under review

64 சிவவடிவங்கள்: 43-அகோர அத்திர மூர்த்தி

From Tamil Wiki
Revision as of 16:02, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அகோர அத்திர மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று அகோர அத்திர மூர்த்தி.

வடிவம்

64 சிவ வடிவங்களில் நாற்பத்தி மூன்றாவது மூர்த்தம் அகோர அத்திர மூர்த்தி. அகோர அஸ்திரத்தினால் சத்ததந்து என்பவனின் வேள்வியை அழித்து, அவனைக் கொன்ற சிவபெருமானின் வடிவமே அகோர அத்திர மூர்த்தி.

தொன்மம்

சத்ததந்து என்னும் மன்னன் சிவனருளால் பல வரங்களைப் பெற்று தனக்கு நிகர் எவருமில்லை என ஆணவத்துடனும் வாழ்ந்து வந்தான். சிவனருளால் தான் அனைத்தும் தனக்குக் கிடைத்தன என்பதை மறந்து சிவபெருமானை அழைக்காமல் பிரம்மன் முதலிய தேவர்களை அழைத்து யாகத்தை நடத்தத் தீர்மானித்தான்.

பிரம்மா, சத்ததந்துவிடம் சென்று, "சிவபெருமானை வணங்கித்தான் நீ குறைவில்லா செல்வத்தையும் எல்லா வளத்தையும் பெற்றாய். தட்சன் என்பவன் இதுபோல் சிவபெருமானை அழைக்காமல் யாகம் நடத்தி அதனால் பெரும் துன்பத்திற்கு ஆளானான். ஆகவே நீயும் அதே தவறை செய்யாதே. அவரை கண்டிப்பாக அழைக்க வேண்டும்" என்று அறிவுரை கூறினார். ஆனால், ஆணவம் கொண்டிருந்த சத்ததந்து மிகுந்த கோபம் கொண்டு தனக்கு புத்திமதி கூறியவர்களைத் தண்டித்தான்.

அவன் தண்டனைகளுக்குப் பயந்து தேவர்களும் முனிவர்களும் யாகத்தைச் செய்யத் தொடங்கினர்.

இச்செய்தியை நாரதர் மூலம் அறிந்த சிவபெருமான் சீற்றமுற்றார். உடன் மண்டலத்தைத் தேராக்கி, உலகைச் சக்கரமாக்கி, அக்னியை வில்லாக்கி, சந்திரனை நாணாக்கி, வருணனை பாணமாக்கி, முருகனைத் தேரோட்டுபவனாக்கி, போர்க் கருவிகளுடன் தன்னருகில் இருந்த வீரபத்திரரை அழைத்து சத்ததந்துவை அழித்து வரும்படி உத்தரவிட்டார்.

அவ்வாறே வீரபத்திரர் யாகம் நடைபெறும் இடத்தை அடைந்தார். தனது வர்ண அஸ்திரத்தால் வேள்வியை அழித்தார். எதிர்த்து வந்த சத்ததந்துவை அகோர அஸ்திரத்தினால் கொன்றார். பின் சிவபெருமானிடம் ஐக்கியமானார். அகோர அஸ்திரத்தினால் சத்ததந்து வேள்வியை அழித்துக் கொன்ற சிவபெருமானின் வடிவமே அகோர அத்திர மூர்த்தி எனப் பெயர் பெற்றது.

வழிபாடு

அகோர அத்திர வீரபத்திரர் திருவெண்காட்டில் காட்சி அளிக்கிறார். மாசிமாத கிருஷ்ணபட்ச ஞாயிறு இரவு 12 மணிக்கு இவர் தோன்றினார் என்பது ஐதீகம். ஒவ்வொரு ஆண்டும் இதே நேரத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் அகோர பூஜை நடைபெறுகிறது. அகோர அத்திர வீரபத்திரருக்கு வில்வம் அல்லது செவ்வரளி அர்ச்சனை செய்து, பால் நைவேத்தியம் அளித்து திங்கள், பிரதோஷம் அன்று வழிபட பகைவர் ஒழிவர்; நீண்டகால வழக்குகள் முடிவுறும்.;தம்பதியருடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Oct-2024, 18:02:49 IST