நீலாவதி ராமசுப்பிரமணியம்

From Tamil Wiki
Revision as of 11:30, 4 June 2022 by Ramya (talk | contribs)

நீலாவதி ராமசுப்பிரமணியம் (ஜனவரி 23, 1913 - பிப்ரவரி 22, 1982) தமிழின் தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு பின்னாளில் காங்கிரஸில் இணைந்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். களச்செயல்பாட்டாளர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சொற்பொழிவாற்றினார். சமூக சேவகர்.

வாழ்க்கைக் குறிப்பு

நீலாவதி திருச்சியில் ஜனவரி 23, 1913-ல் பிறந்தார். தாய் மொழி தெலுங்கு. தமிழ், ஆங்கிலம் பயின்றார். தந்தை எஸ்.ஏ.கே. கலியபெருமாள் சீர்த்திருத்தவாதி. பெரியார் மற்றும் நீதிக்கட்சி சார்ந்தவர்களிடம் நட்பு கொண்டவர்.

நீலாவதியின் சொற்பொழிவுகளைக் கேட்டும், கட்டுரைகளைப் பார்த்தும் வியந்த ராமசுப்பிரமணியம், இவரை அக்டோபர் 5, 1930-ல் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் பெரியார் - நாகம்மை முன்னிலையில் திருச்சியில் நடைபெற்றது. ராமசுப்பிரமணியம் சொ.முருகப்பா அவர்களின் 'குமரன்' இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவ்விணையரது மகளான மணிகுமாரி அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிந்தார். அவர் 1961-ல், தன் இளம் வயதில் திடீரெனக் காலமானார். அது நீலாவதிக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் தந்தது. அது முதல் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் துறவி போல் வாழ்ந்தார்.

அரசியல் வாழ்க்கை

தந்தையின் வழி நீலாவதிக்கும் இளம் வயதிலேயே சுயமரியாதை இயக்கத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஈ.வெ.ரா. பெரியாரின் கொள்கைகளை மிகத் தீவிரமாகப் பின்பற்றினார். 'புரட்சிகரமான பெண்ணியவாதி' எனப் பெரியாரால் போற்றப்பட்டார். பகுத்தறிவுக் கருத்துக்கள் இவரைக் கவர்ந்தன. பகுத்தறிவு, பெண்களின் கல்வி மற்றும் விடுதலை குறித்தும் குடியரசு, திராவிடன், குமரன் போன்ற சுயமரியாதை இயக்க இதழ்களுக்கு எழுத ஆரம்பித்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கலப்பு மணம், மாதர் மறுமணம், சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை, பெண் கல்வியின் முக்கியத்துவம் போன்றவற்றைப் பிரச்சாரம் செய்தார்.

தமிழகம் வந்த காந்தியடிகளைச் சந்தித்தது முதல் ஆடம்பர உடைகளையும், நகைகளையும் துறந்து, கதர் மட்டுமே அணிய ஆரம்பித்தார். நாளடைவில் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். காங்கிரஸ் இயக்கத்தின் சார்பாக 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். சில மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டார். இந்திய விடுதலைக்குப் பின் சமூக சேவைகளில் தீவிரமாக ஈடுபட்டார். ஆர்.எஸ். சுப்பலக்ஷ்மி அம்மாள், எஸ்.அம்புஜம் அம்மாள் மற்றும் சென்னை மாதர் சங்கத்தினருடன் இணைந்து பல நற்பணிகளை முன்னெடுத்தார்.

பதவிகள்
  • தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கத்தின் சென்னை மாகாண மாதர் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
  • தமிழிசைச் சங்கத் தலைவராக பணிபுரிந்திருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

இளம் வயதுத் திருமணம் பற்றி, அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகள் பற்றி 'மாதர் மறுமணம்' இதழில் இடம் பெற்ற சிறுகதைகளில் நீலாவதியின் 'சமூகக் கண்ணாடி'-ம் ஒன்று. இவர் எழுதிய கட்டுரைகளும், இவரது சொற்பொழிவுகளும் தொகுக்கப்பட்டுக் குடியரசு இதழில் வெளியாகியுள்ளன. குமரன், ஊழியன், புரட்சி, திராவிடன் போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.

டி.கே.சி. மூலம் இலக்கிய ஆர்வம் வந்தது. கம்பன் விழாக்கள் பலவற்றில் கலந்துகொண்டார். 'ராமகிருஷ்ண விஜயம்' இதழுக்குப் பல இலக்கியக் கட்டுரைகளை எழுதினார். 'ராஜ்யலக்ஷ்மி' என்ற மாதர் இதழின் ஆசிரியராகவும் நான்காண்டுகள் பொறுப்பு வகித்தார். இவர் தனது இல்லத்தில் நடத்திய ‘இலக்கியப் பண்ணை' சொற்பொழிவுகள் அக்காலத்தில் மிகப் பிரசித்தம். ராஜாஜி, திரு.வி.க, கல்கி, டி.கே.சி, பி.ஸ்ரீ. ஆச்சார்யா, ரா.பி. சேதுப்பிள்ளை, எஸ்.வையாபுரிப் பிள்ளை, கி.வா.ஜகந்நாதன், சா . கணேசன், வெ.ப. சுப்பிரமணிய முதலியார், பேராசிரியர் அ.சீனிவாசராகவன், டாக்டர் மு.வரதராசன், தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் உள்ளிட்ட பலர் அதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியுள்ளனர்.

மறைவு

  • பிப்ரவரி 22, 1982 ல் , தனது 70 ம் வயதில் இவர் காலமானார் .

உசாத்துணை

  • “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)”; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.