being created

ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி

From Tamil Wiki
Revision as of 19:59, 21 July 2022 by ASN (talk | contribs) (Para Corrected; image added)
பா. கிருஷ்ணமூர்த்தி - டோரதி கிருஷ்ணமூர்த்தி (இள வயதுப் படம்: நன்றி: தினமணி)

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் நூலகமான ஞானாலயா ஆய்வு நூலகத்தின் நிறுவனர் ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி (பா. கிருஷ்ணமூர்த்தி; பிறப்பு: ஜனவரி 31, 1942). ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர் என பல களங்களில் இயங்கி வருபவர். பழங்காலத்துப் புத்தகங்கள்,  எழுத்தாளர்கள், அச்சகங்கள் பற்றிய பல அரிய தகவல்களை அறிந்தவர். மகாத்மா காந்தி, விவேகானந்தர், பாரதியார், ஏ.கே.செட்டியார் உள்ளிட்ட பலரைப் பற்றி மிக விரிவாகச் சொற்பொழிவாற்றியிருக்கிறார்.

பிறப்பு, கல்வி

கிருஷ்ணமூர்த்தி, கே.வி.பாலசுப்பிரமணியன்- மீனாட்சி இணையருக்கு, ஜனவரி 31, 1942-ல் மகனாகப் பிறந்தார். திருவாரூருக்கு அருகில் உள்ள காவாலக்குடி இவரது சொந்த ஊர். தந்தை கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். அவரது பணிமாறுதல் காரணமாக பெரம்பலூர் உள்ளிட்ட பல இடங்களில் கிருஷ்ணமூர்த்தியின் பள்ளிப்படிப்பு தொடர்ந்தது.  உயர் கல்வியை முடித்ததும், திருச்சி ஜமால் முகம்து கல்லூரியில் இளங்கலை கணிதம் பயின்றார். தமிழார்வத்தால் முதுகலை தமிழ் இலக்கியம் படித்தார். கல்வியியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். மண்ணச்சநல்லூர்  அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி.

புத்தக ஆர்வம்

புத்தகச் சேகரிப்பின் முதல் நூல்

தந்தை  மூலம் கிருஷ்ணமூர்த்திக்குச் சிறு வயதிலேயே புத்தகங்கள் அறிமுகமாகின. ஒரு சமயம் தந்தை கே.வி. பாலசுப்ரமணியன், நூறு புத்தகங்களை கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்து ‘இவற்றை கவனமாகப் பாதுகாத்து வா’ என்று கூறினார். அதில் ஒரு புத்தகம், கிருஷ்ணமூர்த்தியின் தாய்வழித் தாத்தாவான பொன்னுசாமி, 1873ல், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தபோது, பரிசாகக் கிடைத்த ‘Footprints of Famous men’ என்னும் நூல். பொன்னுசாமி கையெழுத்திட்டிருந்த ‘தனிப்பாடல் திரட்டு’ என்ற நூலும் அந்தச் சேகரிப்பில் இருந்தது. அது எழுத்தாளர் கு. அழகிரிசாமி வெகுநாட்களாய்த் தேடிக் கொண்டிருந்த புத்தகம் என்பதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி வியப்புற்றார். அதுவே பழைய புத்தகங்களின் மீதான கிருஷ்ணமூர்த்தியின் காதலுக்கும் தேடலுக்கும் வழி வகுத்தது.

தனி வாழ்க்கை

கிருஷ்ணமூர்த்தி,  மண்ணச்சநல்லூர்  அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றியபோது உடன் பணியாற்றியவர் டோரதி. அவர் தாவரவியல் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ் இருவரையும் இணைத்தது. இருவரும் இலக்கியப் பணிகளில் இணைந்து பயணித்தனர். ஒரு சமயம் காரைக்குடியில் ‘ஸ்டார் பப்ளிஷிங்’ மற்றும் 'ப்ராக்ரசிவ்' பதிப்பகத்தின் உரிமையாளரான வி.ஆர்.எம். செட்டியாரை இருவரும் சந்தித்தனர். அவர் இருவரையும் வாழ்க்கையிலும் இணையச் சொன்னார். இந்துவான கிருஷ்ணமூர்த்தியும், கிறிஸ்தவரான டோரதி சாமிக்கண்ணுவும் 1971-ல் திருமணம் செய்துகொண்டனர். டோரதிக்கும் இலக்கியம் மற்றும் புத்தகச் சேகரிப்பில் ஆர்வம் இருந்தது. கணவரின் புத்தகச் சேகரிப்பு முயற்சிக்கு அவரும் உறுதுணையாக இருந்தார்.

