கோவி. மணிசேகரன்
பொது வாசிப்புக்குரிய படைப்புகள் பலவற்றைத் தந்தவர் கோவி. மணிசேகரன்.(இயற்பெயர்: சுப்பிரமணியன்; பிறப்பு: மே 2, 1927; இறப்பு: நவம்பர் 18, 2021) நூற்றுக்கணக்கான வரலாற்று நாவல்களை எழுதியவர். திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தனது நாவலுக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர்.
பிறப்பு, கல்வி
கோவி. மணிசேகரன், மே 2, 1927 அன்று, வேலூரை அடுத்த சல்லிவன்பேட்டையில், கோவிந்தராசன் - பட்டம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன். குடும்பச் சூழலால் முறையான பள்ளிக் கல்வி இவருக்கு அமையவில்லை. சிலகாலம் அச்சுக்கூட உதவியாளராகப் பணியாற்றினார். பின் வேலூரில் பேராசிரியா் காரழகனாரிடம் தமிழ் பயின்றார். தனித்தேர்வராகத் தேர்வு எழுதி ‘மெட்ரிக்’ தேர்ச்சி பெற்றார். வேலூர் அண்ணல் தங்கோவிடம் இலக்கண, இலக்கியங்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கா்நாடக இசையும், தமிழிசையும் பயின்றாா். ‘சங்கீத பூக்ஷணம்’ பட்டம் பெற்றார். இசை ஆர்வத்தால் சித்தூர் சுப்பிரமணியத்திடம் முறையாக இசை பயின்றார். உடன் பயின்றவர் மதுரை சோமு. ஓய்வு நேரத்தில் சம்ஸ்கிருதமும் பயின்று தேர்ந்தார்.
தனி வாழ்க்கை
1955-ல், சரஸ்வதியுடன் திருமணம் நிகழ்ந்தது. தனக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, இலக்கிய, வரலாற்று ஆர்வத்தால் ஆண்களுக்கு அம்பிகாபதி, மாமல்லன், செல்வக்கண்ணன் என்றும், பெண்களுக்கு பீலிவளை, அம்மங்கை, ஸ்ரீ, சமயபுரி, வானதி என்றும் பெயரிட்டார்.
இலக்கிய வாழ்க்கை
கல்கி மற்றும் டாக்டர் மு.வ.வின் எழுத்துக்கள் கோவி. மணிசேகரனை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக ‘பொன்னியின் செல்வன்’ இவருள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. கல்கியைப் போல சிறந்ததொரு வரலாற்று நாவலை எழுத வேண்டும் என்றும், மு.வ.வைப் போல் சிறந்த சமூக நாவல்களைப் படைக்க வேண்டும் என்றும் ஆர்வம் கொண்டார். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.
கவிதைப் பங்களிப்புகள்
கோவி. மணிசேகரன், இலக்கிய ஆர்வத்தால் தொடக்கத்தில் கவிதைகள் பலவற்றை எழுதினார். இவரது முதல் கவிதை, 1945-ல், ‘தமிழ் நிலம்’ என்ற மாத இதழில் வெளியானது. தொடர்ந்து பல இதழ்களுக்குக் கவிதைகளை எழுதினார். கவிதைகள் மீது கொண்ட ஆர்வத்தால் தனது கவிதைகளைத் தொகுத்து ‘கற்பனாஞ்சலி’ என்னும் பெயரில் கவிதை நூலாக வெளியிட்டார். அதுதான் அச்சில் வெளிவந்த இவரது முதல் நூல்.
நாடகப் பங்களிப்புகள்
அண்ணாவின் மேடைப்பேச்சாலும் நாடகங்களாலும் ஈர்க்கப்பட்ட கோவி. மணிசேகரன், நாடகங்கள் எழுத முற்பட்டார். 1947-ல், ‘எங்கள் நாடு’ என்ற நாளிதழ் மலரில் ‘புரட்சிப் புலவர் அம்பிகாபதி’ என்ற நாடகத்தை எழுதினார். தொடர்ந்து ‘கல்லறை, ‘பேசும் தெய்வம்’ என்ற இரு நாடகங்களுக்குக் கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து, இயக்கி நடித்தார். நாடகத்தில் ஒரு பாத்திரத்தின் பெயர் ‘சேகரன்’ அந்த நாடகம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. அதுவரை ‘சுப்பிரமணியன்’ என்ற பெயரில் எழுதி வந்தவர், தந்தையின் பெயரான கோவி. என்பதை இணைத்துக் கொண்டு ‘கோவி. மணிசேகரன்’ என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.
இதழியல் பங்களிப்புகள்
கோவி. மணிசேகரன், நாளடைவில் நடிப்பிலிருந்து முற்றிலும் விலகி எழுத்துத் துறையில் ஈடுபட்டார். 1954-ல் ‘கலைமன்றம்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அவ்விதழில் தான் கோவி. மணிசேகரnஇன் முதல் வரலாற்று நாவலான ‘அக்கினிக் கோபம்’ வெளியானது. அடுத்து ‘கலை அரங்கம்’ என்ற மாத இதழின் ஆசிரியராகப் பணி புரிந்தார். முருகு மற்றும் மங்களம் போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.