ப்ரம்மவித்தியா பத்திரிகை
‘ப்ரம்மவித்தியா பத்திரிகை' தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் என இருமொழி வெளியீடாக சிதம்பரத்தில் இருந்து வெளிவந்த இதழ். பொது சகாப்தம் 1886 முதல் வெளியான இவ்விதழின் ஆசிரியர் கு.சீனிவாச சாஸ்திரியார். இந்து சமயம், வைதீக நெறிகள், இந்து மதத் தத்துவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியான இதழ் இது.
பதிப்பு, வெளியீடு
சென்னை மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆர்வமும் சமயப்பற்றும் உள்ள பலர் பல இதழ்களைத் தொடங்கி நடத்தினர். தீவிர மதப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த கிறித்துவ மதத்தினரின் செயல்களைக் கண்டிக்கும் விதமாகவும் அவர்களை விமர்சித்தும் பல இதழ்கள் வெளிவந்தன. அவற்றுள் ஒன்று ப்ரம்ம வித்தியா பத்திரிகை.
இது சிதம்பரத்திலிருந்து பொது சகாப்தம் 1886 முதல் வெளியானது. மாதமிருமுறை இதழான இதன் ஆசிரியர் கு. சீனிவாச சாஸ்திரியார்.
இதழின் தனிப்பிரதி இந்தியாவிற்கு: 3 அணா, 6 நயா பைசா. இலங்கைக்கு: நான்கணா; இதழின் சந்தா மூன்று மாதங்களுக்கு 9 அணா. இலங்கைக்கு 10 அணா; ஆறு மாதங்களுக்கு 1 ரூபாய்; இலங்கைக்கு: 1 ரூபாய், நான்கணா; வருடச் சந்தா: இந்தியா - 1 ரூபாய் 12 அணா; இலங்கை - 2 ரூபாய் நான்கணா - என்று நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பின் இதழின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 18 பக்கங்களுடன் வெளியான இவ்விதழ், பின்னர் 12 பக்கங்களுடன் வெளியானது. சிதம்பரம் ப்ரம்ம வித்தியா அச்சகத்தில் இருந்து இந்த இதழ் வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில் மாத மிருமுறை இதழாகவும் பின்னர் மாத இதழாகவும் வெளியானது. 1889 முதல் மீண்டும் மாதம் இருமுறை இதழாக வெளியாகியிருக்கிறது. இவ்விதழ் எத்தனை ஆண்டுகள் வெளிவந்தது என்ற விவரங்கள் கிடைக்கவில்லை.
உள்ளடக்கம்
இந்து மதம், சமயம் சார்ந்த கொள்கைகள், விளக்கங்கள், தத்துவங்கள், தர்ம சாஸ்திரங்கள் போன்றவை குறித்த செய்திகள், கட்டுரைகள், கடிதங்கள் இவ்விதழில் வெளியாகின. எழுதியவர்களின் பெயர்கள் பெரும்பாலும் குறிப்பிடப்படவில்லை. மாறாக, ஓர் இந்து, ஒரு தமிழன், ஒற்றுமைப்பிரியன் போன்ற பெயர்களில் அவை வெளியாகியுள்ளன. தமிழில் வெளியானவற்றின் சம்ஸ்கிருத மொழிபெயர்ப்பும் அதே இதழில் வெளியாகியுள்ளது. இதழ் இட, வலம் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இடப்பக்கம் சம்ஸ்கிருத மொழியிலும், வலப்பக்கம் அதே செய்தி தமிழிலும் வெளியானது.
பெண்கள் திருமணம் புரிவதற்கான காலம் என்ன, இரண்டாவது திருமணத்தைப் பெண்கள் செய்துகொள்ளலாமா, பெண்கள் கல்வி பயன் தருமா, இவற்றிற்கெல்லாம் தர்ம சாஸ்திரங்கள், ஸ்மிருதிகளில் என்ன விளக்கம் சொல்லப்பட்டுள்ளன என்பது குறித்தெல்லாம் இவ்விதழில் விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. அது குறித்த கட்டுரைகள் வெளியாகியுள்ளன.சிதம்பரம் தலத்தின் பெருமை குறித்த கட்டுரைகளும் வெளியாகியுள்ளன.
சபாபதி செட்டியார் என்பவர் நிர்மாணித்த ‘சித்விலாசினீ’ என்ற சம்ஸ்கிருதப் பாடசாலை பற்றியும், அதில் நீலகண்ட விஜயம், மேகஸந்தேசம், நைடதம், கிராதார்ஜுநீயம் சருக்கம், குமார சம்பவம், குவலயாநந்தம், முராரி நாடகம், சித்தாந்த கௌமதி, பிரதாப ருத்திரீயம், போஜ சம்பு உள்ளிட்ட பல நூல்கள் போதிக்கப்பட்ட விஷயங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.