கிருஷ்ணமூர்த்தி - டோரதி இணையருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் நிவேதிதா பாரதி மருத்துவர். இரண்டாவது மகள் ஞானதீபம் இலண்டனில் எம்பிஏ பட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர். இருவருமே புத்தக ஆர்வலர்கள். பெற்றோரின் புத்தகச் சேகரிப்புப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தனர்.

புத்தகச் சேகரிப்பு முயற்சிகள்

பழைய புத்தகக் கடைகள், தனியார் இல்லங்களில் உள்ள நூல்கள், தனி நபர்களின் சேகரிப்பு என கிருஷ்ணமூர்த்தியின் புத்தகத் தேடல் விரிந்தது.  பல இடங்களுக்கும் பயணித்துப் புத்தகங்களைச் சேகரித்தார்.  புத்தகங்களைச் சேகரிப்பது மட்டுமில்லாமல் பத்திரிகைகளின் சேகரிப்பிலும் தனித்த கவனம் செலுத்தினார். பாரதியின் சுதேச கீதங்கள், உ.வே.சா.வின் மணிமேகலை போன்றவற்றின் முதல் பதிப்பில் இடம்பெற்ற பல விஷயங்கள் அதற்குப் பிறகு வந்த பதிப்புகளில் இல்லை என்பதை அறிந்தார். அது முதல் முதற் பதிப்பைச் சேர்ப்பது, அவை வெளியான மூல நாளிதழ்கள், வார, மாத இதழ்களைச் சேர்ப்பது என்பதில் தீவிர கவனம் செலுத்தினார்.

மனைவி டோரதியும் கணவரது முயற்சிகளுக்கு உதவியாக இருந்தார். இருவரது ஊதியப் பணத்தைப் பெரும்பாலும், பழைய இதழ்கள், அரிய நூல்கள் வாங்குவதற்கே செலவிட்டனர்.

மீனாட்சி நூலகம்

தான் சேகரித்த புத்தகங்களை தன் தாயார் ‘மீனாட்சி’யின் நினைவாக, ‘மீனாட்சி நூலகம்’ என்ற பெயரில் சில ஆண்டு காலம் நடத்தி வந்தார் கிருஷ்ணமூர்த்தி. அது வாடகை நூல் நிலையத்தின் பெயர் போல இருப்பதாக நண்பர்கள் சொல்லவும், மனைவி டோரதியின் ஆலோசனைப்படி, 1987-ல், ‘ஞானாலயா’ என்று பெயர் மாற்றம் செய்தார்.

இதழ்கள் சேகரிப்பு

குமரி மலர் ஆசிரியரும், காந்தி பற்றிய குறும் படத்தை எடுத்தவருமான ஏ.கே. செட்டியார், பா. கிருஷ்ணமூர்த்தியின் முயற்சிகளை அறிந்து ஊக்குவித்தார். பல இதழ்கள், புத்தகங்கள் கிருஷ்ணமூர்த்திக்குக் கிடைக்க அவர் வழிகாட்டியதுடன், தன்னிடம் இருந்த சேகரிப்பையும் அவர் கிருஷ்ணமூர்த்திக்கு அளித்தார்.

புத்தகச் சேகரிப்புகளின்போது அலைச்சல்களையும் ஏமாற்றத்தையும் எதிர்கொண்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி . செட்டிநாட்டுப் பகுதியில் நாள் முழுக்க, காலை முதல் மாலை வரை காத்திருந்து வெறும் கையுடன் திரும்பிய அனுபவமும் இவருக்கு உண்டு. மிகுந்த பொறுமையுடனும், அர்ப்பணிப்புடனும், சலிப்பில்லாமல் இவர்கள் சேகரித்தவைதான், இன்றைக்கு ஒன்றரை லட்சம் நூல்களாக ஞானாலயாவில் காட்சி அளிக்கின்றன.

