being created

விமலா ரமணி

From Tamil Wiki
Revision as of 13:26, 2 August 2022 by ASN (talk | contribs) (Para Added; Images added)
விமலா ரமணி (இளமையில்) : படம் - நன்றி : ஏ.வி.பாஸ்கர்

பொது வாசிப்புக்குரிய நாவல்களையும் சிறுகதைகளையும் தந்திருப்பவர் விமலா ரமணி (பிறப்பு: பிப்ரவரி 5, 1935) கட்டுரைகள், நாடகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்திருக்கிறார்.

விமலா ரமணி

பிறப்பு, கல்வி

விமலா ரமணி, பிப்ரவரி 5, 1935 அன்று திண்டுக்கல்லில், விஸ்வநாதன் - ராமலக்ஷ்மி இணையருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை பிரிட்டிஷ் அரசாங்கத்தில் காவல்துறை உயர் அதிகாரி. செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்தார் விமலா. கல்லூரியில் படிக்கும் ஆர்வம் இருந்தாலும், திண்டுக்கல்லில் அப்போது கல்லூரிகள் இல்லாததால் அது நிறைவேறவில்லை.

விமலா ரமணி, தனது நேரங்களை வாசிப்பதில் செலவிட்டார். இசை கற்றுக் கொண்டார். ஹிந்தியையும் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார்.

தனி வாழ்க்கை

1955-ல் ரமணியுடன் திருமணம் நிகழ்ந்தது. கணவருடன் கோவைக்குக் குடி பெயர்ந்தார்.

கணவர் ரமணியுடன் விமலா ரமணி

இலக்கிய வாழ்க்கை

சிறு வயதில், தன் வீட்டில் சேகரிப்பில் இருந்த நாவல்களை வாசித்துத் தன் எழுத்தார்வத்தை வளர்த்துக் கொண்டார் விமலா ரமணி.  தந்தையின் சேகரிப்பில் இருந்த ஆங்கில, ஹிந்தி நூல்கள் எழுதும் ஆர்வத்தைத் தந்தன. கணவர் ரமணி, மனைவியின் ஆர்வம் அறிந்து ஊக்குவித்தார். விமலா ரமணியின் முதல் சிறுகதை ‘அமைதி’ கோவையிலிருந்து வெளிவந்த ‘வசந்தம்’ இதழில் வெளியானது. தொடர்ந்து எழுத ஆரம்பித்தார்.

கலைமகளுக்கு இவர் சிறுகதை ஒன்று அனுப்ப, அது, கி.வா.ஜ.வின் பாராட்டுதலுடன் வெளியானது. கல்கி, விகடன், அமுதசுரபி போன்ற இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளியாகின. ‘வாணி’ என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்திய அனுபவமும் விமலா ரமணிக்கு உண்டு.

சிறுகதைகள் மட்டுமில்லாமல் நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் என இவரது எழுத்து முயற்சிகள் தொடர்ந்தன. முதல் நாவல் ‘யாழிசை’ 1967ம் ஆண்டில் வெளியானது. தொடர்ந்து பல நாவல்களை எழுதினார். குமுதம், குங்குமம், சாவி, மாலைமதி, ராணிமுத்து, மோனா, மேகலா, மங்கை, ஓம்சக்தி, வாசுகி, குடும்ப நாவல், பெண்மணி, தினமணி கதிர், தினமலர், மாலை முரசு, வான்மதி எனப் பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. ‘மர்ம மாளிகை’ என்ற தலைப்பில் சிறுவர் நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். வரலாற்று நாவல்கள், துப்பறியும் நாவல்களையும் எழுதியுள்ளார்.

நாடகப் பங்களிப்புகள்

விமலா ரமணிக்கு நாடகங்களின் மீது ஈடுபாடு ஏற்பட்டது. இவர் எழுதிய நாடகங்கள் சில திருச்சி வானொலி நிலையத்தில் ஒலிபரப்பாகின. 1975ல், ‘நவரத்னா’ என்ற அமெச்சூர் நாடகக் குழுவை ஆரம்பித்தார். முதல் நாடகமே ‘Aமாறச் சொன்னது நாNo?’ என்ற தலைப்பில் வித்தியாசமானதாக அமைந்திருந்தது. அதற்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து பல நாடகங்களை பம்பாய், கேரளா என்றெல்லாம் பயணப்பட்டு அரங்கேற்றினார்.

திருச்சி மற்றும் கோவை வானொலி நிலையங்களிலும், சென்னைத் தொலைக்காட்சியிலும் இவரது நாடகங்கள் ஒளிபரப்பாகியுள்ளன. அகில பாரத வானொலி நாடக விழாவின் போது இவரது நாடகமான ‘பகத்சிங்’ சிறந்த நாடகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 14 மொழிகளில் பெயர்க்கப்பட்டு, 1978-ல், ஒரே நேரத்தில் ஒலிபரப்பப்பட்டது

கண்ணே கனியமுதே திரைப்படம் : கதை : விமலா ரமணி
பிற பங்களிப்புகள்

தொலைக்காட்சிக்காக ‘கல்யாணப்பந்தல்’, ‘உறவை தேடிய பறவை’ போன்ற தொடர்களை எழுதியுள்ளார் விமலா ரமணி. குமுதம் இதழ் ஆரம்ப காலத்தில் வெளியிட்ட ‘மலர் மல்லிகை’ இதழுக்குச் சில வருடங்கள் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். இவரது ‘உலா வரும் உறவுகள்’ என்ற நாவல், ‘கண்ணே கனியமுதே’ என்ற தலைப்பில் திரைப்படமாகியுள்ளது. இவரது நாவல்களை ஆராய்ந்து மாணவர்கள் பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்களித்துள்ளார்.

குடும்பம்

விமலா ரமணியின் கணவர் ரமணி 2019-ல் காலமாகிவிட்டார். ஒரே மகள் ரூபாவுடன் வசித்து வருகிறார்.

விழா ஒன்றில் விமலா ரமணி

விருதுகள்

  • கலைமகள், கல்கி, தினமணி கதிர், குங்குமம் போன்ற இதழ்கள் நடத்திய குறுநாவல், சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள்.
  • பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் சிறந்த நாடகத்திற்கான பரிசு.
  • உரத்த சிந்தனை அமைப்பு வழங்கிய ‘எழுத்துச் சுடர்’ பட்டம்.
  • கோவை ரோட்டரி க்ளப்பின் ‘Outstanding novelist’ தேர்வு.
  • புதினப் பேரரசி
  • நாவலரசி
  • மனிதநேய மாண்பாளர்
  • சாதனைப் பெண்மணி
  • சமூக நலத் திலகம்
  • முத்தமிழ் வித்தகி
  • வி.ஜி.பி.விருது

இலக்கிய இடம்

நூல்கள்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.