க. செல்லையா அண்ணாவியார்

From Tamil Wiki

க. செல்லையா அண்ணாவியார் ஈழத்து கூத்துக் கலைஞர். மரபு வழிக்கூத்துக்களிலும், புதிய வகை கூத்துக்களிலும் தீவிரமாக ஈடுபட்ட மிகச்சில அண்ணாவிமார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை மட்டகளப்பில் வந்தாறுமூலையிலுள்ள கழுவன்கேணி கிராமத்தில் பிறந்தார். வந்தாறுமூலை செல்லையா அண்ணாவியார் என்று அழைக்கப்பட்டார். கிழக்குமாகாணக் கலாச்சார அமைச்சகம் நலிந்த முதுபெரும் கலைஞர்களுக்கு மாதம் 2000 அளித்து உதவியது. தொடர்ச்சியாக வராத அப்பணத்தை தன் இறுதி காலங்களில் நம்பியிருந்தார்.

கலை வாழ்க்கை

இளவயதிலிருந்தே கலை மீது ஆர்வம் கொண்டிருந்தார். இசை நாடகங்களில் ஆர்வம் உடையவராஉ இருந்தார். 1920, 30களில் இந்தியாவிலிருந்து இலங்கை வந்த இசை நாடகக் கம்பெனிகள் சங்கரதாஸ் சுவாமிகள் பாணியிலமைந்த பாடல்கள் நிரம்பிய நாடகங்கள், பார்ஸி நாடக முறையில் அமைந்ததும் வசனமும் இசையும் கலந்த நாடகங்கள் என இரு வகை. மட்டக்களப்பு பட்டினத்திலிருந்த வெல்ஹாசிம் ஹாலில்(இம்பீரியல் தியேட்டர்) நடைபெற்ற இந்த இருவகைப் பாணி நாடகங்களால் செல்லையா கவரப்பட்டு இந்த நாடகக் கம்பெனியின் வாயிலாக நாடகம் படின்றார். சிறுவயதில் அல்லி அர்ஜுனா, பவளக்கொடி, பிப்ரவாகன் நாடகங்களில் சகாதேவனாகவும், பாலகன் புலேந்திரனாகவும் பாடி நடித்தார். 1930களில் சினிமா வந்தபிறகு இந்தவகை இசை நாடகங்கள் வழ்க்கொழிந்தபிறாகு செல்லையா மரபுக்கூத்துகளில் கவனம் செலுத்தினார்.

தன் பதினெட்டாவது வயதில் வடமோடிக் கூத்தாக்களான ”புரூருவச் சக்கரவர்த்தி”, “சுபத்திரை கலியாணம்” கூத்துக்களினால் கவரப்பட்டு கூத்தில் முழுமையாக ஈடுபட்டார். வ்டமோடிக்கூத்தில் காணப்பட்ட விறுவிறுப்பான ஆட்டம், வீச்சான பாடல்கள், அலங்காரம் ஆகியவற்றினால் கவரப்பட்டு அதில் ஈடுபட்டார். தன் வாழ்நாளில் இருபதுக்கும் மேற்பட்ட கூத்துக்களை பழக்கியுள்ளார். மட்டக்களப்பின் வடக்கே தம்பன்கடவை, முத்தகல், கண்டக்காடு, கருப்பளை ஆகிய இடங்களிலும் மட்டக்களப்பில் ஓட்டமாவடி, முறக்கட்டான்சேனை, நாவலடி, மோர்சாப்பிட்டி, ஆரையம்பதி, தன்னாமுனை, பெரியகல்லாறு, புதுக்குடியிருப்பு அகிய இடங்கலிலும் கூத்து பழக்கினார். 1947-60 வரை முழு நீளக்கூத்து பழக்குவதில் ஈடுபட்டிருந்தார். 1958களுக்குப் பிறகு பல்கலைக்கழகங்களிலும், பாடசாலைகளிலும் கூத்து பழக்குவதில் ஈடுபட்டார். 1960-66 களில் பேராசிரியர் வித்தியானந்தனுடன் இணைந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கூத்து பழக்கினார். முதன்முதலில் பெண்களுக்கு கூத்து பழக்கிய அனுபவம் பெற்றார். கொழும்பு றோயல் கல்லூரித் தமிழ்மாணவர்களுக்கு கூத்து பழக்கினார். 1972-80 வரை மட்டக்களப்பில் வின்சன் கல்லூரியின் உப அதிகாரியான வின்சன் திரவியம் ராமச்சந்திரனுடன் இணைந்து கூத்து வேலைகளில் ஈடுபட்டார். உத்தம பரதன், செஞ்சோற்றுக் கடன் தீர்த்த செம்மல் ஆகிய இரண்டு நாடகங்களை பெண்களை மட்டுமே கொண்டு அரங்கேற்றினார். சங்காரம் கூத்துரு நாடகம் போன்றவைகளில் மத்தளம் வாசிக்கும் அண்ணாவியராக இருந்தார்.

சீடர்கள்
  • செல்வராஜா அண்ணாவியார்
  • நாவலடி கந்தசாமி
  • சண்முகம் பங்குடா வெளி பேபி

விருதுகள்

  • 1993இல் இலங்கையின் கலைஞர் பெறும் அதி உயரிய விருதான ”லங்காதிலக” விருதை ஜனாதிபதி கையிலிருந்து பெற்றார்.
  • 2002இல் மண்முனைக் கலாச்சாரப்பேரவை மட்டக்களப்பு கல்லடியிலிருந்த விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனம் பாராட்டு விழா நடத்தினர்.
  • 2008இல் கிழக்குப் பல்கலைக்கழகம் அவருக்கு ”தலைக்கோல் விருது” அளித்தது.

அரங்கேற்றிய கூத்துகள்

  • கர்ணன் போர் (1960)
  • வாளபீமன் நாடகம் (1969)
  • தருமபுத்திர நாடகம்(1970)
  • சுபத்திரை கலியாணம்
  • பசுபதாஸ்திரம்
  • நொண்டி நாடகம்
  • ராவணசேனன்
  • வாலி வதை

உசாத்துணை