ஞானாலயா ஆய்வு நூலகம்

ஞானாலயா ஆய்வு நூலகம்

சேகரிப்பட்ட லட்சக்கணக்கான புத்தகங்களை தனியாக ஒரு நூலகம் போன்று, அதற்கென்று தனிக்கட்டிடத்தில் உருவாக்கினால் அது பலருக்கும் பயன்படுமே என நினைத்தார் கிருஷ்ணமூர்த்தி. அவரும் அவர் மனைவி டோரதியும்  இணைந்து,  தாங்கள் ஓய்வு பெற்றபோது கிடைத்த பணி ஓய்வுப் பலன் தொகையான 11 லட்ச ரூபாயைக் கொண்டு நூலகத்திற்கென்று தனியான ஒரு கட்டிடத்தை உருவாக்கினர். அதுவே ‘ஞானாலயா ஆய்வு நூலகம்’ என்று இயங்கி வருகிறது.

ஞானாலயா ஆய்வு நூலகத்தின் சிறப்புகள்

பல அரிய நூல்கள் இங்கு சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.  1578ல் தமிழில் அச்சான முதல் நூலான ‘தம்பிரான் வணக்கம்’ நூலின் நகல் இங்குள்ளது. தமிழ்-லத்தீன்-பிரெஞ்சு அகராதி, லத்தீன் -தமிழ் அகராதி இங்கு இருக்கிறது. பாரதியால் சாற்றுக்கவி வழங்கப்பட்ட ‘வருணசிந்தாமணி’ நூல் இங்குள்ளது. ஆர்.கே. சண்முகம் செட்டியார், சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்திற்கு எழுதிய அரிய உரை நூல் இங்குள்ளது. முறையூர் ஜமீன்  சண்முகம் செட்டியார் முதன் முதலில் வெளியிட்ட ‘தனிச்செய்யுட் சிந்தாமணி’ நூல் இங்குள்ளது.  எஸ்.எஸ். வாசன் வெளியிட்ட ‘நாரதர்’ இதழின் பிரதிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. பூதூர் வைத்தியநாத ஐயர் நடத்தி வந்த ஆனந்த விகடன், எஸ்.எஸ். வாசனின் பொறுப்பில் வெளியான ஆனந்த விகடன், பூதூர் வைத்தியநாத ஐயர் மீண்டும் புதிதாக உருவாக்கி நடத்திய ஆனந்த விஜய விகடன் போன்ற நூல்கள் இங்கு சேகரிப்பில் உள்ளன. பாண்டித்துரைத் தேவரால் தொகுக்கப்பட்ட பன்னூற்றிரட்டு நூல் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளது.  அரிய கடிதங்கள், அரிய இலக்கிய நூல்கள் இங்கு பாதுகாக்கப்பட் வருகின்றன. அக்காலத்தில் ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்ட நூல்கள் சிலவும் இங்கு உள்ளன.

மாதவையாவின் பஞ்சாமிர்தம், வ.வே.சு.ஐயர் நடத்திய பாலபாரதி, குகப்ரியை ஆசிரியையாக இருந்த மங்கை, சுதேசமித்திரன், விவேகபோதினி, கலைமகள், சக்தி, மஞ்சரி, சங்கு, சுதந்திரச் சங்கு, ஊழியன், தன வைசிய ஊழியன், குமரன், குடியரசு, விடுதலை, தமிழரசு, செங்கோல், தாமரை, சரஸ்வதி இதழ் தொகுப்புகள், ஜம்புநாதன் தமிழாக்கிய வேதத் தொகுப்புகள் என அந்தக்காலதில் வெளியான நூல்கள், இதழ்கள் இங்குள்ளன.

தனது நூலகத்தில் உள்ள ஒவ்வொரு நூலைப் பற்றியும், அதன் முதல் பதிப்பு, அது வெளியான இதழ் அல்லது அச்சகம்,  வெளியிட்டவர்கள் பற்றிய குறிப்பு எனப் பல தகவல்களை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி விளக்குவது இந்த நூலகத்தின் தனிச் சிறப்பு என்று சொல்லலாம்.











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.