first review completed

தெணியான்

From Tamil Wiki
Revision as of 19:25, 25 May 2022 by Logamadevi (talk | contribs)
Theniyaan1.jpg

தெணியான் (ஆகஸ்ட் 6, 1942 - மே 2, 2022) ஈழ தமிழ் எழுத்தாளர். இலங்கை முற்போக்கு இலக்கியத்தில் முக்கியமானவர்களுள் ஒருவர்.

பிறப்பு, கல்வி

Theniyaan.jpg

தெணியான் ஆகஸ்ட் 6, 1942 அன்று யாழ்ப்பாணத்து வடமராச்சியில் உள்ள பொலிகண்டில் கந்தையா, சின்னம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் கந்தையா நடேசன். பொலிகண்டில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவருபவர்களை ‘தெணியார்’ என்றழைப்பர். தெணியான் அதனையே தன் புனைப்பெயராக்கிக் கொண்டார்.

தனது கல்வியை கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியில் பயின்றார்.

தனி வாழ்க்கை

Theniyaan2.jpg

தெணியானின் மனைவி பெயர் மரகதம். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள்.

தெணியான் அவர் பயின்ற கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். கரவெட்டி ஸ்ரீ நாரதவித்தியாலயம் அரச பாடசாலையாக அங்கீகாரம் பெற்றபோது அதன் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். பின் கல்வித்துறையில் பகுதித்தலைவர், கனிஸ்ட அதிபர்,உப அதிபர்,தொலைக்கல்விப் போதனாசிரியர் போன்ற பதவிகளை வகித்து 2002- ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

பொது வாழ்க்கை

Theniyaan3.jpg

மேடைப்பேச்சில் சிறந்த விளங்கிய தெணியான் சிறு வயதிலேயே மார்க்சிய கோட்பாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுள் கால உறுப்பினராக இருந்தார். இலங்கைமுற்போக்கு எழுத்தாளர் சங்கம்  இயங்கிய  காலத்தில் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளையின் செயலாளர் பொறுப்பினை வகித்தார். சிறுபான்மைத்தமிழர் மகாசபையில் இணைந்து சாதிய ஏற்றத் தாழ்வுக்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்தார்.

இலக்கிய வாழ்க்கை

Theniyaan4.jpg

தெணியானின் முதல் சிறுகதை ‘பிணைப்பு' 1964-ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து வெளிவந்த ’விவேகி’ இதழில் பிரசுரமாகியது. அதனைத் தொடர்ந்து மல்லிகை, ஞானம், யாழ், முரசொலி, வீரகேசரி, தினக்குரல் போன்ற பல இதழ்களில் எழுதினார்.

இவரது எழுத்துக்கள் யாழ்ப்பாணத்து வடமராட்சி மக்களின் வாழ்வியலை, இன்ப துன்பங்களைப் பற்றி பேசுபவை. மொத்தம் எட்டு நாவல்களும், இரண்டு குறுநாவல்களும், நூற்றியம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘தவறிப்போனவன்’ கதை என்ற தலைப்பிலான ஆக்கம் நூலுருப் பெறவில்லை. இலங்கை வானொலிக்காக பல நாடகங்கள் எழுதினார். பேராசிரியர் க. சிவத்தம்பி, மல்லிகை ஜீவா ஆகியோர் பற்றியும் விரிவான நூல்களை எழுதினார். கனடாவில் வாழும் தெணியானின் தம்பி க. நவம் நவரதினம் நடத்திய நான்காவது பரிமாணம் இதழ் சார்பில் வெளியான ’மரக்கொக்கு’ நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தெணியானி நினைவு நூலாக, ‘நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பியும்’, ‘இன்னும் சொல்லாதவை வாழ்வனுபவங்கள்’ என்ற தன்வரலாற்று நூலையும் எழுதினார்.

