்பாலானவை நனைவிடை தோய்தலெனும் தங்கள் பிறந்த மண்ணை பிரிந்த துயரப் பிரதிகளாகவே வெளிவந்துகொண்டிருந்தன. அக்காலப்பகுதியில் - 1990-ல் - அருண் விஜயராணி எழுதிய 'கன்னிகாதானங்கள்" சௌகரியமான வாழ்வு என்று வெளிக்காட்டப்பட்ட புலம்பெயர் வாழ்வில், உள் நுழைந்து நொதித்துக்கிடந்த வாழ்க்கைச் சிக்கல்களை புறவயமாகப் பதிவு செய்திருந்தது. பண்பாட்டு - கலாச்சார மோதல்களை ஓரளவுக்கு மேலோட்டமாகப் பேசியிருந்தது.

'கன்னிகாதானங்கள்” நூலில் இடம்பெறுகின்ற 12 கதைகளில் 11 கதைகளும் புலம்பெயர்ந்த வாழ்வை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை. புலம்பெயர்வாழ்வில் பெண்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள், கலாச்சார இடப்பெயர்வின் விளைவுகளினால் தடம்புரளும் தனிமனித வாழ்க்கை முறைகளிலிருந்து பெண்கள் எவ்வாறு தற்துணிவுள்ள முடிவுகளை மேற்கொள்ளவேண்டும், சமுதாய இடுக்குகளில் உணர்வுகளுக்கு மட்டும் இடமளிப்பதன் மூலம் நடைமுறை நீதிகளிடம் தோற்றுப்போவதை எவ்வாறு தவிர்ப்பது போன்ற - இன்னொரு தளத்தில் எழுதப்படுகின்ற - ஆரம்பகால கதைகள் என்று இவற்றை வகைப்படுத்தலாம்.

அருண் விஜயராணியின் எழுத்துக்கள் குறித்து எழுத்தாளர் எஸ்பொ எழுதும்போது - “வளம்  மலிந்த - சுகம் பொலிந்த - வாழ்க்கை இருப்பினும், திருப்தியை மீறிய சினம், சமூகத்தின் அவதிகள் - அவலங்கள் - அணாப்புதல்கள் - அவரோகணங்கள் - சோகங்கள் சோரங்கள் -  பண்புப்பலிகள் -  பாசச் சிதைவுகள்  ஆகிய சிறுமைகள் உள்ளத்தை பிராண்டுகின்ற போதெல்லாம்  எழுத்தாளன் என்பவன் அதர்மங்களுக்கு எதிராக போராடும் உணர்வுக்குள் மசிகின்றான். இது சிலருக்கே கிடைக்கின்ற ஞான யோகம். புகழை போற்றாது, பணத்தை ஆராதிக்காது எழுத்து ஊழியத்தில் ஈடுபடுதல் கர்மயோகம். அந்த வகையில் அனுபவ உண்மைகள் கிளறிய சலனங்களினால் மட்டுமல்ல, தனது அறச்சீற்றங்கள் அனைத்தையும் எதிர்ப்பு அக்கினியில் சுத்திகரித்து தனது எழுத்தூழியத்தை யாகமாக வளர்த்து - அதில் தவப்பயனும் பெற்றுக்கொள்ளும் பயணத்தில் இறங்கி - வெற்றிகண்டவர்  அருண் விஜயராணி” - என்றார்.

அமைப்பு பணிகள்

  • அருண் விஜயராணி ஆஸ்திரேலியாவில் இன்பத்தமிழ் ஒலி, வானமுதம், ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகிய வானொலிகளில் தொடர்ச்சியாக தனது பங்களிப்புக்களையும் மூத்த படைப்பாளியாக ஆலோசனையையும் வழங்கிவந்தவர்.
  • ஆஸ்திரேலிய தமிழர் ஒன்றிய கலாச்சார செயலராகவும் அந்த அமைப்பின் 'ஆஸ்திரேலிய முரசு" இதழின் ஆசிரியராகவும் செயற்பட்டவர்.
  • ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினராகத் தொடர்ந்து இயங்கியவர்.


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.