under review

ஏரம்பையர்

From Tamil Wiki
Revision as of 15:44, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)

To read the article in English: Erampaiyar. ‎


ஏரம்பையர் (பிப்ரவரி 29, 1847 - ஜனவரி 8, 1914) தமிழ் புலவர், சைவ அறிஞர், ஆசிரியர் ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் சைவ சொற்பொழிவாளர். சைவ சமய விதிகள் சார்ந்த நூலகள் எழுதியும், சைவப் பிரசங்கங்கள் பல செய்தும் சைவ சமயத்திற்கு தொண்டாற்றியுள்ளார்.

பிறப்பு, கல்வி

ஏரம்பரையர் 1847-ல் யாழ்ப்பாணம் மாதகலில் சுப்ரமணிய சாஸ்திரியாருக்கு மகனாகப் பிறந்தார். அந்தணர் மரபினர். தந்தையிடம் ஆரம்பக் கல்வியையும் தமிழ், வடமொழியையும் கற்றார்.

ஏரம்பரையர் யாழ்ப்பாணம் வேலுப்பிள்ளை, சம்பந்த புலவர், சங்கரபண்டிதர் ஆகிய மூவரிடமும் தமிழிலக்கியம், இலக்கணங்கள், சித்தாந்த நூல்கள், சமஸ்கிருத நூல்களை கற்றார். ஆறுமுக நாவலரின் நண்பர்.

சைவப்பணி

சித்தாந்த சாத்திரத்தில் திறமை மிக்கவராக இருந்தார். இவர் கீரிமலையில் த. கைலாசபிள்ளை ஆரம்பித்த சைவ வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழும் சமஸ்கிருதமும் மாணவர்களுக்குக் கற்பித்தார். நிர்வாண தீட்சை பெற்றவர். வண்ணார்பண்ணையில் தொடங்கப்பெற்ற சைவபரிபாலன சபைக்கு சைவப் பிரசாகராகவும் ஆறுமுக நாவலர் வண்ணையில் நிறுவிய தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராகவும் விளங்கினார். இவர் சைவப் பிரசங்கங்களை ஊர்கள் தோறும் செய்தார்.தனிப்பாடல்கள் பல எழுதியுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

கணித நூலில் வல்லவர். சேட்டு புராணத்தை உரை நடையில் எழுதியவர். இவர் சிரார்த்த விதி, கனா நூல் சூரனுடைய முற்பிறப்பின் சரித்திரம் நாகேஸ்வரி தோத்திரம், குவாலாலம்பூர் சிவபெருமானூஞ்சல் கவனாவத்தை வைரவர் ஊஞ்சல் மாதகல் பிள்ளையார் ஊஞ்சல், காளிக்கதிரேசர் ஊஞ்சல், நகுலாசால புராணம் ஆகிய நூல்களை இயற்றினார். பல தனிப் பாடல்களையும் நூல்களுக்குச் சிறப்புப் பாயிரமும் பாடினார்.

நீதிசாரம் என்னும் நூலினை வட மொழியிலிருந்து தமிழாக்கம் செய்தார். வடமொழி நூல்களையும், நீதி சாஸ்திர நூல்களையும் தமிழ் மொழியில் மொழிபெயர்த்தார்.

மறைவு

ஜனவரி 8, 1914-ல் ஏரம்பையர் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

நூல்கள் பட்டியல்

ஊசல்
  • காளிக் கதிரேசர் ஊஞ்சல்
  • கவணாவத்தை வைரவர் ஊஞ்சல்
  • குவாலாலம்பூர் சிவபெருமான் ஊஞ்சல்
  • மாதகற் பிள்ளையார் ஊஞ்சல்
தோத்திரம்
  • நாகேசுவரி தோத்திரம்
நீதி
  • நீதிசாரம்
புராணம்
வினாவிடை
  • ஆசௌச வினாவிடை (1912)
விதி
  • சிரார்த்த விதி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:30:56 IST