தெணியான் நூல்03.jpg
வாழ்க்கை வரலாற்று நூல் பற்றி

இதனை மதுரை எழுத்துப் பதிப்பகம் ஈழத்து நூல் வரிசையில் நாலாவதாக வெளியிட்டது. இதனைப் பற்றி எழுத்துப் பிரசுரம் வே. அலெக்ஸ் குறிப்பிடும் போது, ‘ஒரு எழுத்தாளனது புனைவுலகைத் தரிசித்து அதில் லயித்துக் கிடக்கும் வாசகனுக்கு அந்த எழுத்தாளனது சொந்த வாழ்வைப் பற்றிய இரகசியங்களை அறிந்து கொள்ளும் போது அந்த எழுத்தாளனைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் மனக்கோட்டை உடைந்து சிதறுவதே இயல்பு. இதனால்தானோ என்னவோ பல பிரபலங்கள் தங்களது குடும்பம், சுற்றம், நட்பு இவற்றின் மீது வெளிச்சம் படாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றனர். இந்நிலைக்கு மாற்றாக தெணியானின் வாழ்வனுபவங்களைப் படிக்கும் போது அவர் மீதான மதிப்பு பல மடங்கு கூடுகிறது. அவருடனான நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது” என்றார்.

மறைவு

தெணியான் தன் 80-வது வயதில் மே 22, 2022-ல் வடமராட்சி கரவெட்டி கரணவாயில் உள்ள தன் இல்லத்தில் மறைந்தார்.

நன்றி நீலம் இதழ்

விருதுகள்

  • தெணியானின் வாழ்நாள் இலக்கியப்பணிக்காக இலங்கை அரசு ‘சாகித்யரத்னா’ விருது வழங்கியது (2013)
  • வடக்கு மாகாண ‘ஆளுனர் விருது’ (2008)
  • இலங்கை இந்து கலாசார அமைச்சு ’கலாபூஷணம்’ விருது(2003)
  • இவரது ‘கழுகுகள்’ நாவல் ‘தகவம்’ பரிசையும், ’மரக்கொக்கு’ நாவல் இலங்கைஅரசினதும்,வடகிழக்கு மாகாண சபையினதும் சாகித்திய விருதுகளையும், ’காத்திருப்பு’ நாவல் வடகிழக்கு மாகாண சபையின் பரிசையும், ‘கானலின் மான்’ நாவல் இலங்கை அரசின் சாகித்திய விருதையும், ‘குடிமைகள்‘ நாவல்  இலங்கை அரசின் சாகித்தியவிருதையும், ‘சிதைவுகள்’ குறு நாவல் தேசிய கலை இலக்கியப்பேரவை பரிசையும், சுபமங்களா பரிசையும், சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதையும், ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ சிறுகதைத்தொகுதி கொடகே விருதையும் பெற்றன.

நூல்கள்

நாவல்கள்
  • விடிவை நோக்கி (1973)
  • கழுகுகள் (1987)
  • பொற் சிறையில் வாழும் புனிதர்கள் (1989)
  • மரக்கொக்கு (1994)
  • கானலின் மான் (2002)
  • தவறிப் போனவன் கதை (2010)
  • குடிமைகள் (2013)
  • அல்வாய் (2013)
குறுநாவல்கள்
  • சிதைவுகள் (2003, மீரா பதிப்பகம், கொழும்பு)
  • பனையின் நிழல் (2006)
சிறுகதைத் தொகுப்புகள்
  • சொத்து (1984)
  • மாத்து வேட்டி (1990)
  • இன்னொரு புதிய கோணம்
  • ஒடுக்கப்பட்டவர்கள்
  • தெணியானின் ஜீவநதிச் சிறுகதைகள் (2013)
கட்டுரைத் தொகுப்புகள்
  • இன்னும் சொல்லாதவை
  • நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பி

நினைவு மலர்கள்

  • 2003-ஆம் ஆண்டில் நடந்த மணிவிழாவில் பல இலக்கிய ஆளுமைகள் இவர் பற்றி எழுதியிருக்கும் மணிவிழா சிறப்பு நூலை எழுத்தாளர் கொற்றை கிருஷ்ணானந்தன் தொகுத்து வெளியிட்டார்.
  • தெணியானின் இலக்கிய ஆற்றல்களை மதிப்பீடு செய்யும் ’தெணியானின் படைப்புகள் மீதான பார்வை’ - ’தெணியானின் ஜீவநதிச்சிறுகதைகள்’ ஆகியனவற்றை யாழ். ஜீவநதி கடந்த 2013-ல் தெணியானின் பிறந்த தினத்திலேயே விழா எடுத்து வெளியிட்டனர்.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.